1. என்ன? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசியக் கூட்டணி அரசு நாட்டை எதிரிகளிடம் அடகு வைத்ததா? ஆச்சர்யமாய் இருக்கிறதே!

Gulf of mannarஆம். கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது ஆட்சியாளராக இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசியக் கூட்டணி நமது நாட்டிற்கு இராணுவ ரீதியில் மிகப் பெரிய ஆபத்துகளை உருவாக்கியிருக்கிறது.

நமது தெற்கு எல்லையை - அதாவது தமிழ்நாட்டு எல்லையை - அது சீனா மற்றும் பாகிஸ்தானுக்குக் கடந்த ஐந்து வருடங்களில் முழுமையாகத் தாரை வார்த்து விட்டிருக்கிறது. இதனால், இராணுவ ரீதியில் பிரச்சினைகள் அற்ற பகுதி என்று இதுவரை அறியப் பட்டிருந்த தென் இந்தியப் பகுதி, தற்சமயம் எதிரி நாடுகளின் இராணுவங்களால் தாக்கப்படும் தூரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் கைங்கரியத்தை காங்கிரஸ் கூட்டணி அரசே முன் நின்று செய்திருக்கிறது.

இது போதாதென்று, நம் நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நாடுகளின் நிறுவனங்களுக்குத் திறந்து விடும் போக்கில் பல எதிரி நாடுகளின் இராணுவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் நிறுவனங்களை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அது நாட்டில் தொழில் தொடங்க அனுமதித்திருக்கிறது. இதனால் நம் ஒவ்வொருவரின் குடும்பம் மற்றும் வேலை போன்ற செய்திகளையும் இந்த நிறுவனங்கள் திரட்டத் தொடங்கியிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பிற்காக செயல்படும் RAW மற்றும் IB போன்ற நிறுவனங்கள் அரசின் இந்தப் போக்கை எதிர்த்திருக்கின்றன. இருப்பினும், காங்கிரஸ் கூட்டணி அரசு எதையும் கண்டு கொள்ளவே இல்லை.

2. ஏப்ரல் 24, 2009 ஆம் தேதியன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதளுக்கு இது குறித்து பேட்டி அளித்திருக்கிறாரே... அந்தப் பேட்டியில் "இலங்கை என்ற குழம்பிய குட்டையில் சீனா மீன் பிடித்துக் கொண்டிருக்கிறது. அங்கு தெளிவான ஒரு செயல்திட்டத்துடன் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சீனா போட்டுக்கொண்டிருக்கும் கணக்குகளை நம் திட்டக் கொள்கைகள் (policies) கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கின்றன" என்று கூறியிருக்கிறாரே?

இந்தக் கடைசி நேரத்திலாவது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சீனா தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர் ஒப்புக்கொண்டாரே... அதற்காக அவருக்கு நாம் நன்றி சொல்லுவோம். ஆனாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசியக் கூட்டணி அரசின் 'திட்டக் கொள்கைகள்' சீனாவின் இலங்கை நடவடிக்கைகளைக் கணக்கில் கொண்டிருக்கின்றன என்று அவர் கூறியிருப்பது அப்பட்டமான பொய். ஏனெனில் காங்கிரஸ் அரசு இந்த விசயத்தில் எவ்வளவு அசிரத்தையாக இருந்துள்ளது என்பதையே எங்கள் "முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்" வெளியிட்டுள்ள "சீனாவின் முற்றுகையில் இந்தியா" என்ற புத்தகம் தக்க ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது.

3. உங்கள் பதில் பொத்தாம் பொதுவாக உள்ளது. உங்கள் புத்தகத்திலிருந்து சிதம்பரத்தின் கூற்று பொய்யானது என்பதை நிறுவும் குறிப்பான எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியுமா?

முடியும். தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள எல்லையை கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வாறு எதிரி நாடுகளின் கைகளில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்படைத்திருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை முதலில் பார்ப்போம்.

சேதுக் கால்வாய் திட்டம் தமிழர்களின் கனவுத் திட்டம் என்று தி.மு.க. கூறியது. அதன் கூற்றை காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்றுக்கொண்டது. 2005 ஜூலை 2 ஆம் தேதியன்று அந்தத் திட்டத்திற்கான பணிகள் துவங்கின.

