என்றைக்குமே விலக விரும்பாத
ஒற்றையடிப் பாதையில்தான் என்தொடர் பயணம்.
தூரத்து வளைவில் புதர் மண்டிய சந்தில்
தன் ஒளிரும் பிரகாசஇதழ்களை
தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள்
ஒளித்துக் கொண்டபடி சிறுபூ.
காலத்தை விஞ்சிய அதன் தனிமையை
என் வழிப்பயணத்தின் கணநேர அண்மையால்
தவிர்த்திட இயலாதுதான்.
எனினும் பயணம் தந்த மெல்லிய அதிர்வில்
அசைந்த பூவின் மேல் கவிழ்ந்திருந்த இலை
சட்டென விலகிற்று.
அது விசிறிய மழலைஒளி
எனை முழுதுமாய் நனைத்திற்று.
பின் வந்த ஒவ்வோர் பயணத்திலும்
மலர் ஒளிரும் புதரை அண்மிக்கும் போதெல்லாம்
உயிரோர் பிச்சைப் பாத்திரமாகிட
ஒளி மீதான உணர்வுகளின் யாசிப்பை
என்றைக்குமே தவிர்த்திட முடிந்ததில்லை என்னால்.
- கிண்ணியா எஸ். பாயிஸா அலி
RSS feed for comments to this post