தற்செயல் நிகழ்வுகள்
எப்பொழுதும்
அழகானவை!

சட்டென
உருளும் ஒற்றைத்துளி
கண்ணீர் போல....

வெக்கை சூழ்
பொழுதொன்றில்
முகம் நிறை
வியர்வைத்துளி கண்டு
உப்பென ஊதும்
உன் மூச்சுக்காற்றைப் போல....

உடையுந்தருணமொன்றில்
உடன் பற்றிக்கொள்ளும்
உன் கைகளைப்போல....

எதிர்பாரா நேரத்தில்
நெற்றி முடி ஒதுக்கி
நீ தரும் முத்தம் போல...

கனத்த மௌனத்தை
உடைத்தெறிகிற
முதல் வார்த்தை போல....

தற்செயல்கள்
எப்பொழுதும் அழகானவை!
நம் தற்செயலான
சந்திப்பைப் போல...

- இசைமலர்