எல்லோரும் வைத்திருந்தோம்...
வசனங்களும்... வாசகங்களும்...
வேதமொழிகளும் நிரம்பிய
தடித்தடியான புத்தகங்களை...
 
பின்பற்றினோமோ இல்லையோ...
அவரவர் தோதுக்கு
சொல்லிக் கொண்டோம்
இது சிறப்பு அது சிறப்பென்று..
 
வரிந்து கட்டி எழுதி
சேற்றை வாரி வீசி
நினைத்ததெல்லாம் இடித்து
சண்டையிட்டுக் கொண்டோம்.
 
வார்த்தைச் சாணைகளில்
வெட்டுண்டு வீழ்ந்தன
அணைத்து வளர்ந்திருந்த
அன்பின் தளைகள்...
 
ரத்தம் தோய
பரிதாபமாய்
சிதறிக்கிடந்தன..
முந்தய முகங்கள்..
 
எஞ்சிய முகங்களில்
கரி அப்பி இருந்தபோ்து
கெக்கிலி கொட்டின
கையூட்டுக்கள் பல..
 
தூண்டியவர்கள்
கணப்புக்காய்
இன்னும் விசிறினார்கள்
எரிச்சல் பத்தாமல்..
 
பற்றியெரிந்த பொழுதில்
குருத்துக்களாய்
கரம் பற்றினார்கள்
எங்கள் பிள்ளைகள்..
 
ஒரு விசித்திர நொடியில்
குளிர்ந்தது அனைத்தும்...
சீர்படுத்திக் கொண்டோம்
சிதைந்த ஓவியங்களாய்..
 
பைசாசங்கள் ஒழிந்தன..
விட்டெறிந்த புத்தகங்களோடு..
புதுப்பித்துக் கொண்டோம்
புன்னகையயும் சுவாசத்தையும்...
 
மாசுகள் தொலைந்து
மழலைகளானோம்..
மறுபடி கைகோர்த்து
மனிதராய்த் தொடங்கினோம் வாழ்வை..