கொரோனா உபயம் - கடந்த இரண்டு நாட்களாய் வழக்கமாய் காய்கறிகள் வாங்கும் கடை இல்லாமல் போய் விட்டது.

கொஞ்ச தூரம் சென்று பசுமைக் காய்கறிக் கடைக்குள் நுழைந்தேன்.

"இதுகளெ வாங்கறதுக்கு விசத்தியே சாப்பிடலாம்"

வெளியே வந்து கொண்டிருந்தவர் உரக்கவே முணுமுணுத்தார்.

"விச காய்கறியெ சாப்புடறம்ன்னுதானே இங்க வர்ரம். இது என்ன புதுசா" என்றேன்.

"இல்லெ. இந்த வெலைய்க்கு இதுகளெ வாங்கறதுக்கு விசம் பரவாயில்லைன்னு ஏதோ வெறுப்புலே மனசுலே வந்திருச்சு. அதுதா அப்பிடிச் சொல்லிட்டன். நியாயமா கூட எனக்குத் தோணலே”

"உம்..”

"தெரியாமெச் சொல்லிட்ட மாதிரிதா இருக்கு ..”

"ஏதோ வேகத்திலெ சொல்ல வேற மாதிரி அர்த்தம் வந்திரும். அதுக்கு ஆளாகக் கூடாது"

அவரும் ஆமோதித்தபடி மறுபடியும் கடைக்குள் சென்று காய்கறிகளை தேடத் தொடங்கியது ஆறுதலாக இருந்தது.

roof gardenபசுமை வியாபாரம் இப்போது பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரோக்கியம் தேடும் மக்கள் விலை அதிகம் என்றாலும், ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகள், உணவுப் பொருட்களை வாங்க ஆசைப்படுகிறார்கள் .

இயற்கை வேளாண் விளைபொருள்கள் அதிகமான அளவில் சந்தைக்கு வரும் காலங்களில் க்ரீன் மார்க்கெட்டிங் என்ற வார்த்தை வெகு சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிட்டது. இயற்கை விளை பொருட்களை வாங்குவதாகச் சொல்வது, உபயோகிப்பது 'பேசனாக' மாறிவிட்டது

அவை சுகாதார அளவில் பாதுகாப்பானவை, செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை. அதனால் அவற்றின் மீதான வசீகரத்தையும் தந்திருக்கின்றன

பசுமைச் சூழல், அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்பவை உடனடியாக நினைவுக்கு வரும். இது சார்ந்த வார்த்தைகள் சமீபமாய் அதிகப் புழக்கத்தில் இருந்தாலும் 90கள் முதலே அதிகம் பிரயோகிக்கப்பட்டன. கார்ப்பரேட் சமூகம் பொறுப்புணர்வு பற்றிய பிரஸ்தாபங்களின் போது பசுமை வியாபாரமும் புழக்கத்தில் வந்துவிட்டது. எதிர்காலத் தலைமுறையினரை மனதில் கொண்டு இந்த வார்த்தை உச்சரிக்கப்படுவதாய் சொல்லப்பட்டது.

பசுமை நுகர்வு என்பது பல நாடுகளில் ஓர் இயக்கமாகவே நடைபெற்று வருகிறது. உலகில் வெப்பமாதல் பற்றிய விவாதங்களின்போது இந்த வார்த்தையும் சூடாகி விட்டது. இந்த பூமியைச் சுத்தமானதாக வெப்பம் குறைக்கும் முயற்சியில் இவற்றின் பயன்பாடு அதிகமாகி விட்டது.

4 P கள் இதனூடே விவாதிக்கப்படுகின்றன. Product, Price, Place, Promotion என்பவை அவை. பொருள் எனப்படும்போது சுற்றுச்சூழலுக்கு அபாயம் தராதது என்ற பொருளிலும் விலை என்கிற போது சாதாரணப் பொருட்களுக்கு தரும் விலையைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமானதாக இருக்கிறது. இதை விற்க தனி இடங்கள் என்பதாகவும், தனி வியாபாரம் எண்ணங்கள், செயல்கள் என்பதாகவும் உணரப்பட்டிருக்கிறது

எல்லாவற்றிலும் பிராண்ட் அவசியமாகி விட்டது நிலைத்துவிட்ட பிராண்ட்டுகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கின்றன. பிராண்ட் இருக்கிறதா என்று பார்த்து பொருட்களை வாங்குவது பேஷன் என்று நிலை வந்து விட்டது. வியாபாரத் தந்திரங்களில், விளம்பரங்களில் பிராண்ட்டை நிலைநிறுத்துவதும் முக்கியமாகி விட்டது விளம்பர யுகத்தில் இந்த பிராண்டட் மோகத்தை மீறி இயற்கை விளைபொருள்களை விற்பனை செய்வதும் ஒரு சாசகமே .

