முந்தைய பகுதி: பெண்களும் சமூகமும்

பாலுறவுக் கருத்தியல்

பொதுவாக, நாட்டில் நடைபெறும் அரசியல், அரசியல் கட்சிகள் நிகழ்வுகளுக்கு அப்பால் நாளேடுகளில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று விபத்துச் செய்திகள், இரண்டாவது வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற செய்திகள், மூன்றாவது பாலுறவு மற்றும் அதன்பின் விளைவுகள் பற்றியதான செய்திகள்.

இந்த மூன்றிலுமே அப்பாவி மனிதர்கள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழக்கிறார்கள். படுகாயமடைகிறார்கள். அல்லது அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள். நிர்க்கதியாக, நிராதரவாக விடப்படுகிறார்கள். என்றாலும் இதில் இவை அனைத்தையும் பற்றி ஆராய்வது இங்கு நமக்கு நோக்கம் அல்ல. நமக்கு நோக்கம் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட பாலுறவுச் சிக்கல் சார்ந்த நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதன்மீது பெண்ணிய நோக்கில் மனித உரிமை நோக்கில் நமது சிந்தையைச் செலுத்துவதே. எனவே, அந்த வகையில் சில செய்திகள்.

தமிழகத்து வட மாவட்டப் பகுதிகளின் வட்டத்தலைநகர் ஒன்றில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் ஒருவர், வழக்கு தொடர்பாக அடிக்கடி காவல் நிலையம் செல்லும்போது மகளிர் காவல் நிலையத்தில் அறிமுகமான தலைமைக் காவலர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். பதினைந்து ஆண்டுகள் திருமண வாழ்க்கை இனிதே தொடர 13 வயதிலும் 10 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள்.

வழக்கறிஞர், வழக்கறிஞர் தொழிலில் மட்டுமல்லாது வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு நல்ல வருமானம் ஈட்ட, மகிழுந்து, பங்களா என வசதி பெருகுகிறது. மகிழுந்துக்குத் தனியே ஓட்டுநர் அமர்த்தப்படுகிறார். அவர்தான் மனைவியை, குழந்தைகளை எங்கும் அழைத்துச் செல்வார்.

சந்தர்ப்பமும் சூழலும் வாய்த்தால்தான் எப்படிப்பட்ட நிலையிலும் உறவு பற்றுமே. அதேபோல ஓட்டுநருக்கும் வழக்கறிஞர் மனைவிக்கும் உறவு ஏற்பட்டுவிடுகிறது. நாளாவட்டத்தில் இது வழக்கறிஞருக்குத் தெரியவர, குடும்பத்தில் சிக்கல் எழுகிறது. மகிழுந்து ஓட்டுநர் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். மனைவியும் காவல் பணிக்குச் செல்லக்கூடாது எனத் தடுக்கப்படுகிறார். எனினும், இரகசியமாக உறவு தொடர்கிறது. வழக்கறிஞர் ஊரில் இல்லாத நாள்களில் ஓட்டுநர், வழக்கறிஞர் மனைவி சந்திப்புகள் நடைபெறுகின்றன. இது வழக்கறிஞருக்குத் தெரிய வர, மனைவியைக் கடுமையாகக் கண்டிக்கிறார்.

இந்நிலையில் ஒருநாள், வழக்கறிஞர் தன் படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். மனைவியையும், ஓட்டுநரையும் காணவில்லை.

காவல்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர புலனாய்வில் ஈடுபட்டு, இருவரையும் தேடத் தொடங்க, இது பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தியாகிறது. இதைத் தொடர்ந்து, காவல்துறை தங்களைத் தேடுவதையறிந்த ஓட்டுநரும், வழக்கறிஞர் மனைவியும், சுற்றுலாத் தலம் ஒன்றின் விடுதி அறையில் கதவை உட்புறம் தாளிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வருகிறது.

இதேபோல, இன்னொரு சம்பவம்.

