நீதிபதிகளே
நிரூபிக்க இயலாத குற்றவாளிகளாக
மாறும் தேசத்தில்
தண்டிக்க வழியில்லை.

தண்டனைக்குப் பதிலாக
பதவிகள் வழங்கப்படுகின்றன.

இங்கு ஆளும் அரசமைப்பே
ஒரு குற்றவாளிக் கூண்டாக
மாற்றப்பட்டு விட்டது.

பாரத மாதா
இதைக் காண சகிக்காமல்
மனபாரம் தாங்காமல்
தூக்கில் தொங்குகிறாள்.

நாடாளுமன்றத்தின்
மைய மண்டபத்தில்
அவளின் உடல்
அடையாளம் தெரியாமல்
புதைக்கப்படுகிறது.

அவளுக்கான
இரங்கல் பாடல்
இரகசியமாக இசைக்கப்படுகிறது.

தேசிய கீதத்தின்
பெரும் சப்தத்தில்
அவளுக்கான
இரங்கல் பாடல்
எவர் செவிக்கும் எட்டவில்லை.

போலி தேசபக்தர்களின் ஆட்சியில்
உண்மையான தேசபக்தர்களின்
நாவுகள் பறிக்கப்பட்டன.

அநீதிக்கு ஆதரவாக
சாட்சியம் சொல்ல
நல்வாய்ப்பாக
விழிகள் பிடுங்கப் பட்டன.

சுதந்திரம்
காக்கப்பட வேண்டும் என்று
ஓயாமல் உரைப்பவர்கள்
சித்ரவதைக்கு ஆளாகாமல்
தாங்களாகவே
உயிரை விட்டுவிடும்
உயரிய சுதந்திரம்
உறுதிப்படுத்தப் பட்டது

ஜனநாயகத்தைக்
காப்பாற்ற இனியும்
ஜனங்கள் தேவையில்லை.

ஆள்பவர்களின்
அதிகாரம் நீடிக்க
வாக்குப் பதிவு
எந்திரங்களே
வரங்கள் தருகிற
வல்லமை பெற்று விட்டன.

ஏழைகளின்
வயிற்றுப் பசி தீராத போதும்
வளர்ச்சியை நம்புங்கள்.

வங்கிகள் திவாலாகும் போதும் வருந்தாமல்
கனவு காணுங்கள்...
இது வல்லரசு இந்தியா.

- அமீர் அப்பாஸ்