ஒரு ஆழ்ந்த அன்பை இழந்தபிறகு
எல்லாவற்றையும் இழந்தது போலத்தானிருக்கிறது

என் கனவுகளைக்கூட நெருங்காதிருக்கிறாய் நீ
தூக்கமின்றித் திறந்திருக்கும் கண்களில்
உன் நிழற்படம் நிரம்பியிருப்பதை
நீ அறிந்திருக்க இயலாது

என்றேனும் நீ என்னருகில் வருவாய்
மென்மையும் இனிமையுமாய் மகிழ்ச்சி பொங்க
அணைத்துக்கொள்வாய்
முடிவற்ற கனவொன்றின் உறையிலிட்டு மூடிவிடுவாய்

என் வலிகள் மிகுந்த மனம் தாபங்கள் பொங்க
காலத்திற்கும் வெளிக்கும் இடையில் பறக்கும்
இன்னொருமுறை உனது அரவணைப்பில் கரையவும்
இன்னொரு முறை உனது ஆன்மாவின் நெருப்பில் எரியவும்

நினைத்துப் பார்ப்பதற்கு எல்லாம் மிகவும்
எளிதாய்த் தான் இருக்கிறது
யதார்த்தமாகத் தான் இருக்கிறது

- தாரா கணேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)