jallikattu rally marina

பொங்கலுக்கு முன்பாக 8 ஜன 2017 அன்று, மெரினாவில் நடத்திய அடையாள ஊர்வலமே ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கான இந்த ஆண்டு தொடக்கம். அடுத்து 13 ஜன 2017 அன்று, மெரினாவில் ஜல்லிக்கட்டு ஆதரவு மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது. இவ்விரண்டும் தொண்டு நிறுவனமான பிக்கி (BiCCI- Biodiversity Conservation Council of India) மற்றும் Care & Welfare தொண்டர்களால் அவர்களது சமூக வலைப்பின்னலில் உள்ள வலைதள மாணவர்கள் - இளைஞர்களால் நடத்தப்பட்டதே. பொங்கலுக்குப் பின் மதுரை அலங்காநல்லூரில் நடத்தப்பட்ட ஊர்வலம், விடிய விடிய அறப்போராட்டம் எல்லாம் பிக்கியால் ஏற்பாடு செய்யப்பட்டதே. ஆனால், வலைதள நண்பர்கள் தாமாக சேர்ந்து, தொடங்கி நடத்தியது என்ற பொய்யை ஊடகங்களைப் போன்றே பலரும் திரும்பத் திரும்ப பரப்புகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், ம.க.இ.க. என பலரும் கூட ஜல்லிக்கட்டு போராட்டம் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களால் திட்டமிட்டு தூண்டப்பட்டது என்பதைக் குறிப்பிட மறுக்கிறார்கள். தொண்டு நிறுவனத் திட்டமிடல், செயல்பாடு வலிமையுடையதாக இருக்கிறது என ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும் என்பதால் மறைக்கிறார்களோ? ஆனால் இதைக் குறிப்பிட்டு தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டிய தேவை இப்பொழுது உள்ளது. ஆளும்கும்பல் மீதுள்ள தமது வெறுப்பை வெளிகாட்ட ஒரு வடிகாலாக இப்படி அரசியலற்ற முறையில் மாணவர்கள் - மக்கள் தொண்டு அமைப்புகள் பின்னே எதிர்காலத்தில் திரளாமல் தடுக்க வேண்டிய கடமையும் உள்ளது.

***

ஐக்கிய நாடுகள் (United Nation)அவை, சுற்றுச்சூழல் - இயற்கை பாதுகாப்பு பற்றி பல ஆண்டுகளாகத் திட்டமிடுவதும், அறிக்கைகள் வெளியிடுவதும் மாநாடுகள் நடத்துவதும் நமக்குத் தெரிந்ததே. இதனடிப்படையில் பல்லுயிர் பாதுகாப்பு மாநாடு - Convention on Biological Diversity (CBD) திட்டத்தை 1992ல் "ரியோ எர்த் சம்மிட்" மூலம் முன் வைத்து இதுவரை 168 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன. 196 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியாவும் இதில் கையெழுத்திட்டு பல்லுயிர் பாதுகாப்பிற்கான சட்ட மசோதாவை 2002ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

UN-CBD அமைப்பு, COP திட்டம் Aichi இலக்கு என இயற்கை - உயிரியல் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வழிநடத்தி வருகிறது. இதே துறையில் 30 ஆண்டுகளாக கவனம் செலுத்திவரும் Conservation International (CI) என்ற தொண்டு அமைப்பும் இதில் இணைந்து முக்கிய பங்காற்றி வருகிறது. இத் திட்டத்திற்காக CEPF என்பது நிதி நிர்வாக பணிபுரியும் நிறுவனமாகும். CI-ன் Corporate Partners பட்டியலில் வால்மார்ட், கொக்கோ கோலா, ஷெல், மான்சாண்டோ, நெஸ்ட்லே பொன்ற பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் உள்ளன. (http://www.conservation.org/partners/Pages/default.aspx)