பின்னலாடை தரப்படுத்தலில் பிராண்ட் அமைப்பில் SA 8000, SA 14000 போன்றவை பிரபலமானவை, இதுபோல் iso14040 என்பது சுற்றுச்சூழல் குறித்து வரும் போது வாழ்நாள் சூழலில் மதிப்பீடுகள் திட்டம் பற்றி பேசப்பட்டது. விளைந்து சந்தைக்கு வர இருக்கும் பொருளின் சூழல், சக்தி, சிக்கனமும் வலியுறுத்தப்பட்டது

இவையெல்லாம் பசுமைப் புரட்சியின் பின் விளைவுகளாகவும் பார்க்கப்பட்டது.

வேளாண்மை உற்பத்தியைப் பெருக்க பயிர்செய்கை நுட்பங்கள் இந்திய சுதந்திரத்திற்கு பின் வெகுவாக நடைமுறைக்கு வந்தன. அது சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களில் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்தது. பல மூன்றாம் உலக நாடுகளில் வறுமை, பட்டினி சாவு நாட்களில் புதுமைப் புரட்சி முன்நின்றது .

உயர் மகசூல் வகைகள் உருவாயின. தீவிர விவசாய முறைகளில் பூச்சிக்கொல்லிகள் தந்த உபாயம் பூச்சி மேலாண்மை வரைக்கும் சென்றது. பசுமைப் புரட்சி, பூச்சிக்கொல்லி, கலப்பு நைட்ரஜன் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளரும் நாடுகளுக்கு பாரங்களை ஏற்றின. ஐம்பெரும் பூதங்களும் கேடுகள் என வந்துவிட்டன. இயற்கை விவசாய இடுபொருட்கள், உரங்கள் போன்றவை ரசாயன உரங்களை விட விலையில் குறைவே. ஆனால் உழைப்பு சற்று அதிகமே. சரியான இயற்கை வேளாண்மை சார்ந்த புரிதல் இருந்தால் வேளாண்மைத் தொழிலில் இருந்து அதிகளவில் மக்கள் வெளியேறுவதைத் தவிர்க்கலாம் என்கிறார்கள். பல விவசாயிகள் இரசாயன உரங்களால் வரும் புற்று நோயால் அவதிப்பட்டுக் கொண்டே அத்தொழிலைச் செய்வதும் ஒரு முக்கிய கோணம்

நுகர்வோர் அணுகுமுறைக்குச் சவாலாய் தினப்படி வாழ்க்கை அமைந்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தி என்பது அவரின் பொருளாதார நிலை, சமூகநிலை, அவரின் மனநிலை சார்ந்த விவசாயிகளால் கட்டமைக்கப்பட்டது.

பசுமை வியாபாரம் என்பது இன்று உலக அளவிலான ஒரு விசயமாகி ஆகிவிட்டது. இதை வற்புறுத்தும், கடைபிடிக்கும் நாடுகளில் இந்தியா, இங்கிலாந்து, தாய்லாந்து ஆஸ்திரேலியா, கனடா, சீனா போன்றவை முன்னிலையில் உள்ளன .

.அவை முத்திரையிடப்படுதல் அல்லது எக்கோ லேபிளிங்கில் கவனம் செலுத்துகின்றன.

இந்த முத்திரை பசுமை வியாபாரத்திற்கு தவறாததாகிவிட்டது. முத்திரைகள் மூலம் பலரின் கவனத்தைக் கவர வேண்டியிருக்கிறது. சுற்றுச்சூழல், உடல்நிலை, இயற்கை விடயங்களை கவனத்தில் கொண்டு பசுமை வியாபாரம் நுகர்வோருக்கும் முக்கியமானதாகி விட்டது.

மாடி வீட்டுத் தோட்டம் அமைத்தல், வீட்டில் உள்ள காலி இடங்களில் காய்கறிகளை விளைவித்தல் என்பது எளிமையான இதன் செயல் வடிவங்கள்தான்.. நேரம் வசதி உள்ளவர்களுக்கு இவையெல்லாம் கை கூடும்.

கொங்குப்பகுதியில்தான் இப்போது அதிக அளவிலான புற்றுநோய் மருத்துவமனைகள் இருக்கின்றன என்பது பழைய செய்தியாகி விட்டது.

ஏழைகளுக்கு இருக்கவே இருக்கிறது ரசாயன விளைபொருட்களும், அதிலுள்ள கொஞ்சம் விஷமும் என்பது விரக்தியில் வரும் வார்த்தைகளாகி விட்டன.

எங்கள் வீட்டு மாடி வீட்டுத் தோட்டக் காய்கறிகள் இந்த வாதங்களுக்கெல்லாம் ஒரு மாற்றாக பலரின் பார்வையில் படுவது குறித்த மகிழ்ச்சி எனக்குண்டு.

"கறி திங்கறது சைனாக்காரன்
கைகழுவறது நாம"

என்று வசவு பாடி நழுவாமல் மாடி வீட்டுத் தோட்டம் பற்றி விசாலமாய் நினைத்துப் பார்க்கலாம்.

- சுப்ரபாரதிமணியன்