நேருக்கு நேர்
சந்தித்துக் கொண்டோம் நேற்று.
எதுவும் பேசத் தோன்றவில்லை எனக்கு.
தொலைந்த பொம்மையைத் தேடும் சிறு குழந்தைபோல்
மும்முரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாய்.
சற்றே துணுக்குற்ற
உன் சந்தேகப் பார்வை
ஒரே வீச்சில்
எனை நோக்கித் திரும்பியதை
கவனியாமல் இல்லை.
உண்மையாகச் சொல்கிறேன்
மழையூறிய
உன் வானம் தவிர்த்து
வேறெதுவும்
உடனெடுத்து வரவில்லை பிரியனே.

- வான்மதி செந்தில்வாணன்