நான்கரை ஆண்டுகளாக மோடி ஆட்சியின் மொத்த அசிங்கமும் ஒன்று திரண்டால் அது எப்படி பார்ப்பதற்கு அருவருப்பு தரும் சகிக்க முடியாத பிண்டமாக காட்சியளிக்குமோ, அப்படித்தான் காட்சி அளிக்கின்றது வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் சிலை. உடல் முழுவதும் பாசிச நோய் பரவி அழுகி நாற்றமெடுக்கும் நிலையில் உள்ள நோயாளிகளால் மட்டுமே இது போன்ற அபத்தங்களை கைதட்டி ஆராவரித்து மகிழ முடியும். இந்த சிலை வருங்கால இந்திய வரலாற்றில், ஒரு இருண்ட காலத்தில் மக்கள் ரத்தம் குடித்த கொடுங்கோலனால் அவனது அதிகாரத் திமிரைக் காட்ட கட்டப்பட்ட கட்டுமானமாகவே பார்க்கப்படும். ரோமாபுரி பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் கதை இனி வரலாற்றில் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இந்தியா திவாலாகிக் கொண்டு இருக்கும் போதும் 3000 கோடிக்கு சிலைவைத்த மோடியின் கதை இனி பேசப்படும். இந்த சிலை வைத்ததன் மூலம் மோடி வரலாற்றில் தோன்றிய மோசமான அரசியல்வாதிகளின் வரிசையில் அழியாத இடத்தை பிடித்துக் கொண்டுவிட்டார்.

modi and patel statueஉலகில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 7 கோடியே 2 லட்சம் மக்கள் மிக மோசமான வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 38 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்பநலம் மற்றும் சுகாதார அமைப்பு (National Family and Health Survey) மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ள குழந்தைகளில் 72 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிச் செய்தியையும் தெரிவித்துள்ளது அந்தப் புள்ளி விவரம். உலகில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளில் 50 சதவிகிதக் குழந்தைகள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்கின்றன சமீபத்திய புள்ளி விவரங்கள். அதில் பிஜேபி ஆளும் மாநிலமான உத்திரப் பிரதேசம் 46 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 42 சதவீதமும், ராஜஸ்தான் 39 சதவீதமும், ஜார்க்கண்ட் 45 சதவீதமும் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படும் மாநிலங்களின் பட்டியலில் பெரும்பான்மையை வகிக்கின்றது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட ஏழைத்தாயின் மகனுக்கு நேரமுமில்லை, மனமுமில்லை.

அவரது எண்ணம் சொல், செயல், சிந்தனை என அனைத்தும் பார்ப்பன பாசிசத்தாலும் கார்ப்ரேட் அடிவருடித்தனத்தாலும் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் தன்னுடைய கனவுகளில் வரும் ஏழைகளின் பிச்சைப் பாத்திரங்களைக் கூட பிடுங்கி இரும்பு மனிதனின் சிலைக்காக கொடுத்திருக்கின்றார். அப்படி வல்லபாய் பட்டேலின் மீது மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் அளப்பறிய மரியாதை வர என்ன காரணம்?. அது அவர் காந்தி கொலையில் மூளையாக செயல்பட்டதால் ஏற்பட்ட மரியாதையாக இருக்கலாம், காங்கிரசிஸில் ஊடுறுவி நாட்டில் காவி தீவிரவாதம் தழைக்கவும், தலைதூக்கவும் அரசு இயந்திரத்தை பயன்படுத்தியதற்காக இருக்கலாம். நமக்கெல்லாம் தெரியாது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும்படி காஷ்மீரை ஆண்ட இந்து மன்னரை ஒப்புக் கொள்ள வைக்க பட்டேல் மோடியின் சித்தாந்த ஆசானான கோல்வால்கருக்குக் கடிதம் எழுதி உதவி கேட்டது. ஒருவேளை பட்டேலின் அந்தப் பணிவாக கூட இருக்கலாம். இல்லை பார்ப்பனர்களின் வரலாற்று புரட்டான சோமநாதர் ஆலயத்தைக் கட்ட அவர் காரணமாக இருந்ததாரே அதுவாகக் கூட இருக்கலாம், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா என்ற இல்லாத தேசத்தை அடாவடித்தமான முறையில் துப்பாக்கிகள் முனையின் உருவாக்கி, இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக்கூடமாக மாற்றினாரே, அதுவாகவும் இருக்கலாம். இப்படியாக பட்டேலை மோடியும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் கொண்டாடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் காரணங்கள் எதுவானாலும் இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பு யூனிட்டி’யால் இந்தியா என்ற நாட்டை வரும் காலங்களில் ஒற்றுமையாக வைத்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்திய ஆளும் வர்க்கம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தி இருக்கும் சமச்சீரற்ற வளர்ச்சியும், பார்ப்பன பாசிசத்தால் திணிக்கப்படும் ஒற்றை பண்பாட்டுத் திணிப்பும், வடகிழக்கு மாநிலங்களில் குமுறி எழுந்து கொண்டிருக்கும் தேசிய இனப் போராட்டங்களும், இந்திய அரசின் ராணுவ அத்துமீறல்களும் இந்த நாட்டை இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் கூடிய விரைவில் துண்டு துண்டாக உடைக்கத்தான் போகின்றது. அதற்கான அனைத்து புற சூழ்நிலைகளும் மிக வலுவாக பார்ப்பனியத்தாலும், முதலாளித்துவத்தாலும் தினம் தினம் உருவாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. இந்தியாவில் வறுமை தேசிய சராசரி 21 சதவீதம் என்றால், அதில் தென் இந்தியாவின் பங்கு 9 சதவீதமும், வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வறிய மாநிலங்களில் பீகார் வறுமை விகிதத்தில் 43 சதவீதம் என முன்னிலை வகிக்கின்றது. இதுதான் இந்திய ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கும் புற்றுநோய் வளர்ச்சி. எனவே ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் ‘அகண்ட இந்து நாடு’ என்ற கனவு ஒரு பழம் கனவாக மாறி, ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் நாள் கூடிய விரைவில் வரத்தான் போகின்றது. அந்த அச்சத்தின் வெளிப்பாடாக கூட இந்த சிலையை நாம் பார்க்கலாம்.