முக்கியமான அரசியல் கட்சி ஒன்றின் ஊராட்சி மன்றத் தலைவர். ஒன்றிய அவைத் தலைவராகவும் செயல்பட்டு வருபவர். இவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் இனிதே இல்வாழ்க்கை. 12 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும். திடீரென்று ஒரு நாள் நள்ளிரவில் படுக்கை அறையில் ஏதோ மர்மமான ஒரு பொருள் வெடித்துத் தலைவர் பிணமாகிறார். சம்பவத்துக்குக் காரணம் புரியாமல் காவல்துறை துப்பு துலக்கும் முயற்சிகளில் இறங்க உண்மை வெளிப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தலைவர் ஒரு விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் கிடக்க, மனைவி தினம் சென்று உணவு கொடுத்து வந்திருக்கிறார். அப்போது எதிர் வீட்டில் இருந்த மணமாகாத ஒரு இளைஞர் இவரை ஈருளியில் ஏற்றிச் சென்று உதவியிருக்கிறார். தினப்படி பழக்கம் உறவாக மாறியிருக்கிறது.

மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு வந்த தலைவருக்கு இந்த உறவு தெரிய வந்திருக்கிறது. மனைவியையும், எதிர் வீட்டு இளைஞரையும் கண்டித்திருக்கிறார். அவ்வளவுதான். இது சரிப்பட்டு வராது, இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் எனத் தலைவரின் மனைவியும், இளைஞரும் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனர். பக்கத்துக் கிராமத்தில் வெடி மருந்து வியாபாரியிடம் சில நாட்டு வெடிகுண்டுகளையும், பெட்ரோலையும் வாங்கி வந்து, நள்ளிரவில் அறையில் வைத்து, தலைவரைத் தீர்த்துக் கட்டுகின்றனர். நிகழ்வு உறுதியாக, காவல் துறை இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

அடுத்து ஒரு சம்பவம். மேலே சொல்லப்பட்ட இரு சம்பவங்களுமே கணவர்கள் தீர்த்துக் கட்டப்பட்ட சம்பவங்கள். இது குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம்.

கட்டடத் தொழிலாளி ஒருவர். பணியிடத்தில் சித்தாள் ஒருவருடன் உறவு ஏற்பட்டு திருமணம் செய்து கொள்கிறார். பத்தாண்டு இல்வாழ்க்கை. 8 வயதிலும், 6 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள்.

தன்னுடன் திருமணம் நடப்பதற்கு முன்பிருந்தே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்து வந்திருப்பது தெரிகிறது. மனைவி வேலைக்குப் போகக்கூடாது என்கிறார். கண்டிக்கிறார். மனைவி கேட்பதாக இல்லை. தொழிலாளிக்குக் கோபமும் ஆத்திரமுமாகக் குமுறுகிறது. மனைவியைப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறி சிந்தையைச் சிதைக்கிறது. மனைவி வெளியே போயிருந்த சமயம். குளிர்பானம் வாங்கி வந்து அதில் விஷத்தைக் கலந்து குழந்தைகளுக்குத் தந்துவிட்டு, தானும் குடித்து விடுகிறார். குழந்தைகள் இருவரும் பிணமாக, இவர் மட்டும் உயிர் பிழைக்க, காவல் துறையால் கைது செய்யப்படுகிறார்.

கேட்பதற்கே மனம் பதைபதைக்கிற இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் இப்படி அன்றாடம் நாளேடுகளில் செய்திகளாக வெளி வந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

முதலிரண்டு சம்பவங்களையும் நினைத்துப் பாருங்கள். கணவன் அல்லாது வேறு ஒரு நபருடன் தொடர்பு கொண்ட மனைவிகள், கணவனிடமிருந்து சட்டப்பூர்வ மணவிலக்கு பெற்றிருக்கலாம். பெற்று வேறு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். அப்படியில்லாமல் கணவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏன், எப்படி ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள், மன நிலைகள் என்ன? மூன்றாவது சம்பவத்தில் கணவன் மனைவியை மணவிலக்கு செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் கணவன் குழந்தைகளைக் கொன்றது ஏன்? அப்படி என்ன வெறி? இப்படிப்பட்ட வெறி ஏன் எப்படி ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன?