நம் கப்பற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல்கள் நாட்டின் மேற்குத் துறைமுகங்களில் இருந்து கிழக்குத் துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இலங்கையை சுற்றித்தான் இன்று போக வேண்டியிருக்கிறது. 1971 ஆம் ஆண்டில் வங்காள தேசத்துக்கான போரின் போது இலங்கை அரசு நமக்கு சாதகமாக செயல்படவில்லை. பாகிஸ்தானுக்கு சாதகமாகவே அது நடந்து கொண்டது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், நம் போர்க் கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்வதென்பது ஆபத்து மிகுந்த செயலாகக் கருதப் பட்டது. எனவேதான் சேதுக் கால்வாய் தோண்டப் பட்டால், அது நம் போர்க் கப்பல்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் திட்டமாக அமையும் என்று இராணுவ ஆலோசகர்கள் கூறினர்.

2005 ஆகஸ்டு மாதம் இலங்கை அதிபர் சந்திரிகாவை சீன அரசு தம் நாட்டிற்கு வருமாறு அழைத்தது. ஆகஸ்டு 28 ஆம் தேதியில் இருந்து ஐந்து நாட்கள் அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் முடிவில் இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை அவர் வெளியிட்டார்.

சேதுக் கால்வாயின் தெற்கு துழைவாயிலுக்குத் தென்கிழக்கு திசையில் சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் நோரோச்சோலை என்ற இலங்கை கிராமம் உள்ளது. இது புத்தளம் நகருக்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியில் மின்சாரம் தயாரிப்பதற்கான அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்திருந்தது. அந்த மின் நிலையத்தை அமைக்கும் பணியினை இந்திய அரசின் நிறுவனமான "தேசிய அனல் மின் கழக்த்துக்குக்" (National Thermal Power Corporation) கொடுப்பதாக அது அறிவித்திருந்தது. ஆனால் 2005 ஆகஸ்டு சீனப் பயணத்திற்குப் பிறகு இலங்கை அதிபர் அந்த முடிவை மாற்றியிருப்பதாக அறிவித்தார். மின்நிலையப் பணிகளை சீனாவிற்குக் கொடுக்கவிருப்பதாக அறிவித்தார். மின் நிலைத்திற்கான பணிகளில் சீனர்கள் ஈடுபட்டால் சேதுக் கால்வாயை அவர்களால் எளிதில் கண்காணிக்க முடியும். இருப்பினும், அந்த முடிவை மாற்ற காங்கிரஸ் கூட்டணி அரசு எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

2006 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே மேலும் ஒரு அதிர்ச்சிமிக்க செய்தியை வெளியிட்டார். சேதுக் கால்வாயின் தெற்கு நுழைவாயிலுக்குத் தென்கிழக்கிலும், நோரோச்சோலைக்கு வடமேற்கிலும் உள்ள Pearl 1 என்ற கடல் பகுதியை சீனாவுக்கு அளிப்பதாக அவர் அறிவித்தார். இப்பகுதிக் கடலின் தரையில் பெட்ரோல் மற்றும் எரிவாயு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக சீனாவுக்கு இந்தப் பகுதி வழங்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தப் பகுதி சேதுக்கால்வாயின் தெற்கு நுழைவாயிலில் இருந்து 20 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ள பகுதியாகும். இந்தப் பகுதியில் இருந்துகொண்டு சேதுக் கால்வாயில் உள்ள இராணுவ மற்றும் வர்த்தகக் கப்பல்களின் நடமாட்டத்தை சீன நிறுவனங்களால் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்த முடியும்.

