எலியினம் தனக்கும் பறவை களுக்கும்
நலிவுறு மக்களை விடவும் மேலாய்
விருந்து அளிக்கும் தன்மையி னாலே
பெரும்பசி வாட்டவும் வேலை யில்லாக்
கொடுமை மக்களை அடிமைத் தனத்தில்
ஒடுக்கி வைக்கவும் விளம்பரப் பேய்கள்
மாண்பிலா நுகர்வுப் பண்பை வளர்க்கவும்
ஈண்டு காணும் நலமில கடந்து
வினைஞர் அரசை அமைத்திட் டாலோ
அனைவரும் அனைத்து நலம்பெறு வாரே

((முறையான சேமிப்பு வசதிகளைச் செய்யாமல்) நலிவுற்ற மக்களுக்கு அளிப்பதற்குப் பதிலாக, சுண்டெலி, பெருச்சாளி, மூஞ்சூறு போன்ற போன்ற எலியினங்களுக்கும், பறவைகளுக்கும் நலிவுற்ற மக்களை விட அதிக முன்னுரிமை கொடுத்து, தானியங்களை விருந்தாக அளிக்கும் தன்மையினால் மக்களைப் பெரும் பசி வாட்டவும், வேலையில்லாத் திண்டாட்டம் அவர்களை அடிமைத்தனத்தில் ஒடுக்கி வைக்கவும், விளம்பரப் பேய்கள் சிறப்பாகக் கருதப்படக் கூடாத நுகர்வுப் பண்பாட்டை வளர்க்கவும், இப்படியாக நாம் காணும் நலமல்லாத பல தடைகளைக் கடந்து சோஷலிச அரசை அமைத்தால் அனைவரும் அனைத்து நலன்களையும் பெறலாம்)

- இராமியா