அதிகாலையில்
எனது வாசலுக்குப் பறந்து வந்தாய்
இருவரும் பறவையானோம்.
காலைநேரத் தேநீரை
நதியின் மேலமர்ந்து பருகினோம்
பறவைகளற்ற காடுகளைத் தேடினோம்
சாலையோர பட்டமரத்தில்
சலனமற்றிருந்தோம்.
காற்று நம்மை
தூர அழைத்துச் சென்றது
பகல் உணவுப் பசி வந்தது
சூரியனையும் அதன் கதிர்களையும்
உண்டோம்.
மாலையாகி பின் முன்னிரவானது
மின்மினிகளைக் கொளுத்தி
இறுதியாய்
சில முத்தங்களைப் பரிமாறினோம்
இரவு வணக்கம் சொல்லி
இருவரும் பிரிந்தோம்
கனவில் வரும்படி
நீ கட்டளையிட்டாய்
காதல் வாழத் தொடங்கியது.
- ஏ.நஸ்புள்ளாஹ்