இராணுவ ரீதியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசால் எடுக்கப்பட்ட மிக மோசமான நடவடிக்கை இது என்றாலும் கூட, என்ன காரணத்தாலோ காங்கிரஸ் கூட்டணி அரசு ராஜபக்சே அரசிடம் இதனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கண்டறிவதற்காக இலங்கை அரசு உலக அளவிலான டெண்டரை வெளியிட்டது. இந்தப் பணியை எடுக்க இந்திய அரசின் நிறுவனமான ONGC போட்டியிட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முதலாளி ஒருவருக்கு சொந்தமான, இந்தியாவில் இருந்து இயங்கும் தனியார் நிறுவனமான Cairn India என்ற நிறுவனத்திற்கே கடைசியில் ஒப்பந்தம் அளிக்கப் பட்டது. ONGC நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைத்திருந்தால் நோரோச்சோலையிலும், Pearl 1 கடல் பகுதியிலும்உள்ள சீன நிறுவனங்களை அருகில் இருந்தே இந்திய உளவு நிறுவனங்கள் கண்காணிப்பதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. ONGC-க்கு இந்த ஒப்பந்தம் கிடைக்க காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2009 ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து 4 ஆம் தேதிவரை மத்திய கிழக்கு நாடான கட்டார் நாட்டின் வெளி உறவு அமைச்சரும், அந்த நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களும் இலங்கை வந்து சென்றனர். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் தொழில் தொடங்க அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர். மேலும், தமிழ் நாட்டின் ராமநாதபுர மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பாக் வளைகுடாக் கடல் பகுதியில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் பணிகளில் ஈடுபட அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர். இந்தப் பகுதிகளை கட்டாருக்குக் கொடுக்க இலங்கை அரசும் இசைந்துள்ளதாகத் தெரிகிறது. கட்டாருக்கு இந்தப் பகுதிகள் கொடுக்கப்பட்டால் அவை பாகிஸ்தானுக்குக் கொடுக்கப் பட்டதாகவே நாம் கருத வேண்டும். ஏனெனில் கட்டார் பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்ட ஒரு நாடாகும். இதை எதிர்த்தும் என்ன காரணத்தினாலோ, இந்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் இன்றுவரை எடுக்கவில்லை.

2009 ஏப்ரல் 8 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதிவரை இலங்கை அதிபர் லிபியா நாட்டிற்குச் சென்றிருந்தார். இலங்கையுடன் சீரான உறவு இல்லாத அந்த நாடு, ராஜபக்சேவின் பயணத்திற்குப் பிறகு இலங்கைக்கு உடனடியாக 50 கோடி டாலரை உதவியாக அளிப்பதாக அறிவித்தது அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்குவதாக இருந்தது. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை நகரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி, திருகோணமலையையும், கொழும்புவையும் இணைக்கும் சாலையின் ஒரு பகுதியை அமைக்கும் பணியை லிபிய நிறுவனங்களுக்கு அளிப்பதாக ராஜபக்சே அறிவித்தார். கட்டார் நாட்டு முதலாளிகளைப் போலவே லிபிய நாட்டு முதலாளிகளும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டாரைப் போலவே பாக் வளைகுடாவில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் பணியிலும் ஈடுபட லிபிய நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இலங்கை அரசும் அவற்றை லிபிய அரசுக்குக் கொடுக்க ஆர்வம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்துடன் மிகவும் நெருங்கியத் தொடர்பு கொண்ட நாடே லிபியா. 1971 ஆம் ஆண்டில் நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு பாகிஸ்தானின் மறு சீரமைப்புக்கு லிபியாவே பெரிய அளவில் உதவியது. மேலும், 1974 ஆம் ஆண்டில் அணு குண்டை உருவாக்குவதற்கு பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் உள்ளதுஎன்று கூறிய நாடே லிபியா. வெறும் முழக்கத்தோடு மட்டும் அது நிற்கவில்லை. மாறாக, அணு ஆயுதத்தை உருவாக்குவதற்குத் தேவையான யுரேனியம் தாதுவை தன் அண்டை நாடான நைஜர் நாட்டிலிருந்து வாங்கி பாகிஸ்தானுக்கு அது கொடுக்கவும் செய்தது.