இப்படி நாம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் பல செய்திகள் நமக்குப் புரியும். இதற்கான பின்னணிகள் சமூகக் காரணிகள் தெரியவரும்.

இப்படி யோசித்துப் பார்ப்போம். முதலிரண்டு சம்பவத்திலும், மனைவிகள் மணவிலக்குப் பெற விரும்பாதது, தான் விரும்பிய மற்ற உறவாளர்களோடு வாழ முடியாதது, வாழ முயலாதது ஏன்? அப்படி மணவிலக்குப் பெற்று பிறரோடு வாழ்வது சமூகத்தில் மதிப்புக் குறைவான, தாழ்வான மதிப்பீட்டிற்குள்ளாக்கும் என்பதாலா, அல்லது கணவனது சொத்துக்களை இழக்க நேரும் என்பதாலா? இப்படி ஏதோ ஒன்று அல்லது இரண்டும் சேர்ந்துதானே அம்மனைவிமார்களை, பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், அல்லது அது பற்றிச் சிந்திக்கவொட்டாமல் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தை அநாதையாக்குகிறது.

மூன்றாவது சம்பவத்தில் கணவன் மனைவியை மணவிலக்கு செய்து, தான் விரும்பும் வேறு யாரையாவது மணந்து வாழ முயற்சிக்காமல் சொந்தக் குழந்தைகளையே கொல்லத் தூண்டியது எது? மனைவிமேல் உள்ள ஆத்திரம், கோபம், வஞ்சம். இந்த இரண்டு குழந்தைகளுமே முழுமையாகத் தனக்குப் பிறந்தவைதானா என்கிற சந்தேகம். தனக்கு என்று உடைமையாக்கப்பட்ட மனைவி என்கிற ஒரு பொருளில், குழந்தைகள் என்கிற ஒரு பண்டத்தில் மாற்று நேர்ந்து விட்டது என்கிற குமைச்சல், வெறுப்பு, அதைச் சகிக்க இயலாத ஆத்திரம். இவைதானே தான் கொஞ்சிக் குலாவிய குழந்தைகளையே ஈவு இரக்கமின்றி கொன்றழிக்கத் தூண்டி யிருக்கிறது?

ஆக, இதிலிருந்து என்ன தெரிகிறது. மேற்குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிலுமே பொருளியல் காரணங்களுக்கு, அதாவது, காசு, பணம், சொத்து, பாகம் இவை போன்ற காரணங்களுக்கு அப்பால் உணர்வு நிலை சார்ந்த கருத்தியல் காரணங்களே மிக முக்கியப் பங்காற்றியிருக்கின்றன என்று தெரிகிறது. கருத்தியல் காரணங்களா? அது என்ன? ஆம். கருத்தியல் காரணங்கள் என்று இப்படிச் சுருக்கமாகச் சொன்னால் பலருக்குப் புரியாது. ஆகவே கருத்தியல் காரணங்கள் என்று நாம் எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்வோம்.

அதாவது நாம் குறிப்பிடும் கருத்தியல் காரணம் என்பது, ஆண், பெண், பாலுறவு, கற்பு முதலான சொல்லாடல்கள் சார்ந்த சிந்தனைகள், அது பற்றி காலம் காலமாக நிலவி வரும் கருத்தோட்டங்கள், அவை சமூகத்தில் செலுத்தி வரும் ஆதிக்கம், அவை சார்ந்த மதிப்பீடுகள், அம்மதிப்பீடுகள் சார்ந்த எண்ணங்கள், மனநிலைகள் ஆகிய இவற்றின் மொத்தத்தையும் உள்ளடக்கியதே. எனவே, கருத்தியல் என்பது இவை மொத்தத்தையும் சேர்த்தே உருவாகின்றன. அல்லது உருவாக்கப்படுகின்றன.

