பூமி வெந்து
கும்பி வெந்து
மனசும் வெந்து
தகிக்கும் முன்னிரவில்
கிழிந்த கோரைகள்
குத்தீட்டுகளாய் முதுகில் தைக்க
வெக்கையின் தகிப்பிலும்
வயிற்றுத் தீயிலும்
புரண்டு புரண்டு..
தூக்கத்தை
வழிகளுக்கு இறக்கும்
பகீரத பெருந்தவங்கள்
தோல்வியில் முடிய

பின்னரவிலும்
மறுஒளிப்பாய்
தூக்கமற்ற இரவுகள்

உழைப்பும்
உழைப்பாளியும்
இல்லாமல்
அதிகாரப் பூனைகளுக்கு
உல்லாசம் இல்லை

நேற்றும்
அதற்கு முன்னும்.. முன்னும்..
வீசப்பட்ட
அரசின் வாக்குறுதிகள்
“பாதுகாப்பாக
உங்களைச் சொந்த மாநிலத்திற்கு
அனுப்பி வைப்போம்”

உழைப்புத் தீயில்
உணவு உண்டவன்
தட்டேந்தும் அவலம்
நடந்து சென்றால் வதை
வாகனங்களின்
பதுங்கிச் சென்றால் சிறை
சாகத் துணிந்தவனுக்கு
சமூக இடைவெளி சம்பிரதாயமே

நோயில் சாவதா?
நொந்து பசியால் சாவதா?
எது எப்படியானாலும்
தாய் மண்ணில்
சொந்தங்களின் அரவணைப்பில்
வயிற்றுச் சோறோ?
வாய்க்கரிசியோ?
அதுவே போதும்

- மலையருவி