denmark to geneva notice

நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை சபையின் 30 வது அமர்வை முன்னிட்டு தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரித்தானியா, பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (டென் ஹாக்), அதைதொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து லக்சம்புர்க் நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஸ்ரார்ஸ்புக்) நோக்கி பயணித்து தொடர்ந்து யேர்மன் நாட்டை கடந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேய ஈருருளிப் பயணம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கி செல்ல இருக்கின்றது.

மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள்கிழமை (31.08.2015) அன்று காலை 10 மணிக்கு பிரித்தானியா, பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து டென் ஹாக் நகரை நோக்கி செல்ல இருகின்றது. அதை தொடர்ந்து நெதர்லாந் மனித நேய செயற்பாடாளர்கள் ஈருருளிப் பயணத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து அடுத்த நாட்டின் எல்லைபகுதிக்கு சென்றடைவார்கள்.

ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் முக்கிய அரசியல் சந்திப்புகள் இடம்பெறுவதோடு, தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களும், விளக்கங்களும் கொடுக்கப்படும். எமக்கான நீதியை நாம் பெறும் வரை ஐநா நோக்கிய பயணம் என்றும் ஓயாது என்பதின் குறியீடாக இம் முறையின் மனிதநேய ஈருருளிப் பயணம் அமைகின்றது.

தாயகத்தில் எங்கள் உறவுகள் எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்களை அழித்தவன், எங்கள் பாரம்பரியத்தை, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை, எங்கள் தொன்மையான தூய தமிழ்மொழியை படிப்படியாக நுட்பமாகத் திட்டமிட்டு தொடர்ந்து அழித்துவருவதோடு, எங்கள் நிலத்தையும் நிரந்தரமாக வன்கவர்ந்து தன்னகப்படுத்திவருகிறான். பத்து அல்லது இருபது ஆண்டிற்குள் தமிழரின் பூர்வீக தாயக நிலத்தில் தமிழர்கள் உரிமைகூற ஏதுமற்ற நிலை உருவாகக்கூடிய ஓர் இரகசிய செயற்றிட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு தீவிர முனைப்புக்காட்டி வருகிறது. இவ்வாறான ஒரு பாரிய திட்டமிட்ட மென்தீவிர இனவழிப்பு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இவ்வாறு திட்டமிடப்பட்ட ஒரு மென்தீவிர இனவழிப்பிலிருந்து எமது உறவுகளை, எமது தாய்நிலத்தை, மொழியை, தமிழரின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழர்கள் ஓரணியாக எழுச்சிபெற்று சக்திவாய்ந்த போராட்டங்களைச் செய்யவேண்டும். நீதியின் கதவுகள் திறக்கப்படும்வரை நாம் ஓய்ந்துவிடாது தொடர்ந்து எங்கள் உரிமைக்காக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும். இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நிகர், எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் பண்பாடு - உலகிலேயே மிகவும் தொன்மையானது, வீரமானது, தனித்துவமானது!

ஆகவே, எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தொடர்ந்து முனைப்போடு போராடுவோம்!

ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவரும் 21. 09. 2015 ஐ.நா. வாசல் நோக்கி அணிதிரள்வோமாக! ஒன்றுபட்ட தமிழரின் எழுச்சியாக, எங்கள் பூர்வீக நிலம், இனம், மொழி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதற்காக, எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மென்தீவிர இனப்படுகொலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓரணியாக நின்று எமக்காக நீதி கோரும் ஒரு சக்திவாய்ந்த போராட்டமாக மாற்றுவோமாக!

காலத்தின் கட்டாய வரலாற்றுக் கடமையை உணர்ந்து சுவிஸ் எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் பேரணியாக ஒன்றுகூடுமாறு மிகவும் பணிவன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

ஐந்து அம்சக் கோரிக்கைகள்:

1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும்.

3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்க வேண்டும்.

4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.