எனவேதான் இலங்கையிலும், அதன் மேற்குக் கடல் பகுதியிலும் லிபியாவுக்கு இடம் கொடுப்பதென்பது பாகிஸ்தான் இராணுவத்திற்குக் கொடுப்பதாகவே நாம் கருதவேண்டும். பாக் வளைகுடாவில் லிபியா மற்றும் கட்டாருக்கு வழங்கப்படவிருக்கும் பகுதிகள் சேதுக் கால்வாயில் இருந்து வெறும் 10 கிலோமிட்டர் தூரத்திற்குள்தான் உள்ளது என்பதை இங்கு நாம் மனதில் கொள்ளல் அவசியம். இதைத் தடுக்கவும் காங்கிரஸ் கூட்டணி அரசு எந்தவொரு நடவடிக்கையையும் இன்னும் எடுக்கவில்லை. எனவேதான் இந்தியாவின் தமிழ்நாட்டின் எல்லையில் இதுவரை இலங்கையே அண்டை நாடாக இருந்ததற்குப் பதிலாக இனி வரவிருக்கும் கலகட்டத்தில் சீனாவும், லிபியாவும், கட்டாரும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உருவாகும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

1951 ஆம் ஆண்டில் பண்டித ஜவகர்லால் நேரு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது எப்படி இந்தியாவின் இறையாண்மைக்கு இன்றளவும் ஒரு ஆபத்தாக இருக்கிறதோ அதைப் போன்றதொரு சூழ்நிலை இன்று இந்தியாவின் தெற்கு எல்லையில் உருவாயிருக்கிறது. இந்த சூழ்நிலையைப் போக்க காங்கிரஸ் கூட்டணி அரசு இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

4. சரி. இந்தியாவின் தெற்கு எல்லையில் எதிரி நாடுகள் இலங்கை அரசின் உதவியுடன் காலூன்றத் தொடங்கியுள்ளன என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்தீர்கள். இவை தவிர வேறு ஆதாரங்கள் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கண்டறியும் போர்வையில் எதிரி நாடுகள் நம் தென் எல்லையில் வந்திறங்கியிருப்பதைப் போலவே, இலங்கையில் தொழில் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டும் அவர்கள் வந்திறங்கியிருக்கிறார்கள். அப்படி இறங்கிய சில நிறுவனங்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரடியான அச்சுறுத்தலையும் விடுத்திருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் மலேசியாவின் மிகப் பெரும் பணக்காரரான ஆனந்த கிருஷ்ணன் என்பவரின் நிறுவனமான Global Telecommunications Holdings (GTH) நிறுவனம். ஆனந்த கிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள ஏர்செல் நிறுவனத்தில் 74% பங்குகளையும், SUN DTH நிறுவனத்தில் 20% பங்குகளையும், SUN FM -இல் 7% பங்குகளையும் வைத்திருக்கிறார். ஆனந்த கிருஷ்ணன் சீன உளவுத்துறையின் கையாள் என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் எமது இயக்கமான "முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்" வெளியிட்டுள்ள நூலான "சீனாவின் முற்றுகையில் இந்தியா" என்ற நூலில் விரிவாகப் பார்க்க முடியும்.

இலங்கை அரசின் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் நாட்டின் NTT நிறுவனம் 35% பங்குகளை வைத்திருந்தது. இந்தப் பங்குகளை ஆனந்தகிருஷ்ணனின் GTH நிறுவனத்திற்குக் கைமாற்றும் பணியில் ராஜபக்சே கடுமையான முயற்சிகளில் 2007 துவக்கத்தில் இறங்கினார். இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூர்யராச்சி மர்மமான முறையில் சாலை விபத்தில் 2008 பிப்ரவரியில் கொல்லப்பட்டார். 2008 ஏப்ரல்1 ஆம் தேதியன்று NTT நிறுவனத்தின் பங்குகள் GTH நிறுவனத்திற்கு வெற்றிகரமாகக் கைமாற்றப்பட்டன.

நமது அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் ஸ்ரீலங்கா டெலிகாமுடன் இணைந்து 2005-2006 ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடியையும் கொழும்புவையும் இணைக்கும் சுமார் 324 கிலோமீட்டர் நீளமுள்ள கடலடித் தகவல் தொடர்புக் கேபிள் ஒன்றை சுமார் 180 கோடி ரூபாய் செலவில் நிறுவியது. இந்தக் கேபிளின் வழியாகத்தான் BSNL நிறுவனத்தின் பயனீட்டாளர்களால் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பும் தகவல்கள் யாவும் வெளியேறுகின்றன.

