coconut tree in night

இரவை எப்பொழுதும் 
தென்றலைக் கொண்டு 
முடைகின்றன 
தென்னங்கீற்றுகள் 
மாலைப் பொழுதானது 
ஏதோ ஒரு பூக்காரனின் 
அழுக்குப் படிந்த 
வெள்ளை உறைப்பையில் 
மலர்களோடு வண்டாடுகின்றது 
ஒவ்வொரு முறையும் 
ஒரு கல் இடறி 
யாரோ ஒருவரின் 
தூக்கத்தைக் கலைத்துவிடும் 
மிதிவண்டியின் சங்கிலியில் 
துருத்திக் கொள்ளக்கூடியது 
மதியமெனச் சுளித்தபோது 
எங்கள் ஊரில் 
மயில்கள் அகவித் தான் 
தோகை விரிக்கும் 
கிழக்கு... 
எல்லாம் கழிந்து 
பின்னிரவில் 
சாளரத்தை உரசிச் செல்லும் 
ஆந்தையின் அலறலை 
என்றாவது கேட்டுத்தான் 
உறங்கியதே தெரிகின்றது.....! 

- புலமி