தாலாட்டுப்பாடி இரவை தூங்க வைத்துவிட்டு
எனது அறைக்குள் நுழைகிறது கனவு.
அரவமற்ற சூழல்
கனவு அழைத்து வந்த தனிமை
மற்றும் நான்.
சொல்லி வைத்தாற்போல்
நிலவு சன்னல் தட்டி
உள் நுழைகிறது
வரவேற்பறையிலிருந்த தனிமை
நான் சொல்லாமேலே
வெளியேறுகிறது.
மனசு கொஞ்சம் கொஞ்சமாய்
சலசலக்கத் தொடங்குகிறது
தாகம் தொண்டையை வறாண்ட
நீர்க் குவளையை கையில் எடுக்கிறேன்
என்ன தடுமாற்றம்
குவளை உடைந்து
இரவு விழித்துக் கொள்கிறது.
நிலவு சன்னல் வழியாய்
வீடு திரும்பியிருக்க வேண்டும்.
ஒரு துயரம்
சாலையைக் கடந்து செல்வது
மிக நன்றாக
எனது காதுகளுக்கு வந்தடைகிறது.
- ஏ.நஸ்புள்ளாஹ்