புனித நதிகளில்
மணல் சுரண்டி
புதுமனையில் குடியேறி
பாவம் கரைக்க
நதிகளில் நீராடி
சுமந்துவந்த குப்பைகளை
ஆற்றில்
மிதக்கவிட்டு
துர்நாற்றத்திலும்
பரவசத்தில் கை தொழுதாய்
பச்சை துரோகத்தை
பக்தியென்றே...
இரண்டாவது சுற்றில்
பாவம் செய்தவர்களை
அடையாளம் கண்டு
வீடுதேடி வந்தது
தன் பாவத்தைக் கரைக்க
இந்த
பாவப்பட்ட நதி,
நெகிழிப் பைகளில் நிலம் சிக்கிக் கொண்ட
பெருங்கொடு நகரத்தில்...

- சதீஷ் குமரன்