lovers 322இப்பூவுலகெங்கும்
நிரம்பிக் கிடக்கும்
மழை முத்தங்கள் உனது...

உனக்கான வாசலை
நீயே திறந்துவிடுகிறாய்
வைகறை அப்போது தான்
வெளியேறுகிறது...

உன் கோபம்
பாறையாய் உறைகின்றது
அதில் ஜீவனாய்
நிழல் விழுகின்றேன்....

உறங்கும் பொழுது
எண்ணங்களைக் கழற்றி
இனிமேலேனும்
பத்திரமாக வைத்துக் கொள்
ஒவ்வொரு முறையும்
இரவு விடிந்துவிடுகிறது...

அந்த உயரத்திற்கு
இந்தப் பார்வையொன்று
போதுமானதாய்
கண்டதும் புன்னகைக்கும் நொடி
தளும்புவதை
எப்படி விரும்புவேன்?!
நிரம்புவதைத் தவிர்....

நீ பிரிந்து செல்லும்
நாட்களில்
உருவானவை தானா
அத்தனை தனித் தீவுகள்...

காத்திருக்கும் போது
கனிகின்றதா மௌனம்
பேசுகின்றாய்
என்னைச் சுற்றிலும்
அணில் விளையாட்டுக்கள்...

காதலில் நீ சிகரம்
உன்னளவில்
தோள் வரை நிற்பதே
என் சாதனை....

- புலமி