BSNL cableஇந்தக் கேபிளைத் தனது கையாளான ஆனந்தகிருஷ்ணனின் நிறுவனத்திற்குக் கீழ் கொண்டு வந்திருப்பதன் மூலம் BSNL நிறுவனத்திலிருந்து சர்வதேச நாடுகளுக்கு அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தையும் சீன உளவுத் துறையால் கண்காணித்துப் பதிவு செய்ய முடியும்.

இதைத் தடுக்கவும் காங்கிரஸ் கூட்டணி அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சீன நிறுவனங்களின் நடமாட்டம் இலங்கையில் வெகுவாகக் கூடியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்திய நிறுவனங்களைக் கொண்டே இலங்கைக்குள் சீன உளவு நிறுவனமான MSS உடன் தொடர்பு கொண்ட நிறுவனங்களை அழைத்து வந்திருப்பதுதான்.

ஹூவாவெய் என்பது சீனாவின் முன்னணித் தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பு நிறுவனமாகும். அந்த நிறுவனம் இந்தியாவில் பெங்களூரில் 1999 ஆம் ஆண்டிலிருந்து தன் அலுவலகத்தைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் சீன உளவு நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனமென்றுு இந்திய உளவு நிறுவனங்கள் 2001 ஆம் ஆண்டில் அறிவித்தன. உலகமயமாதல் காய்ச்சலில் இந்தியா உச்சபட்சமாக பீடிக்கப்பட்டிருந்த காலம் அது என்ற காரணத்தால் அந்த நிறுவனத்தை நாட்டிலிருந்து வெளியேற்றுவது எளிதான காரியமாக இருக்கவில்லை. இருப்பினும், அன்றைய உள்துறை அமைச்சரான எல்.கே.அத்வானி அந்த நிறுவனத்திற்குக் கடும் எச்சரிக்கையை விடுத்தார்.

2006 ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் ஏர்டெல் நிறுவனம் இலங்கையில் தன் சேவையைத் துவங்க முடிவு செய்தது. 2007 ஏப்ரலில் அதற்கு ராஜபக்சே அனுமதி அளித்தார். 2007 செப்டம்பரில் இலங்கை முழுதும் தனக்கான தகவல் தொலைதொடர்புக் கட்டமைப்பை நிறுவுவதற்கான 750 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை [எந்த நிறுவனம் சீன உளவுத்துறையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது என்று இந்திய உளவுத் துறையால் 2001 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டதோ அதே] ஹுவாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் அளித்தது.

ஏர்டெல்லின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டும் காணாததுமாக விட்டுவிட்டது. தாலிபான் தீவிரவாதிகளுக்கு இன்றுவரை உதவிவரும் சீன உளவுத்துறையின் நீட்டிப்பாக செயல்பட்டுவரும் ஹுவாவெய் நிறுவனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் அளித்ததைத் தடுத்து நிறுத்தாத காங்கிரஸ் அரசுதான் எல்.கே.அத்வானியை தாலிபான் தீவிரவாதிகளுக்கு 1999 ஆம் ஆண்டில் துணை போனார் என்று கூச்சமே இல்லாமல் இன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.

ஏர்டெல்லை காங்கிரஸ் கூட்டணி அரசு கண்டிக்காததன் காரணத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள் இலங்கை முழுதும் பரந்து நிறைந்திருப்பர். இதோடு மட்டும் சீனாவின் ஊடுருவல் நிற்கப்போவதில்லை. தென் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கட்டமைப்புப் பணிகள் ராஜபக்சே அரசினால் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துறைமுகம் சீனக் கப்பற்படையின் கேந்திரமாக செயல்படப் போகிறது என்று மேற்குலக உளவு நிறுவனங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நட்பு நாடுகளான லிபியா, கட்டார் மற்றும் ஈரானுக்கு ராஜபக்சே அரசு பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களைக் கொடுத்துள்ளது. அவை அனைத்தையும் நடை முறையில் செயல்படுத்தப் போவது சீனாவின் பொறியாளர்களே. பல நூறு கிலோமீட்டர் வீச்சுள்ள JY113D என்ற சீன ராடார் கருவியை இலங்கை அரசு 2007 ஆம் ஆண்டில் இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி வாங்கியது. கொழும்பிற்கு அருகில் உள்ள மிரிகாமா நகரில் வைக்கப்பட்டிருக்கும் அந்த ராடாரை இயக்குவது சீனப் பொறியாளர்களே. தமிழக்த்தின் தென்கோடியிலிருந்து மேலெழும் அனைத்து விமானங்களையும் இந்த ராடரால் கண்காணிக்க முடியும். இவை எதையும் காங்கிரஸ் கூட்டணி அரசு தடுக்கவில்லை.

இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக ராஜபக்சே அரசு செயல்படுகின்றது என்று தெரிந்த பின்னரும் கூட அந்த அரசுக்கு அனைத்து இராணுவ உதவிகளை காங்கிரஸ் அரசு வழங்கி வருவதுதான் காங்கிரஸ் கூட்டணி தேசத் துரோகத்தில் ஈடுபடும் ஒரு கூட்டணியோ என்ற ஒரு சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாகக் கொழும்புத் துறைமுகத்தைக் கைப்பற்றும் பணியில் சீன நிறுவனங்கள் இறங்கியிருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு ராஜபக்சே அரசு உதவி செய்து வ்ருகிறது. கொழும்புத் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளில் சுமார் 70% இந்தியாவில் இருந்து செல்லும் சரக்குகளே என்பதை இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்திய சரக்குகளை இனி சீன நிறுவனங்களின் கண்காணிப்பில் அனுப்ப வேண்டிய சூழ்நிலை உருவாகவிருக்கிறது.

இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்துகிறேன் என்று வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசால் இதையும் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவேதான், காங்கிரஸ் கூட்டணி அரசு யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்ற சந்தேகம் எழும்பியிருக்கிறது. எதிரி நாடுகளின் நிறுவனங்களுக்கே காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியிருக்கிறது என்பதையே சமீப காலத்தின் ஆதாரங்கள் உறுதி செய்வதாக உள்ளன.

5. இலங்கை என்பது சுதந்திரமான ஒரு நாடு. அந்த நாட்டின் அரசுதான் எந்தத் திட்டத்தை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்க முடியும். நீங்கள் சொல்வது போல எல்லாவற்றையும் இந்தியாவிற்குத்தான் கொடுக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இலங்கையின் கட்டமைப்புத் திட்டங்களை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது எம் வாதமல்ல. மாறாக, கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இலங்கையின் கட்டமைப்புத் திட்டங்கள் யாவும் இந்தியாவின் இராணுவ எதிரிகளிடம் ஏன் ஒப்படைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி. இவை தற்செயலான ஒன்றாக இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் மகிந்த ராஜபக்சேவே 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீனாவுக்குப் பயணமானபோது சீனாவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தம் நாடு அனைத்து விதங்களிலும் முன்னுரிமை கொடுக்கும் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். அதையே அவரது அரசு நடைமுறைப் படுத்தியும் வருகிறது.

அதை ராஜபக்சே நடைமுறைப்படுத்துவதில்கூட பிரச்சினை இல்லை. காங்கிரஸ் கூட்டணியினால் ஆன இந்திய அரசு ஏன் அதை எதிர்க்க்கவில்லை என்பதே நம் முன் இருக்கும் மிகப் பெரும் கேள்வி. 2002 ஆம் ஆண்டில் இதே போன்ற பிரச்சினையை வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி அரசு எவ்வாறு கையாண்டது என்பதை இங்கு நாம் நினைவு கொள்ளல் அவசியம்.

2002 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் பிரதமராக இருந்தார். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலம் அது. அந்த ஆண்டில் அவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்திற்குப் பிறகு, இலங்கையின் சில்லரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தையும் SINOPEC என்ற சீன அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்கப் போவதாக அவரது அரசு அறிவித்தது.