பல நாட்டு அரசு அமைப்புகளும், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் இதில் அங்கம் வகித்தாலும் இயற்கை - பல்லுயிர் பாதுகாப்பு ஆய்விலும், பணியிலும் CI போன்ற தொண்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த வலைப்பின்னலில் உள்ள தொண்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொண்ட ஒர் ஆய்வறிக்கையின் படி இவ்வுலகில் இயற்கை வளம், மிருகங்கள் அதிகம் உள்ள பகுதிகள் தனியே கண்டறியப்பட்டன. இவை உலக வரைபடத்தில் நாடு, இனம், மதம், மொழி, பண்பாடு கடந்த அளவில் hotspot இடங்கள் என அழைக்கப்படுகின்றன. இவர்கள் பணிபுரிய கவனம் செலுத்தி வரும் பகுதிகளே hotspot ஆகும். இந்தியாவில் இரு பெரும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை 1. North - East Himalayas என சில வடகிழக்கு மாநிலங்கள் 2. Western Ghates என சில தென் மாநிலங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருநெல்வேலி என சில பகுதிகள் மட்டுமே அடக்கம்.

பிக்கி என்பது Conservation International (CI) என்ற உலக hotspot திட்டத்தின் கீழ் செயல்படுவதாகவும், UNCBD விதிமுறைப்படி செயல்படுவதாகவும் சொல்கிறது. ஆனால் நிதி ஆதாரம் பற்றிய விவரம் இல்லை. CEPF மூலம் நிதி பெறும் தொண்டு நிறுவனமாக இருக்கலாம் அல்லது வேறு வழியிலும் இருக்கலாம். ஆனால் வெளிநாட்டு நிதி பெறும் பன்னாட்டு வலைப்பின்னலில் உள்ள தொண்டு நிறுவனமே பிக்கியாகும். (http://biccindia.org/biodiversity/bio-diversity-hotspots/)

தமிழ்நாட்டில் இயற்கை - பல்லுயிர் பாதுகாப்பு என்பதில் அவர்கள் ஆய்வு செய்து கண்டுபிடித்தது நாட்டுமாடு இனப்பெருக்க (breed) அழிவாகும். இதுவே இயற்கை விவசாயம், மரபு விந்தணு, A2 பால் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும். நாட்டுமாடு இனப்பெருக்கத்தில் கோயில்காளை, பொலிகாளை என்ற பெயரில் உள்ள காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கும் இடையே உள்ள சிறிய தொடர்பை கண்டறிகிறார்கள். இவ்விளையாட்டுகள் பீட்டா (PETA)வின் முன்முயற்சியால் தடையாகியுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் போராடிவருபவர்களும் நிறையபேர் இருந்தனர்.

ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்களும், மதுரை சுற்று வட்டாரங்களில் இப்போட்டியால் அதிகம் ஆதாயமடைபவர்களும் தேவர் சாதியினர்; மற்ற மாவட்டங்களில் மஞ்சு விரட்டு, ஏறுதழுவுதல், எருது விடுதல், ரேக்ளா பந்தயம் மூலம் அதிகம் ஆதாயமடைபவர்கள் மற்ற இடைநிலை சாதியினர் என்பதையும் அறிந்து முக்கியமான நபர்களை இணைக்கின்றனர்.

jallikattu marina beach protest

கொம்பை நாய் இனப்பெருக்க மையம் வைத்திருப்பவரும், நாட்டு நாய் இனப்பெருக்கம்-வளர்ப்பு பற்றி ஊக்குவிக்கும் பல அமைப்புகளின் அங்கத்தினருமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிரீநிவாஸ் ரத்தினசாமி பிக்கியின் தலைவர். இவர் சைதாப்பேட்டையில் நடத்திவந்த நாட்டு நாய் இனவிருத்தி மையம் 2015 மே மாதம் மூடப்பட்டதற்கு பீட்டாவே காரணம்.

சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி என்பவரே பிக்கியின் நிர்வாக அறங்காவலரும் ஆவார். திருப்பூர்-ஈரோடு அருகே குட்டபாளையத்தில் இவருடைய காங்கேயம் காளை இனப்பெருக்க பண்ணை உள்ளது. இவரது பல ஏக்கர் விவசாயமும், பால் - கால்நடை உற்பத்தியும் நலிவடைந்ததற்கு ஜல்லிக்கட்டு தடையும், ஜெர்சி பசு இறக்குமதியும், செயற்கை கருத்தரிப்பு புகுத்தலும் காரணம்.

