ஒற்றைக்குயிலின் ஓங்காரச்சோகம்
--------------------------------
உறக்கம் கலையாது
உறங்கிப்போனான் அவன்.
மனப்பிராந்தியம் முழுவதும்
sadness பரவியிருந்த ஞாபகக்கசடுகள்
சுவாசம் முடிந்த பின்
தன் சுயவிலாசத்தை
அறிமுகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.
சப்தமிக்காது
சருகு உதிர்ந்த சேதி
மண் கிழித்த வேர்
பிற மரக்கிளைக்கு
பரிமாறிய சேதி
அந்த குயிலுக்கும்
கொஞ்சம் சொல்லப்பட்டது.
வாழ்ந்த காலங்களில்
மௌனித்த நேசம்
மரணித்த நேரத்தின் போது தான்
பூரணமெய்தியது.
சவபாதம் நனைத்த
விழிநீர்களின் தன்மையறியாது
தெளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
அந்த சாவுக்கான செய்தி பன்னீராய்.
அவன் உறக்கம் கலைக்க நினைக்கும்
அந்த ஒற்றைக்குயிலின்
ஓங்காரச்சோகம்
மேளவாத்திய இரைச்சலில்
இறந்து தான் போனது.

நாரைகள் ஊருக்குப்போய் விட்டன
----------------------------------
கொதிக்கும் நீருக்கு
பயப்படாத அப்பாவிற்கு
குளத்து நீரைக்கண்டால் பிடிப்பதேயில்லை.
காரணம் நீச்சல்.
இலங்கை கடற்கரைத்தீவில்
பிறந்த அப்பாவிற்கு
இடுப்பு நீரைக் கண்டாலே
ஏனம்மா பயம் என்ற கேள்விக்கு
இதுவரை சொல்லப்படவில்லை பதில்.
தாமரை மிதக்கும்
தடாகம் போல
நான் குடியிருந்த
வீட்டைச்சுற்றி குளங்கள்
புதுக்குளம்
சம்பக்குளம்
கொடிக்குளம்
கோசாகுளம் .
அப்பாவிற்கு பயந்தே
உடன்செல்பவர்களின்
துணிகாத்து
குளத்தின் கரைமேல்
காத்திருப்பேன்.
முங்கு நீச்சல்
கடப்பாரை நீச்சல் என
பாய்ந்து குளிக்கும்
பையன்களைப் பார்த்து
பயம் தொலைந்து போனது.
குளக்கரையில் கால்மிதித்த
ஒவ்வொரு நாளும்
விழும் பூசைக்கு
ஒத்தடமாய் அம்மா.
திரௌபதி அம்மன் கோவில்
குங்குமப்பூச்சோடு
வரும்போதே
காந்திபுரம் கண்மாய் போனாயா
என கண்டுப்பிடித்து மிரட்டும்
அக்காவின் பைக்கட்டு
பல நாட்கள் என்சுமைக்கடன்.
மீனைத்தேடிய நாரையாய்
நீச்சல் பழக
குளங்களைத்தேடி
அலைந்த காலங்கள்
இன்னமும் ஈரமாய். . . .
நகர நாகரீகம்
வளர வளர
குளங்கள் வீடுகளாய் மாற
வெளியூர் சென்றுவிட்டன நாரைகள்.
வளர்ந்து நிற்கும்
என் குழந்தைக்கு
குளத்தின் அடையாளத்தை
எப்படிச்சொல்லி விளங்கவைப்பது?

- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)