குழந்தையின் மனம்போல்
களங்கமற்று விரிந்த
நட்பின் வெளியில்
உரையாடலின்
சாத்தியங்களை
வழிமறிக்கும்
ஒரு பாறாங்கல்லை
உருட்டிவிட்டாய்.
 
புறக்கணிப்பின்
பாதங்களுக்குக் கீழே
நசுங்கிக் கிடக்கின்றன
உன் நேற்றைய வார்த்தைகள்.
 
பாதையெங்கிலும்
கனத்திருக்கிறது காற்று
ஒரு குற்றம் போல.
 
தாழிடப்பட்ட மனங்களுக்குள்
தவித்தலையும் சொற்களால்
பெருகியபடி இருக்கிறது
புழுக்கம்.

- இப்னு ஹம்துன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)