இதை வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.அரசு கடுமையாக எதிர்த்தது. எதிர்த்ததோடு நிற்காமல் திருகோணமலையில் உள்ள 99 எண்ணைக் கலன்களைத் தனக்கு அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை அது நிர்ப்பந்தித்தது. சில்லரை விற்பனை மையங்களை தனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. முடிவில் பா.ஜ.க. கூட்டணியின் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது. 100-க்கும் அதிகமான பெட்ரோல் சில்லரை விற்பனை மையங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டன. திருகோணமலையின் எண்ணைக் கலன்களையும் அந்த நிறுவனத்திடமே இலங்கை அரசு ஒப்படைத்தது. SINOPEC நிறுவனம் இலங்கை அரசால் முற்றிலும் ஒதுக்கப் பட்டது.

இலங்கை அரசை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு பா.ஜ.க-வின் முன்னுதாரணம் இருந்தும் கூட ராஜபக்சேவின் அரசை இந்தியாவின் இராணுவ எதிரிகளோடு கூட்டு சேர காங்கிரஸ் கூட்டணி அனுமதித்தது ஏன்?

6. இலங்கையைப் பொருத்தவரை காங்கிரஸ் கூட்டணி அரசினால் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்ற உங்களின் வாதம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே உள்ளது. இந்தியாவிற்குள்ளேயே அந்நிய உளவு நிறுவனங்களை காங்கிரஸ் கூட்டணி அரசு அனுமதித்துள்ளது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அதற்கான ஆதாரங்களைத் தர முடியுமா?

2005 ஆம் ஆண்டின் இறுதியில் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் ஆனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் அப்போல்லோ மருத்துவமனை ரெட்டி குடும்பத்துடன் சேர்ந்து தனதாக்கிக் கொண்டது. முன்னதாக 2004 ஆம் ஆண்டில் ஆனந்த கிருஷ்ணனின் நிறுவனமான ஆஸ்ட்ரோ தமிழ்நாட்டின் சன் நெட்வொர்க் நிறுவனத்துடன் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏர்செல் நிறுவனத்தைக் கையகப் படுத்திய உடனேயே அந்த நிறுவனம் எடுத்த முதல் முடிவு தன் சேவையை உள்நாட்டுப் பிரச்சினைகள் நிறைந்த, சீன இராணுவத்துடன் 1950-களிலிருந்தே தொடர்புகொண்ட வட கிழக்கு மாநிலங்களுக்கு சென்றதுதான். அடுத்த இரண்டு வருடங்களில் அந்தப் பகுதியின் முன்னணி செல்ஃபோன் நிறுவனமாக ஏர்செல் மாறிவிட்டிருக்கிறது.

ஆனந்த கிருஷ்ணனின் பின்னணியை இன்றுவரை காங்கிரஸ் கூட்டணி அரசு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அவர் சீன உளவுத் துறையின் கையாள் என்பது முத்துக்குமார் நண்பர்கள் இயக்கத்தின் வாதம். அதற்கான போதிய ஆதாரங்களை “சீனாவின் முற்றுகையில் இந்தியா” புத்தகம் முன் வைக்கின்றது.

Hutchison Port Holdings-ற்கு அதன் முதலாளி லீ கா ஷிங் சீன சார்புடையவர் என்பதால் 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு தடை விதித்தது. ஆனால் அதே நேரம் 1992 ஆம் ஆண்டிலிருந்து 2007 தொடக்கம் வரை அதன் சகோதார நிறுவனமான (அதாவது, அதே லீ கா ஷிங்-கிற்கு சொந்தமான) Hutch Telecom நிறுவனத்தால் இந்தியாவில் இயங்க முடிந்திருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். மத்திய அரசின் (அது காங்கிரஸ் ஆனாலும், பா.ஜ.க. ஆனாலும்) குழப்ப நிலையையே இந்த செய்தி உணர்த்துகிறது. கடைசியில் Hutch Telecom இந்தியாவை விட்டு வெளியேறியதற்கான காரணம் வேறு. இது குறித்த விரிவான தகவலை எம் புத்தகத்தில் காண்க.

