நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குனர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும் ஒரு வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்கு தள்ளும் அநீதியான முயற்சியாகவும் உள்ளது.

சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.

தமிழ் மொழியும், அதிலிருந்து பிறந்த தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திற்கு தொடர்பேதும் இல்லாமல் தனித் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டவை என்பதை 19ஆம் நூற்றாண்டிலேயே மொழியியலாளர்கள் எல்லீசும், ராபர்ட் கார்டுவெல்லும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துவிட்டனர்.

தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்க்கி, அலெக்ஸ் ஒலிவியா உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.

வரலாறு நெடுகிலும் சமஸ்கிருத மொழியும் , இன ஆதிக்கமும் , வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தோடு ஆரிய இன மேலாதிக்கமும் பிராமண வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. இதனால், தமிழ் மொழிக் காப்பு போராட்டமும் சமூக சமத்துவப் போராட்டமும் இணைந்த ஒன்றாகவே வரலாறு நெடுகிலும் நடந்துவருகிறது.

இந் நிலையில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன் மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது, தமிழர்கள் மீது ஓர் மொழி இன ஆதிக்கத்தை திணிக்கும் செயலாக அமையும். தமிழையும் தமிழினத்தையும் இழிவு படுத்தும் கேடான நோக்கமும் இதில் உள்ளது.

உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பா.ச.க அரசின் இந்த மொழித் திணிப்பு நடவடிக்கைகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு வலியுறுத்தும் சி.பி.எஸ்.இ இயக்குனரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.