மவுனத்தைக் கலைத்த காகங்கள் எங்கேயோ
பறந்து சென்றிருக்க கூடும்
நாணல் இலைகளில் காற்றின் சதிராட்டம்
நின்றபாடில்லை.
அருவிகளின் பாய்ச்சலில் வினோதங்களை
காற்றில் எழுதுகிறது கவிதை முனை.
உயர்ந்து செல்லும் மனதை பறிக்கவேண்டி
அல்லாடுகிறது ஒரு பொழுதின் நிறம்
திற்பரப்பு அருவியின் வீழ்ச்சி கதையில்
நாயகின் திருப்பத்தை கேமாராவில்
பதிவாக்கி ஜோடனையூட்டியது
நாயகனின் கனவுலகில்
திற்பரப்பு நீர்வீழ்ச்சி ஒரு கணமேயாயினும்
இரவில் உறங்கி கனவுகளை
மேயவிடும் நாயகிக்கு
சலனம் அல்லாத ஒரு சித்திரம்
திரையில் தெரியாதது
யாருக்குமே தெரிந்திருக்கவில்லை
ஆயினும் திற்பரப்பு நீர் வீழ்ச்சி
இன்னும் அதிகமாக பெருக்கெடுத்து
கொள்கிறது பயணிகளின்
நினைவலைகளில்
யாருமற்ற உறக்கத்தில்
பேசும் திற்பரப்பின் அழகில்
நானும் நீயும் வெறும்
பிம்பங்கள் மாத்திரமே
- நட்சத்திரவாசி