உலக மயத்தின் (Globalization) 25 ஆண்டு நிறைவை நாட்டின் ஆளும் வர்க்கங்களும், அதன் ஆதரவு அறிவுஜீவிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். உலக மயம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்து இருபதைந்து ஆண்டுகள் முழுமையான விவாதங்கள் இல்லை. ஒரு பக்க சார்பு விவாதங்களைதான் பெரும்பாலும் ஊடகங்கள் செய்கின்றன.

 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, முதலீடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிடப்பட்ட கதவுகள்,தற்போது நூறு விழுக்காட்டை எட்டியுள்ளன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நம் நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் ( 100 % அந்நிய முதலீடா. பாதுகாப்பு கோவிந்தா..கோவிந்தா..) விட்டுவைக்கவில்லை. இந்தியச் சந்தையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்து வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் என வண்ணக் கனவுகள் காட்டப்படு கின்றன. பொய்களை மக்கள் மனதில் விதைக்கப்படுகின்றன.

இந்தச் சூழலில் அதிகாரங்கள் அனைத்தையும் மத்திய அரசே குவித்து வருகிறது. மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள், நிதி ஆதாரங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க்கொண்டிருக்கிறது. ஒற்றை இந்தியச் சந்தையாக இருந்தால்தான் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வசதியாக இருக்கும் என கார்ப்பரேட் தாசனான மோடியின் மத்திய அரசு நினைக்கிறது. இந்திய அரசின் இயல்பும்கூட அதுதான்.

மாநிலங்களின் நிலைமைக்கேற்ப வரிகளிலோ, சட்டத்திலோ எந்த மாற்றமும் ஏற்றத்தாழ்வும் இருக்கக்கூடாது – ஒரே முகமாக காட்சியளிக்க வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது. 

அண்மையில் தேசிய தகுதித்தேர்வு என அறிமுகப்படுத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களே இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர முடியும் என்ற விதியை நடுவண் அரசு கொண்டுவந்துள்ளது. மாநிலங்களிடம் இருந்த இந்த கல்வி அதிகாரமும் பறிபோகிறது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. இப்படி நிறையச் சொல்லலாம். மக்களின் குறைந்த பட்ச தேவையைக்கூட ஒரு மாநில அரசால் நிறைவேற்ற முடியாது என்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி மாநிலங்களிடம் உள்ள அதிகாரங்களை மத்திய அரசே எடுத்துக்கொள்ள முனைகிறது.

மத்திய வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு கிடைக்கும் பங்கு படிப்படியாக குறைந்துவருகிறது. தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் ஐந்தில் ஒரு பங்குதான் தமிழக அரசுக்கு தரப்படுகிறது. இப்படி பொருளாதாரம், அரசியல், சமூகம், கலை, இலக்கியம், மொழி என அனைத்திலும் ஒற்றை முகமாக்கும், ஒற்றை தேசியத்தை கட்டியமைக்கும் மத்திய அரசின் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போக்கு நாட்டின் வளர்ச்சிக்கானதா? உலக மயமாதலுக்கும் இதற்கு தொடர்பு இருக்கிறதா? மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு எப்படி இருக்கிறது?

வாருங்கள் விவாதிப்போம். 

நாள்: 16-07-2016 சனிக்கிழமை
நேரம்: சரியாக மாலை 5.00 மணி முதல் 9.00 வரை
இடம்: இக்சா கருத்தரங்க அறை, கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை.

தலைமை. முனைவர்.சுப.மனோகரன், வழக்குரைஞர்

..........

 சிறப்புரை

பேராசிரியர் முனைவர் நாகநாதன் அவர்கள், முன்னாள் துணைத்தலைவர், தமிழ்நாடு திட்டக் குழு,

ஊடவியலாளர் மணிமாறன்,

எழுத்தாளர் கி.நடராசன்,

வழக்குரைஞர் கிறிஸ்டோபர் ஜெனிபர்

நன்றியுரை: திரைப்பட இயக்குநர் சிதம்பரம்


அனைவரும் வருக..! ஆதரவு தருக!!

- அறிவுச்சுடர் நடுவம்