வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. ஐந்து ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம். எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.

uno geneva meeting

கொத்துக் கொத்தாய் குண்டுகள், செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள். பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய, பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடிய, உற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனைய, உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதற, உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை, உடுத்துங்கள் உங்கள் குருதியையே , எண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை, எனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று.

ஓர் இனத்தின் தேசத்தை, வீரஇனத்தின் இருப்பை அழித்தொழித்துவிட்டு மாபெரும் இன அழிப்பை புரிந்து விட்டு சர்வதேசங்களை நோக்கி மமதையோடு ஆட்சிபுரியும் சிங்கள இனவாத அரசு அதன் இனவழிப்புப் போரிற்கு பதில் கூறும் தருணம் வந்துள்ளது. புதைந்து போனவை எம் உயிர்கள் மட்டுமே. போரில் சென்றவை எம் உடைமை மட்டுமே. சிதைந்து போனவை எம் உடல்கள் மட்டுமே. சீறியெழுந்தது தமிழீழப் பெருந்தீ.

எதிர்வரும் 15.9.2014 அன்று தியாகி திலீபன் அவர்களின் அறப்போர் ஆரம்பித்த உன்னத வரலாற்று நாளிலிலே தமிழின அழிப்புகு நீதி கேட்டு பேரெழுச்சி கொள்வோம். ஐநா மனிதவுரிமை சபையின் சிறிலங்கா அரசுக்கு எதிரான விசாரணைக்கு சாட்சியங்களை சேர்க்கும் விசேட வேலைத்திடம் அனைத்துலக ரீதியாக நகரும் இவ்வேளையிலே எமது பலத்தினையும் எமது வலிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த அரசுகளுக்கு உணரவைப்போம். எமது கைகளில் நாம் ஏந்தப்போகும் எம் உறவுகளின் இழப்புகளின் ஒளிப்படங்கள் மீண்டும் இந்த அரசுகளைக் கண்விழிக்கச் செய்யட்டும் .

ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு ஐநா நோக்கி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் அலையென எழுவோம்.

ஜெனிவா பேரணி

காலம்: 15.09.2014 திங்கட்கிழமை
நேரம: 14.00 மணி தொடக்கம் 17.00 மணி வரை
இடம்: ஐ.நா முன்றல், முருகதாசன் திடல்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும் " என்ற தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபனின் நினைவுசுமந்த இக்காலப்பகுதியில் இன அழிப்பிற்கு நீதி கேட்டும், தனித் தமிழீழத்தினை அங்கீகரிக்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

பயண ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு