மழையோடு கூடிய காற்று
நகர வீதியில்
முருங்கை மரம் ஒன்றை
வேரோடு சாய்த்து இருக்கிறது
கட்டச்சி ஆச்சியை
நினைவுபடுத்தும் கிழவி ஒருத்தி
ஒன்றிரண்டு வெள்ளாடுகளை
மேயவிட்டு வேடிக்கைப் பார்க்கிறாள்.
முருங்கைக் கீரையைப் பறித்து
மார்போடு அணைத்துச் செல்ல
எந்த அத்தையும் வரவில்லை
இது நானாகவே விரும்பி
ஏற்றுக் கொண்ட நகர வாழ்க்கை
இன்னமும் வேடிக்கைப் பார்க்கும்
ஆவலோடு காத்திருக்கின்றேன்.

- ப.சுடலைமணி