இன்று மேற்குறித்தவை சார்ந்து நிலவி வரும் அல்லது கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்கள் என்ன? ஆண், பெண் உறவு என்பது புனிதமானது, தூய்மையானது, கற்பு நெறி சார்ந்து பேணப்படுவது. இதில் ஆண் கற்பு நெறி பிறழ்ந்தாலும் பிறழலாமே தவிர, பெண் இந்நெறியிலிருந்து இம்மியும் பிசகக் கூடாது. அப்படி பிசகுவது பாவம், கறை, புனிதத்துக்கு ஏற்பட்ட கேடு. எனவே, அந்த நெறி பிறழாமல் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டியது பெண்களுக்கான கடமை என்பதாகக் கற்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோலவே குடும்பம் பற்றியும். குடும்பம் ஒரு கோயிலைப் போன்றது. தூய்மையானது. இந்தக் குடும்பத்தின் தூய்மையைக் கட்டிக் காக்க வேண்டியதே பெண்களின் தலையாய பணி. ஆகவே, குடும்ப உறுப்பினர்களோடு வெளியார் யாரும் உறவு கொள்ளாமல் குடும்பத் தூய்மையைப் பாதுகாத்துக் கொள்வதுடன், ஆயிரம் சிக்கல்கள் இருந்தாலும் அது குடும்பத்துக்குள் இருக்க வேண்டுமே யல்லாது அது வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது. அப்படித் தெரிவது குடும்பத்தின் மரியாதையைத் தோற்றத்தைக் கெடுத்துவிடும் என்பது போன்ற மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

lady_368ஆண், பெண் உறவு குறித்தும், குடும்பம் குறித்தும் இவ்விரண்டிலும் பெண்ணின் இருப்பு மற்றும் பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் ஒழுக்கவியல் கோட்பாடு ஆகியவை குறித்தும் மேற்குறிப்பிட்டவாறு சமூகத்தில் நிலவி வரும் கருத்துத் தாக்கங்கள்தான் நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட பாலுறவு சார்ந்த சம்பவங்களுக்கும் குற்றச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணமாகின்றன.

எனவே, இப்படிப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கவும், இப்படிப்பட்ட குற்றச் செயல்களுக்குத் தூண்டும் அல்லது அதற்குக் காரணமாகும் மேற்குறித்த மதிப்பீடுகளை ஆய்வுக்குட்படுத்தவும், அவற்றைக் கேள்விக்குள்ளாக்கி, அதில் நியாயமான, காலத்திற்குப் பொருந்தி வரும் மதிப்பீடுகள் என்பனவற்றை மட்டும் வழக்கில் கொண்டு, மற்றவற்றை நிராகரிக்கவும், மாற்றியமைக்கவும், புதுப்பித்து புதிய மதிப்பீடுகளைத் தோற்றுவிக்கவும் வேண்டியது, சமூக ரீதியில் மனித நேயத்தில் பற்றும் அக்கறையும் கொண்ட அனைவரது கடமையும் ஆகும். ஆகவே அவை குறித்து முதலில் ஆராய்வோம்.

பாலுறவின் வரலாறு

மனித குலத்தின் பாலியல் உறவு சார்ந்த ஆய்வுகளுக்கு நாம் பல இலட்சம் ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டியிருக்கிறது. மனிதனைப் படைத்தது இறைவனே என்று மதங்கள் கூறிய போதிலும் அது உண்மையல்ல என்பது மத நம்பிக்கையுடையவர்களுக்கே நன்கு தெரியும் என்பதால், அந்தச் சர்ச்சையை விடுத்து மனிதகுலத்தின் பாலியல் வரலாற்றை மட்டும் எடுத்துக் கொண்டு இங்கு நாம் அறிவியல் நோக்கில் அது குறித்து சற்று ஆராய்வோம்.

உயிரினங்களின் பரிணாமத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்பது அறிவியல். இப்பரிணாமத்தை முழுமையாக விளக்க இன்னமும் சில கண்ணிகள் சான்றாதாரமாகக் கிடைக்க, இடைவெளி விட்டுப் போயிருந்த போதிலும் உயிரினங்களின் பரிணாமத்திலேயே மனிதன் தோன்றினான் என்பதே அறிவியலாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை.

