நேற்றின் மிச்ச அசதிகளை
உயிர் உருக்கும் வலிகளை
துயில் களையும் போதே
கலைத்துப் போட்டு
சோம்பல் உதறி விட்டு
போர்வைக்குள் பொதித்து
ஒளித்து மடித்து வைக்கிறேன்
இன்றைய பதினெட்டு மணிநேர
ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடிக் களைத்து
உறங்கும்போது மீண்டும்
போர்த்திக் கொள்ள
சேர்த்து வைக்கிறேன்
என்ன செய்ய? ..
இன்றைய
புதுமைப் பெண் நான்.
என் ஓட்டத்தை நிறுத்தும்
எந்த காரணிக்கும்
பகலில் இடமில்லை.
- செந்தாமரைக் கொடி