பெண்ணே!
கருத்து உடல்பெருத்து
முடிசிறுத்து
உழைத்த உடல் சோர்ந்து
சற்றே சாய்ந்து தளர்ந்தாயா!

நிமிர்ந்து உடல்மினுக்கும்
செவ்வகப் பெட்டியொன்று
அருகமர்ந்து ஆதரவாய்
அன்பொழுகப் பேசியது

குங்குமப் பூப்போனற
சிவப்பழகு வேண்டுமா?
ஒரே வாரத்தில்!
நீண்ட கருங்கூந்தல்
அலைபாய
வாகனங்களையே
கட்டிஇழுக்கும்
வலிமையாக கூந்தல் ரகசியம் சொல்லவா?
மெலிந்த தேகமும்
வசீகரிக்கும் முகமும்
வெய்யில் தூசு புழுதியில்
மாசடையாத
மேனி வேண்டுமா?

செவ்வகப் பெட்டி
அக்கறையோடு
அடுக்கடுக்காகத்
தன் பொய் மூட்டைகளை
திறந்து கொட்டியது

பெண்ணே!
ஆணை மயக்கத்தான் உன்மேனி
அழகு! கவர்ச்சி! வசீகரம்
இதுவே
வாழ்க்கையின் இலட்சியம்
ஆசைப்படு! ஆசைப்படு!
பூ! புடவை! நகை!
அத்தனைக்கும் ஆசைப்படு!

கிரீம்! லோஷன்! பாலீஷ்
நுகர்வுச் சந்தையில்
உன்னை நம்பித்தான்
இத்தனையும், இன்னமும்..
மாயப்பெட்டியின்
ஓயாத ஓலம்
தொடர்ந்துகொண்டே இருந்தது..

பெண்ணே!
உழைக்கும் பெண்ணே!
அந்த மாயப்பெட்டி
நீண்ட தொடர்களால்,
கண்ணீர் கசியும்
ரியாலிட்டி நிகழ்ச்சிகளால்
உன்னைக்
கட்டிப் போட்டதெல்லாம்
எதற்கென்று அறிவாயா!

விழித்தெழு!
ஆண்களில் சந்தையில்
நீ நுகர்பொருளல்ல!
பெண்களின்
நுகர்பொருளுக்கு
நீ சந்தையுமல்ல..

உன் மாயக் கனவுகளை
உதறி எறிந்துவிட்டு
புதுமைப் பெண்ணாக
உடனே கிளர்தெழு!
உழைக்கும் பெண்ணே!
உலகம் உன்கையில்..

- முனைவர் நா.இளங்கோ