உயிரினங்களின் பல்வேறு பரிமாணத்தில் குரங்காயிருந்த உயிரி மனிதக் குரங்காகி, பின் மனிதனாக மாறிய போக்கு பல இலட்சம் ஆண்டு காலத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டு நிகழ்ந்திருக்கிறது. இன்றைக்கு 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நியாண்டர்தால் மனிதன் காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்து விலங்குகளைப் போல அம்மணமாகத் திரிந்தான். எந்த உறுப்பையும் மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு நேர்ந்திருக்கவில்லை. மறைத்துக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணமும் அவனுக்கு எழுந்திருக்க முடியாது. ஆக, அம்மணமாக வாழ்ந்தான்.

இப்படி விலங்குகளைப் போல அம்மணமாக வாழ்ந்த மனித குலத்தில் பாலுறவுகள் எப்படி இருந்திருக்கும் என்று கருதுகிறீர்கள்? இன்றைக்கு உள்ளதுபோல உறவுமுறைகள் - அம்மா, அப்பா, தம்பி, தங்கை, சித்தி, அத்தை என்பது போன்ற உறவுமுறைகள் அன்றைக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. அது பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியவும் தெரியாது. அதற்கான புற நிலையும் அப்போது இல்லை. அப்போது இருந்த உறவெல்லாம் அவர்கள் எல்லாமே மனித உயிரிகள். இதில் ஆண்கள் உண்டு. பெண்கள் உண்டு. அவ்வளவுதான். எனவே, இதில் ஒரு ஆண் எந்தப் பெண்ணோடும் சேரலாம். அதேபோல ஒரு பெண் எந்த ஆணோடும் சேரலாம். இதற்கு எந்தத் தடங்கலும் கிடையாது. இதில் போட்டி பொறாமைகள் இருந்திருக்கலாம். அது இங்கு நமக்குப் பொருட்டு கிடையாது. ஆனால் யாரும் யாரோடும் உறவு வைத்துக் கொள்ளும் நிலை அப்போது நீடித்தது என்பதுதான் முக்கியம்.

அதாவது தெளிவாகச் சொல்வதானால், இன்று தாய் - மகன், தந்தை - மகள் என்று அழைக்கப்படும் இந்த உறவுகள் தீர்மானிக்கப்படாத அந்நாளில் இப்படிப்பட்ட உறவுகளுக்குள்ளே அப்போது பாலுறவு நிலவியது. இப்போதைக்கு நினைத்துப் பார்த்தால் முகம் சுளிக்க வைக்கிற அல்லது அருவருக்கத்தக்கதாகத் தோன்றுகிற இவ்வுறவு, அன்று இயற்கை நியதியாக இருந்தது என்பதே உண்மை. எனினும், மனித சமூகம் வளர்ச்சி அடைய அடைய இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டது. முதன்முதலாகப் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்குமான உறவு தடை செய்யப்பட்டது. இது மனிதகுலப் பாலுறவு வரலாற்று வளர்ச்சியில் முதல் கட்டம் எனப்படுகிறது.

என்றாலும் இந்த முதல் கட்டத்தில் சகோதர, சகோதரிகளுக்கிடையேயான உறவு தொடர்ந்தது. அதாவது ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள்ளேயே பாலுறவு நீடித்தது. இதையும் தடை செய்து முன்னேறியதுதான் மனிதகுலப் பாலுறவு வளர்ச்சியின் இரண்டாவது கட்டம். அதாவது ஒரு தாய்க்குப் பிறந்த பிள்ளைகளுக்குள் பாலுறவு தடை செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் இன்று ஒரு தகவலாகப் படிப்பதால், இது ஏதோ நாம் படிக்கிற வேகத்தில் நிகழ்ந்த மாற்றம் போல் கருதிக் கொள்ளக் கூடாது. மாறாகப் பல இலட்சம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி இது.

