Polar Bears

இந்த உலகில் உயிரினங்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வரும், அமெரிக்க நாட்டில் உள்ள ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் (Stanford University) பணி புரியும், பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ (Rodolfo Dirzo) என்பவர் தனது ஆய்வின் முடிவை 26.7.2014 அன்று வாஷிங்டன் நகரில் வெளியிட்டார்.

உலகில் உயிரினங்கள் தோன்றிய பிறகு, நிலச் சரிவு (Land slide), ஆழிப் பேரலை (Tsunami), விண்கற்கள் (Asteroid) மோதல் போன்ற இயற்கைப் பேரிடர்கள் காரணமாக இது வரையில் ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு உள்ளன என்றும், இப்பேரிடர்களின் காரணமாக டினோசார், மாபெரும் யானைகள் (Mammoth) போன்ற 320 உயிரினங்கள் சுவடே இல்லாமல் அழிந்து போய் விட்டன என்றும் அவர் கூறினார். இப்பேரழிவுகளில் இருந்து அழியாமல் தாக்குப் பிடித்த மற்ற உயிரினங்களில் 25% காலப் போக்கில் இயற்கை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மறைந்து விட்டன என்றும் அவர் கூறினார்.

இவை எல்லாம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் நிகழ்ந்த பேரழிவுகள் என்று கூறிய அவர், இப்பொழுது மனிதன் புவியின் இயற்கை வளங்களை அளவுக்கு மீறிப் பிழிவதன் காரணமாக, தடுத்து நிறுத்த முடியக் கூடிய, ஆறாவது பேரழிவு (Sixth Mass Extinction) ஒன்று நம்மை நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்

இதனால் யானைகள், காண்டா மிருகங்கள், துருவக் கரடிகள் மற்றும் மிகப் பல உயிரினங்களின் எண்ணிக்கை விரைவாகக் குறைந்து வருவதாக இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இயற்கைச் சமநிலை பாதிக்கப்பட்டு அதன் விளைவாக (எலி, பெருச்சாளி, மூஞ்சுறு போன்ற) எலியினங்களின் (Rodents) எண்ணிக்கை இருமடங்காகப் பெருகி உள்ளது என்பதும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. எலியினங்கள் நோய் பரப்பும் புற ஒட்டுண்ணிகளைத் தாங்கி வளர்ப்பதால். மக்களை நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் இவ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளில் மக்கள் தொகை இருமடங்காகி உள்ளது என்றும், மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், கொசுக்களை உணவாகக் கொள்ளும் சிலந்திகள், குடியானவனின் நண்பன் எனக் கூறப்படும் மண் புழுக்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை 45% குறைந்த உள்ளது என்றும் கூறிய பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ, இப்பொழுது நேரிட்டுக் கொண்டு இருக்கும் அழிவுப் போக்கிற்கு இயற்கைப் பேரிடர்கள் காரணமல்ல என்றும், மனிதன் உருவாக்கி உள்ள புவி வெப்ப உயர்வு, சூழ்நிலைக் கேடுகள், பருவ நிலை மாற்றம் ஆகியவையே காரணம் என்றும் கூறினார்; இப்பேரழிவுகள் நம் வாழ்க்கையை மெது மெதுவாகப் பதம் பார்த்துக் கொண்டு இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இது அனைத்து உயிரினங்களின் முழுமையான அழிவில் கொண்டு போய்விடும் என்றும்அவர் கூறினார்.

இறுதியாக, மக்கள் தொகையையும் இயற்கை மூலாதாரங்களைப் பிழியும் வேகத்தையும் வெகுவாகக் குறைப்பதன் மூலம் வரவிருக்கும் பேரழிவைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் பேரிடரைப் பற்றியும், அதனால் உலகில் உயிரினங்கள் முழுமையாக அழியவிருப்பது பற்றியும், அதிலிருந்து மீள்வதற்தான தீர்வைப் பற்றியும் அவர் தெளிவாகக் கூறி உள்ளார். அவர் கூறி உள்ள தீர்வை நடைமுறைப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

தீர்வின் முதல் அம்சமான மக்கள் தொகைக் குறைப்பைப் பற்றிப் பார்ப்போம். மக்கள் தொகையை வெகுவாகக் குறைக்க முடியுமா? சீனா சமதர்மப் பாதையில் சென்று கொண்டு இருந்த பொழுது பெரு நகரங்களில் உள்ளவர்கள் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு மேல் பெறக் கூடாது என்ற விதியை மக்கள் முறையாகக் கடைப்பிடித்துக் கொண்டு இருந்தனர். அதனால் சீன நாட்டின் மக்கள் தொகை ஒரு கட்டுக்குள் இருந்தது. சமதர்மப் பாதையை விட்டு விலகி முதலாளித்துவப் பாதைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு இக்கொள்கை வலுவில் தளர்த்தப்பட்டது. இதனால் சீனாவில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் வேகம் அதிகரித்து உள்ளது. சீனா குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைளை ஏன் வலுவில் தளர்த்தியது? முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குப் பண்டங்களை வாங்கும் மக்கள் மிகவும் முக்கியம். ஆகவே மக்கள் தொகைப் பெருக்கத்தை இன்றைய சீன முதலாளித்துவ அரசு ஆதரிக்கத் தொடங்கி உள்ளது.

தீர்வின் இரண்டாவது அம்சம் இயற்கை மூலாதாரங்களைப் பிழிவது வெகுவாகக் குறைக்கப்பட வேண்டும். இது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் முடியுமா? இன்று முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் நெருக்கடி என்றால் ஏதோ மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை அல்ல; முதலாளிகள் தங்களிடம் உள்ள மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வழி கிடைக்காமல் தவிப்பது தான் பொருளாதார நெருக்கடி என்று கூறப்படுகிறது. இத்தகையை நெருக்கடி தலைவிரித்து ஆடும் பொழுது இயற்கை மூலாதாரங்களைப் பிழிவதை வெகுவாகக் குறைப்பது என்பது நெருக்கடியைப் பல மடங்கு அதிகரிப்பது ஆகும் என்பது மட்டும் அல்ல; முதலாளித்துவப் பொருளாதார முறையையே அடியோடு காவு கொடுப்பது ஆகும்; சமூகத்தைச் சமதர்மப் பாதைக்கு நகர்த்துவதும் ஆகும். இதை ஒரு முதலாளித்துவ அரசு ஒரு போதும் செய்யாது.

அப்படி என்றால் அறிவியல் அறிஞர் பேராசிரியர் ரொடோல்ஃபோ டிர்ஸோ கூறியுள்ள தீர்வைச் செயல்படுத்தி உலகில் உயிரினங்கள் அழியாமல் காக்க வேண்டும் என்றால் முதலாளித்துவ முறையை அடியோடு காவு கொடுத்து, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைச் சராசரி அறிவிற்கும் குறைவான அறிவு உடையவர்களாலும் புரிந்து கொள்ள முடியும். நாம் என்ன செய்யப் போகிறோம்? உலகில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக முதலாளித்துவத்தைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம முறையை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் சந்ததிகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; நமக்கு நம் அயோக்கியத்தனமான மவுடீகம் (சோம்பேறித்தனம்) தான் முக்கியம் என்று இருக்கப் போகிறோமா?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.8.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It