வருத்தத்திற்குரியது அல்ல
வணக்கத்துக்குரியதும் அல்ல
கருணைக் கடலில்
மூழ்கடிக்க வேண்டாம்
பாவம் புண்ணியம்
தேடல் ஒன்றையும்
ஐயோ பாவமென
சூடவும் வேண்டாம்
உறவு கடந்திருக்கும்
உள்ளம் கனிந்திருக்கும்
உண்மை வேறு
உலகம் வேறு
புரிந்திருக்கும்
உவமைக்கெல்லாம்
இடம் இல்லை
உறுத்தவும் ஒன்றுமில்லை
பிச்சையிடு
அல்லது ஒதுங்கிக் கொள்
தட்டேந்துபவன்
தவத்திலிருக்கிறான்....!

- கவிஜி