அன்றைக்குக் குழுக் குழுவாக வாழ்ந்த மனித சமூக வாழ்வில் இப்படிப் பெற்றோர்கள் - குழந்தைகள், சகோதர - சகோதரிகளுக்கிடையேயான உறவு தடை செய்யப்பட்ட நிலையில்தான் குழு உறுப்பினர்கள் தங்கள் குழுவுக்குள் பாலுறவு வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர்கள் பிரிதொரு குழுவைச் சார்ந்தவர்களுடன்தான் பாலுறவு வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிர்ப்பந்தமும் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில் உருவானதுதான் கண சமூக அமைப்பு. இந்தக் கண சமூக அமைப்பில் கண உறுப்பினர்கள் தங்களுக்குள் பாலுறவு வைத்துக் கொள்ள முடியாது. கூடாது. வேறு கணத்தில் உள்ளவர்களுடன்தான் பாலுறவு கொள்ளவேண்டும். முடியும். ஆகவே இந்த விதிப்படி ஒரு கணத்தில் உள்ள ஆண்கள் அனைவரும், அடுத்த கணத்தில் உள்ள பெண்களுக்குச் சொந்தம். அதேபோல ஒரு கணத்தில் உள்ள பெண்கள் அனைவரும், அடுத்த கணத்தில் உள்ள ஆண்களுக்குச் சொந்தம் என்று ஆகியது.

இப்படிச் சொல்வதால் ஒரு கணத்தில் உள்ள ஆண்கள், அடுத்த கணத்தில் உள்ள பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வருவர் என்பதாகப் பொருள் கொண்டு விடக்கூடாது. காரணம் அப்போதைய மனித உயிரினம் பெண்ணை மையப்படுத்தியே வாழ்வதாக இருந்தது. இதையே தாய்வழிச் சமூகம் என்றும் சொல்வர். அதாவது குழுக்குழுவாய் வாழ்ந்த மனித சமூகத்தில் பெண்ணே குழுவின் தலைவியாக இருந்தாள். அந்தப் பெண் ஈன்ற பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் இவர்களுக்குள்ளே உறவு கொண்டு ஈன்ற பிள்ளைகளும், இன்றைய உறவு முறைகளுக்குள் அடங்காத உறவு கொண்டு வாழ்ந்த பிற அனைவரும் எல்லாமும் அந்தக் குழுவின் உறுப்பினர்கள்.

இந்தத் தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சியாகவே கண சமூக அமைப்பு உருவாகியது. ஆகவே இந்தக் கண சமூக அமைப்பிலும் பெண்ணே முதன்மையானவளாக இருந்தாள். ஆகவே ஒரு கணத்தில் உள்ள பெண்கள் தங்கள் கணத்தை விட்டு எங்கேயும் செல்வதில்லை. மாறாக அவர்கள் தங்கள் கணத்துக்குள்ளேயே இருந்து அடுத்த கணத்தில் உள்ள ஆண்களைத்தான் தங்கள் கணத்துக்கள் அழைத்துக் கொள்கின்றனர். அதேபோலத் தங்கள் கணத்தில் உள்ள ஆண்கள் அடுத்த கணத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

இதன்படிப் பார்த்தால் ஒரு கணத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அந்தக் கணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், ஆண்களில் சிறுவர்கள், மணவயது எட்டாதவர்கள் சிலரைத் தவிர மற்ற அனைத்து ஆண்களும் வேற்றுக் கணத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பர்.

இவர்களில் அடுத்த கணத்திலிருந்து வந்த ஒரு ஆண் இந்தக் கணத்தில் உள்ள எல்லாப் பெண்களோடும் உறவு கொள்வான். அதே போல இந்த கணத்திலிருந்து வெளிச் செல்லும் ஆண் அடுத்த கணத்திலுள்ள எல்லாப் பெண்களோடும் உறவு கொள்வான். இதே போலவே எல்லா கணங்களிலும்.

இப்படிப்பட்ட கண அமைப்புகள் வளர்ச்சியுற்று கணங்களின் சேர்க்கையில் குலங்கள் உருவாக, இந்த குலக்குழு வாழ்க்கையின்போது உருவானதுதான் ஒருவனுக்கு ஒருத்தி - ஒருத்திக்கு ஒருவன் என்கிற ஒரு தார, ஒரு கணவ முறை.