எப்படி பட்டேல் இந்தியா என்ற நாட்டை இராணுவத்தின் மூலம் அச்சுறுத்தி கட்டமைத்தாரோ, அதே போலவே மோடி இந்த சிலை அமைப்பதற்காக 927 ஏக்கர் விவசாய நிலத்தை மிரட்டிப் பறித்திருக்கின்றார். இதன் மூலம் பட்டேலின் ஆன்மாவை மானசீகமாக மோடி ஆற்றுப்படுத்தி இருக்கின்றார். இப்போதே கேவாடியா, கோத்தி, வாகோடியா, லிம்டி, நகவரம், கோரா ஆகிய கிராமத்தைச் சேர்ந்தோர் இந்த சிலைக் கட்டுமானத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்கள் வாழ்க்கையை அழித்து கட்டப்பட்ட அந்தச் சிலையை அவர்கள் அண்ணாந்து பார்த்து காறித் துப்புகின்றார்கள்.

நீங்கள் இனி இந்தியாவில் தினம் தினம் பட்டினியால் சாகும் மனிதர்களையும், உடுக்க உடையற்று, படுக்க இடமற்று விலங்குகளை விட கீழான நிலையில் வாழ நிர்பந்திக்கப்பட்ட மனிதர்களையும், மாடுகளைக் காக்க மனிதர்களைக் கொல்ல கையில் ஆயுதங்களுடன் ரத்தவெறியோடு செல்லும் மதவெறியர்களையும், நவீன இந்தியா பேண்டுவைத்த மலத்தை கையில் உறை கூட இல்லாமல் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களையும், பங்குச் சந்தை வாசலில் பணத்தை தொலைத்துவிட்டு ஒரே நாளில் பிச்சைக்காரனாக மாறிய பேராசைக்காரர்களையும், வறண்டு போன விவசாய நிலத்தில் தூக்குமாட்டியும், விஷம் குடித்தும் இறந்து கிடக்கும் விவசாயிகளையும், தெருத்தெருவாய் வேலை தேடி பாதம் தேய்ந்து ஓய்ந்து நடக்கும் இளைஞர்களையும், மிக எளிதாக வல்லபாய் பட்டேலின் சிலைமீது ஏறி நின்று பார்க்க முடியும். எல்லாவற்றிலும் தோற்று அம்மணமாய் நிற்கும் மோடியின் அருவருப்பு நிறைந்த ஆட்சியைக் காண உலகிலேயே மிகப் பெரிய இந்த சிலை பயன்படலாம். அசிங்கத்தை உயரத்தில் இருந்து பார்ப்பது எவ்வளவு அசிங்கமானது!

- செ.கார்கி