இல்லாத பொழுதெல்லாம் ஏங்கி
மனதெல்லாம் வேர்க்க வைப்பவள்தான் ...
வரும் பொழுதில்
குளுமையால் நடுங்க வைக்கிறாள்

சில நேரங்களில்
மெல்லப் பேசி
சிலிர்க்க வைப்பவள்தான் ...
பல நேரங்களில்
உக்கிரப் பேச்சினால்
காயப்படுத்துகிறாள்

அவள் வராதவேளை
பாளபாளமாய் வெடித்திருக்கும்
உள்ளம்தான்,
நிறைந்து பொலிகிறது...
பல வண்ண மலர்களால்
அவள் வருகைக்குப் பின்

போதும் போதும் துன்பம்
வந்துவிடு என ஏங்க வைத்து
நிறுத்து நிறுத்துவென இன்பத்தில்
திளைக்க வைக்கும் மழையவளை
நிதம் பாடும்
மழைப்பாடகன் நான்

- கா.சிவா