writing 340என் ஆன்மா
எழுத்துக்களால்
நிரம்பியிருக்கிறது,
ஒவ்வொரு காகிதத்திலும்
நான் என்னையே
உருட்டுகிறேன்....

எனதென்பது எல்லாமே
அது சொல்லும்
அர்த்தங்களே...
முடியாத வரிகளில்
மீண்டும் நான்
முளைத்துக் கிடக்கிறேன்...

வரிக்கும் வரிக்குமான
இடைவெளியில்
என் இளைப்பாறல்கள்....

எனது
புத்தன்களையும்
ஏசுக்களையும்
நான் மடக்கி வைத்த
நேற்றைய பக்க
ஞாபகங்களாய்
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்....

அடிக்கோடிட்ட வரிகளில்
கொஞ்சம்
ஆனந்தப்படும், அதேசமயம்
யாருமே புரட்டாத
பக்கத்தில் சிறு பூச்சிகள்
வளர்ப்பதில் எனது
சுவாசம் கடவுளானது...

ஆன்மாவைக் கடந்த பின்னும்
தனித்து அடம் பிடித்து
நிற்கிறது
என் வெளியெங்கும்
எனைத் தொலைத்த
எனது எழுதுகோல்...

- கவிஜி