அவ்வப்போது
வாரி இறைக்கப்படும்
சேற்றினைப் பிசைந்து
உருவம் செய்து..
வீசி எறியப்பட்ட
அவமான கற்களில்
மீப்பெரு இரண்டை
கண்களாக்கி..
அனுபவ ஊசிகளை
முட்களாகப் பதித்து..
நூல் ஊற்றி வளர்த்த
அற அறிவைப் பற்கள் ஆக்கி
செய்த….
மகரங்களை
மன அகழியில்
உலவவிட்டிருக்கிறேன்
எச்சரிக்கை
உங்கள் நியாய
மாமிசத்துண்டங்களைத்
தூக்கிக்கொண்டு
பெருங்கருணையோடு
உணவளிக்க அணுகாதீர்..
சுருட்டி இழுத்து
உங்களை முற்றிலும்
சுவைத்து செரித்து விட்டு
அடுத்த கருணைக்காக...
தந்தித்தீ பசியோடு
வளர்த்து வருகிறேன்
என் அந்தரங்க முதலைகளை
- சுசித்ரா மாரன்