ஹுவாவெய் நிறுவனத்தை 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆஸ்திரேலியாவும், கனடாவும், அமெரிக்காவும் தம் நாட்டின் நிறுவனங்களுடன் கூட்டு வைப்பதற்கு அனுமதி மறுத்திருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கூட்டணி அரசோ அது இந்திய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொளவதை ஆதரித்தே வந்திருக்கிறது.

ஹுவாவெய்-யுடன் ரிலையன்சும், டாட்டாவும் கூட்டு வைத்ததை அது கேள்விக்குள்ளாக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியின் தகவல் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நாட்டின் பாதுகாப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றாரேயொழிய அதற்கான ஒரு சிறு நடவடிக்கையைக் கூட எடுக்கவில்லை. இதுதான் கடந்த ஐந்து வருட காங்கிரஸ் ஆட்சியினால் நாட்டிற்கு ஏற்பட்ட அவல நிலை.

இந்த நிலை காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நீடிக்குமே தவிர மறையாது.

எனவேதான் நம் நாட்டினை எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால் நமக்கிருக்கும் ஒரே வழி அந்தக் கூட்டணியை முறியடிப்பது மட்டுமே.

இவ்வாறு முறியடிப்பதன் மூலம் நாட்டின் பிற கட்சிகளை காங்கிரஸ் கட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்ட நாட்டிற்கெதிரான செயல்திட்டங்களிலிருந்து விலகிச் செல்ல வைக்க முடியும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

7. இளைஞர்களால் ஆன உங்கள் இயக்கம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த முயற்சியை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது. நாட்டை அச்சுறுத்தும் காங்கிரஸ் அரசின் தவறுகளை மக்களிடம் எப்படி கொண்டு போகப் போகிறீர்கள்?

புத்தகத்தோடு எங்கள் பணியை நிறுத்தும் திட்டம் எமக்கில்லை. களத்திலும் இறங்குகிறோம். காங்கிரஸ் அரசின் முக்கிய மந்திரிகளில் ஒருவரான ப.சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கைத் தொகுதியில் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போட்டியிடுகிறார். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் சிவகங்கையிலும், இன்னபிற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அரசின் கடந்த காலத் தவறுகளால் நாட்டிற்கு உருவாகியிருக்கும் இன்னல்களை விளக்கிப் பிரச்சாரத்தில் தற்சமயம் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். 

"சீனாவின் முற்றுகையில் இந்தியா" புத்தகம் பற்றி:

Muthukumar friendsமுத்துக்குமார் நண்பர்கள் இயக்கத்தால் வெளியிடப்படும் முதல் ஆய்வு நூல் இது. இந்தியாவை அச்சுறுத்தும் அந்நிய உளவு நிறுவனங்கள் குறித்து தமிழில் இதுவரை இதுபோன்ற புத்தகங்கள் வந்தது இல்லை என்றே சொல்லலாம். பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கும் வரைபடங்கள் மற்றும் நிழற்படங்களுடன் தகவல்கள் முன்வைக்கப் பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 வரையுள்ள கால கட்டத்தில் இந்தியாவின் தமிழ்நாட்டு எல்லையை சீன மற்றும் அதன் கூட்டு நாடுகளின் உளவு நிறுவனங்கள் எவ்வாறு கைப்பற்றியுள்ளன என்பதை சுமார் 321 ஆதாரங்களுடன் விளக்கும் 144 பக்க நூல் இது. இந்த சதிச் செயலை வெற்றிபெறச் செய்ய மஹிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு எவ்வாறு ஈடு பட்டது என்பதை இந்த நூல் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூடணி அரசு இந்த சதித் திட்டத்தைத் தவிர்க்கத் தவறியதற்கான காரணங்களையும் இந்த நூல் முன்வைக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கும் இந்த சதிவலையை அழிக்க என்ன செய்யலாம் என்பதற்கான கருத்துக்களையும் இந்த நூல் முன் மொழிகிறது.

புத்தகத்தைப் பெறத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

சமூக விழிப்புணர்வு பதிப்பகம்,
புதிய எண் - 68/15, எல்டாம்ஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
தொலைபேசி: 044-2435 4142

புத்தக விலை: ரூ.75 + தபால் செலவு

- முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It