மேலும், அறம் (ARHAM - Activist for Righteous Harmony of Animals Movement) அமைப்பின் பாலகுமார் சோமு, பாண்டியன் சரஸ்வதி யாதவ் கல்லூரி நிர்வாக இயக்குனர் வரதராஜன் பாண்டியன், மீன்-மஷ்ரூம்-பால் பண்ணை அதிபரான ஓ.சரவண குமார், தொழிலதிபர் கோமக்கம்பேடு ஹிமாக்கிரன் அனுகுலா, XLRI பட்டதாரியும் சிவகங்கை - புலிக்குளம் நாட்டுமாடு இனவிருத்தி செய்யும் கால்நடை பண்ணை முதலாளியுமான ராஜா மார்த்தாண்டன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் ஆகியோர் பிக்கியின் நிர்வாக உறுப்பினர்கள். இவர்கள் பீட்டாவால் பல வகைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டு அல்லது பாதிப்பை உணர்ந்து ஒரே புள்ளியில் இணைந்தவர்கள். இவர்களுடன் Care & Welfare, Bhumi NGO, தோழன், அறப்போர் இயக்கம், Lite the Lights, மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பல தொண்டு நிறுவனங்களும் இணைக்கப்பட்டன.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் மற்றும் வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் திருச்சி ராஜேஷ் ஆகியோர் ஆதரவாளர்களாக இணைக்கப்படுகின்றனர். (இதில் நாம் தமிழர் கட்சியின் இ.த.சீமான் பிக்கியின் அறங்காவலர் என்று அறம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.)

ஹிப் ஹாப் ஆதி, RJ பாலாஜி, ராகவா லாரன்சு, GV பிரகாஷ், சிம்பு போன்ற தமிழ்த் திரையுலகினராலும் மாணவர்கள்-இளைஞர்கள் போராடத் தூண்டப்பட்டனர். இவர்களுள் பலர் பிக்கியின் வலைப் பின்னலில் இணைந்த ஆதரவாளர்களே!

பிக்கியின் தன்னார்வலத் தொண்டர்கள் 4 வருடங்களாக இது தொடர்பாக பிரச்சாரம் செய்து, கிராமத்து இளைஞர் முதல் நகரத்து மாணவர்கள் வரை ஆயிரக்கணக்கானோரை தங்கள் வலைதள இணைப்பில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சோசியல் மீடியாக்களில் நூற்றுக்கணக்கான ட்ரால்ஸ் (Troll cinema போன்று), மீம்ஸ் (Chennai Memes போன்று), பக்கங்கள் (We do Jallikkattu, Save Jallikkattu போன்று) மூலம் ஆயிரக்கணக்கான வலைதள பதிவுகள் இட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். The Wire, BBC Tamil, bit.ly, Put Chutney, Smile Settai போன்ற வலைதள TV, பத்திரிக்கைகளில் செய்தியாக்குவதன் மூலம் பரவலாக்கினர்.

இப்படி 4 வருடமாக திட்டமிடப்பட்டு, பலர் இணைக்கப்பட்டு, பரப்புரை செய்துதான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துள்ளது.

திரை பிரபலங்கள் ஆளும் கட்சிகளுக்கு ஜால்ராவாக மாறி, அடக்குமுறை வருவதற்கு முன்பே துரோகமிழைத்து ஓடிப்போய், தம்மை தற்காத்துக் கொண்டது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை பிக்கி நிர்வாகிகளும், அதன் ஆதரவு தலைவர்களும் அதே துரோகமிழைத்தார்கள் என்பதும்.

***

நாயகன் (காளை) × வில்லன் (பீட்டா) என்ற கதை மரபு சூத்திரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டை தேர்வு செய்துள்ளனர். பலர் இதுபோலவே கர்நாடகாவில் கம்பாளா, கேரளாவில் சேத்தாளி-காளபூட்டு, பஞ்சாப்பில் பையில்லகடா எனத் திட்டமிடக் கோருகிறார்கள். Smile Settai என்ற நிகழ்ச்சியில் பிக்கி நிர்வாகிகளே ஜல்லிக்கட்டு ஒரு அடையாளக் குறியீடுதான் என ஒத்துக் கொள்கிறார்கள்.