அதாவது ஒரு குழு தனக்குள் உறவு கொண்ட ‘குழு மணமுறை’ மாறி, ஒரு குழுவின் ஆண்களும், மறு குழுவின் பெண்களும் உறவு கொள்ளலாம் என்கிற ‘இணை மண முறை’க்குப் பரிணமித்து, பிறகு ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டுமே, ஒரு பெண் ஒரு ஆணை மட்டுமே மணக்கவேண்டும், அந்த ஒருவரோடு மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்கிற நிலை உருவாக்கப்பட்டது. இதைக் குறிப்பாக ஒர தார முறை என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தாரம் என்றால் மனைவி. அதாவது ஒருவனுக்கு ஒரு மனைவி, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கருத்தை வெளிப்படுத்தும் சொல்லாடல் இது. ஆனால் நடைமுறையில் இது ஒருவனுக்கு ஒருத்தி என்பதாக இல்லை. ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களோடு உறவு கொண்டே இருந்திருக்கின்றனர். இல்லக்கிழத்தியாக ஒருத்தி என்றால் ஆசை நாயகியாகப் பலர். இதேபோல மன்னர்களும், பட்டத்து ராணி ஒருத்தி என்றால், அவரோடு பல மனைவிகளையும் வைத்திருந் திருந்தனர்.

இப்படி ஒரு ஆண் பல பெண்களோடு உறவு கொண்டு, அதே வேளை பெண் மட்டும் ஒரே ஒரு ஆணுடன் மட்டும் தொடர்பு கொண்டவளாக அவனுக்கு மட்டுமே சொந்தமும் விசுவாசமும் கொண்டவளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுவே கற்பு எனவும் பேசப்பட்டது. அதாவது இது ஒருத்திக்கு ஒருவன் என்னும் ஒரு கணவன் முறை. ஆனால் இதை இந்தப் பேரால் வெளிப்படையாகக் குறிப்பிடாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பெயராலேயே குறிப்பிட்டார்கள்.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் கூட பார்த்தோமேயானால், தலைவன் தன் தலைவியைத் தாண்டி பரத்தையோடு உறவு கொண்டிருப்பான். ஆனால் தலைவி தலைவன் பற்றியே நினைவாக, அவன் ஒருவன் மீது மட்டுமே நாட்டமாக அவனையே நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பாள். ஆனால் இதைத்தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உன்னதப் பண்பாடு கொண்ட தமிழ்ச் சமூகம்’ என்று வர்ணிப்பார்கள்.

தமிழ்ச் சமூகம், வீரம், கொடை, நட்பு, விருந்தோம்பல் முதலான உன்னதப் பண்பாடுகளைக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொரு தலைவனும் பரத்தையர் இல்லத்தில் பழியாய்க் கிடந்ததாகவும், தலைவி மட்டுமே தலைவனே கதி என்று ஏங்கிக் கிடந்ததாகவும் சித்தரிக்கும் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் பண்பாட்டை, ஒருத்திக்கு - ஒருவன் என்பதாகச் சொல்லாமல் ஒருவனுக்கு - ஒருத்தி என்று ஏன் பெயரிடவேண்டும் என்பதுதான் கேள்வி.

இப்படிப்பட்ட பெயர் குறிப்பிடல் ஏன் எப்படி வந்தது? சமூகத்தின் பாலுறவு நடவடிக்கைகளில் குழு மணம், இணை மணம், ஒரு தார - ஒரு கணவ முறைகள் எனப் பரிணமித்து வந்த மாற்றங்களில் சமூகத்தில், அதன் வளர்ச்சிப் போக்கில், கட்டமைப்புகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்பதெல்லாம் மிக விரிவான செய்திகள். இங்கு அவையனைத்தையும் பரிசீலிப்பது நமக்கு முக்கியமல்ல. அது சாத்தியமுமல்ல. எனினும், இக்கட்டமைப்பில், ஆண் பெண் உறவுகளில் சமூகத்தில் ஆண் பெண் இருப்பு நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பது பற்றி மட்டும் சற்று பார்ப்போம்.