"நாட்டு மாடு, நாட்டு நாய்க்கு எதிராக (PETA) பீட்டாவின் நடவடிக்கைகள், ஜெர்சி பசு, ஹெச்.எஃப் பசு, டாபர்மேன் நாய், பொமேரனியன் நாய் போன்று வெளிநாட்டு விலங்கினங்கள் இறக்குமதி செய்வதையும் அவற்றின் செயற்கை விந்தணு இனப்பெருக்க முறையையும் அதிகரித்து, வணிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதாகவே உள்ளன." இது (BiCCI) பிக்கியின் கூற்று.

உலகளவில் உயிரியல் தொழில் நுட்பத்தால் விளைகிற சந்தையே அடுத்து ஆதிக்கம் செலுத்தும். அதற்கான ஆராய்ச்சிக்கும் மூலாதாரத்திற்கும் இயற்கையும், பல்லுயிர்களும் அடிப்படை தேவை. சுய லாபத்திற்காக அவற்றை அழித்து வருவது பன்னாட்டு கார்ப்பரேட்டு கம்பெனிகளே. அவர்களிடமிருந்துதான் அவற்றைக் காப்பாற்றவும் வேண்டியுள்ளது. முதலாளித்துவ சமூகவியலாளர்களும், தொண்டு நிறுவனங்களும் இயற்கை-பல்லுயிர் அழிவின் ஆபத்தைச் சுட்டி, பாதுகாத்து தடுக்கும் பணியை செய்து வருகிறார்கள். அதற்கான நிதியையும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களே தருகின்றன. இது நேர் முரணாகத் தோன்றும். அதாவது செயற்கை × இயற்கை இனப்பெருக்க முரணில் இரு தனி பிரிவுகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரிந்து நிற்கவில்லை. பீட்டாவின் செயற்கை இனப்பெருக்க முறை மற்றும் பிக்கியின் இயற்கை இனப்பெருக்க முறை என்கிற முரணை தனக்குள்ளேயே அனுமதித்து எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகின்றன. கார்ப்பரேட் நிறுவன பன்முகத்தன்மை இது. சமூகத்திலுள்ள பல முரண்பாடுகளையும் கார்ப்பரேட்டின் பன்முகத்தன்மையோடே சேர்த்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

பீட்டாவும், பிக்கியும் இல்லாமல் நமது இயற்கை விவசாயம், மரபு கருத்தரிப்பு, ஏ2 பால் உற்பத்தி போனறவற்றை மீட்டெடுத்து பாதுகாக்க முடியும். பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிரான போராட்டங்களை வளர்த்தெடுக்கிற கட்சியும், அரசியலும்தான் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் அடையாளப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

***

கடந்த இரண்டு வருடமும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பிக்கி நடத்தியிருந்தாலும், ஜெயலலிதா மறைந்த பிறகு உள்ள ஆளுங்கட்சி அதிமுக-வின் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலைப் புரிந்து இந்த ஆண்டு கூடுதலாக செயல்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது. எனினும் மூவாயிரம் பேர் மெரினாவில் கூடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தோம், இவ்வளவு பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை என Chutney Chat நிகழ்ச்சியில் பிக்கி நிர்வாகிகள் குறிப்பிடுகிறார்கள்.

போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்குப் பின், பிக்கி வலைப்பின்னலில் உள்ளவர்களின் நடவடிக்கைகள்... மரம் நடுவது, மீனவர் இழப்பிற்கு நன்கொடை கேட்பது, போட்டியை அரசு ஆதரவோடு நடத்துவது, நிகழ்ந்ததை எண்ணி புளகாங்கிதம் அடைவது போன்றதாகவே உள்ளன. போலீசின் வன்முறையை பிக்கி நிர்வாகிகள் கண்டிக்கவில்லை; போராடவில்லை.

நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், ம.க.இ.க. போன்ற ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள்தான் போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிக் கொண்டுள்ளனர். இப்போராட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் கேடுகெட்ட துரோக நடவடிக்கைகளை மாணவர்களும், இளைஞர்களும் ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இனி அரசியல் இலக்கற்ற தொண்டு அமைப்புகளின் பின்னே திரள்வதைத் தவிர்க்க வேண்டும்.

- ஞாலன்

Pin It