குழு மண முறையிலும், இணை மண முறையிலும் சமூகத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள். அது பெண்வழிச் சமூகமாகவே நிலவியது என்று பார்த்தோமில்லையா? அந்த நிலை ஒரு தார, ஒரு கணவ முறையில் முற்றாக மாறி ஆண்வழிச் சமூகமாக ஆணாதிக்கச் சமூகமாக உருவெடுத்தது. அதாவது சமூகத்தில் பெண்ணே உயர்நிலையில் தலைமைப் பாத்திரத்தில் இருந்த நிலை மாறி, ஆணே உயர் நிலையில் தலைமைப் பாத்திரத்தில் வைக்கப்படும் நிலை ஏற்பட்டது.

இத்துடன், மக்கள் குழுக் குழுவாக, கூட்டம் கூட்டமாகத் தாங்கள் உழைத்து ஈட்டிய உணவுப் பொருளைக் குழு அனைத்தும் பங்கிட்டு குழு உணர்வோடு உண்டு வாழ்ந்த காலம் மாறி, சமூகம், குடும்பம் குடும்பமாக தனிப் பிரிந்து, ஒவ்வொரு குடும்பமும் தனக்குத் தனக்கு என்கிற தேவையில் அதற்காக உழைக்கவும், பொருள் தேடவும், சம்பாதிக்கவும், அதைக் குடும்பத்தின் சொத்தாக்கவும் ஆன நிலை உருவாகியது. அதாவது, நிலம் அனைத்தும் பொது, இயற்கை வளம் அனைத்தும் பொது என்றிருந்த நிலை மாறி, இந்த நிலம் என்னுடையது, இந்த நிலம் இவருடையது, இந்த வளம் என்னுடையது, இந்த வளம் இன்னொரு வருக்கானது என்கிற நிலை ஏற்பட்டது.

இத்துடன், மக்கள் தங்களுக்குள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து, தங்களிடமிருந்து இயல்பாக உருவாகிய வாழ்வியலைத் தங்களுக்குத் தாங்களே நெறிப்படுத்தி, கட்டுப்படுத்தி, நிர்வகித்து வாழ்ந்த நிலை மாறி அனைத்தையும் மேலிருந்து கட்டுப்படுத்தக் கூடிய, நிர்வகிக்கக் கூடிய ஒரு அமைப்பு, அரசு என்னும் அமைப்பு தோன்றியது.

மக்கள் அந்த அரசுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் விசுவாச மானவர்களாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். சமூகத்தின் எந்த நடவடிக்கைகளும் அரசு சார்ந்து, அரசு நலம் சார்ந்து, அரசு முன்னேற்றம், விரிவாக்கத்திற்கு உரியதாக இருக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்படி ஏற்பட்ட பெரும் அளவிலான மாற்றங்களில் இதையொட்டியே பாலுறவு நடவடிக்கைகளிலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் குடும்ப நலன், அரசு நலன், பிற ஆதிக்க நலன் சார்ந்து பல நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது, அம்மணமாய்த் திரிந்த மனிதன் ஆடையுடுத்தத் தொடங்கியதும், சுதந்திரமாய்த் திகழ்ந்த பாலுறவில் ஒழுக்கவியல் கோட்பாடுகள், நியதிகள் புகுத்தப்பட்டதும், மொழியளவிலும், பாலுறவு உறுப்புகள், பாலுறவு சார்ந்த சொல்லாடல்கள் ஆபாசம் எனத் தீண்டத்தகாததாக, விலக்கப்பட்டவையாக அல்லது இழிவுக்குரியதாக ஆக்கப்பட்டதும் எவ்வாறு என்பதுதான்.

இது எப்படி ஏன் நேர்ந்தது, நேர்ந்திருக்க முடியும் என்பதை அடுத்து பார்ப்போம்.

Pin It