சாதியப் பிரச்சினைகள் பற்றி ஹரிஜன் பத்திரிக்கையில் காந்தியார் எழுதிய கருத்துகளுக்கு அண்ணல் அம்பேத்கர் பதிலளிக்கும்போது "இவ்வாறு நான் அவருக்குப் பதில் அளித்து உள்ளதால், அவர் கூறியுள்ளவை முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிப்பதோடு, அவர் வாய் திறந்தால் பிறர் தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும், தெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச் செய்துள்ளேன்" என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், பாரதியார் மானுட விடுதலைக் கருத்தியலுக்கு முற்றமுழுக்க எதிரானவர் என்று பெரும்பான்மை மக்கள் உணராத நிலையிலும், அவருடைய மானுட விடுதலை எதிர்ப்புச் சிந்தனையை மறைத்து அவரை உத்தமபுத்திராகச் சித்தரிப்பதில் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்களும் பெருமளவு இணைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியது.
 
          பாரதியார் தமிழ் மொழியில் புலமை மிக்கவர். வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் இன்னும் பல வடிவங்களில் செய்யுட்களை இயற்றுவதில் வல்லவர். அதைவிட முக்கியமான விஷயம் பண்டிதர்களிடையே சிறைபட்டுக் கிடந்த தமிழ் மொழியை அவர்களிடம் இருந்து விடுவித்து, எளிய, பாமர மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை நேர்த்தியாகச் செய்தார். இதை நிச்சயமாகப் பாராட்டித் தான் ஆக வேண்டும். ஆகவே புலமையிலும் எளிமையிலும் அவரை ஒரு மகாகவி என்று கூறுவது பொருத்தமே ஆகும். ஆனால் அவர் பெண் விடுதலைக்காகவும், சாதிய விடுதலைக்காகவும் போராடியவர் என்றும் பொதுவுடைமைக் கொள்கையைத் தூக்கிப் பிடித்தவர் என்றும் கூறுவது பொருத்தமற்றது மட்டுமல்ல; உண்மைக்கு நேர் எதிரானதும் ஆகும்.
 
          முதலில் பெண் விடுதலையை எடுத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய 'மாதர்' என்ற கட்டுரையில் "பெண்ணை ஸம்பாத்யம் பண்ணி பிழைக்கவிடக் கூடாது. அவளுக்குப் பிதுரார்ஜிதத்தில் பாகம் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவே பாவிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு, பின் பற்பல கற்பனாவாதங்களை, அவை கற்பனாவாதங்கள் என்று நன்கு புரிந்து கொண்டே அடுக்கிக் கொண்டே போகிறார். இவற்றைக் காணும் ஒருவர் எப்படி எப்படி முயன்றாலும் அவர் ஒரு பெண் விடுதலைவாதி என்று நினைக்கவே முடியாது. பெண்கள் பொருளாதார சுதந்திரம்  அடையாத வரையில் அவர்களுக்கு உண்மை விடுதலை இல்லை. 'பெண்ணைப் பொன் போல் போற்ற வேண்டும்' 'பெண்கள் வீட்டின் கண்கள்' 'பெண்களைக் கண்டால் ஆண்கள் வணங்க வேண்டும்' என்ற பித்தலாட்டஙகள் எல்லாம் புராணக் குப்பைகளிலேயே கூட உள்ளன. இவற்றை மீண்டும் கூறுவதினால் ஒருவர் எப்படி பெண் விடுதலையை முன்னெடுப்பவராகக் கொள்ள முடியும்? அதுவும் ஐரோப்பியப் பெண்கள் வேலைக்குப் போய்ப் பொருளாதார விடுதலை பெற வேண்டும் என்று போராடுகிறார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகும் "ஐரோப்பிய ஸ்திரி ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என் அபிப்பிராயம் பேதப்படுகிறது" என்று கூறியிருக்கிறார் என்றால் பெண் விடுதலை பற்றிய ஞானம் இல்லை என்றோ பெண் விடுதலை கூடாது என்பதற்காகக் குழப்புகிறார் என்றோ தான் நினைக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும் பெண் விடுதலை உணர்வாளர் என்று கூறவே முடியாது.
 
          'பெண்மை வாழ்க' என்று கூறப் புறப்பட்ட பாரதியார் "பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை" என்றும் 'பெண்கள் விடுதலைக் கும்மி'யில் "சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்" என்றும் கூறி, பெண்களின் பாதுகாப்பு ஆண்கள் கையில் தான் என்பதையும், ஆண்களைச் சமையல் வேலை செய்ய வைத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வையும் வெட்டவெளிச்சமாகவே காட்டி இருக்கும் பாரதியாரைப் பெண் விடுதலைப் போராளியாக .. வேண்டாம்.. பெண் விடுதலை விரும்பியாகவாவது எப்படி நினைக்க முடியும்? அவருடைய விருப்பம் எல்லாம், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதன் மூலம் ஆண்கள் அதிக சுகத்தை அனுபவிக்க முடியுமே என்ற ஏக்கத்தில் நிலைத்து இருந்ததே ஒழிய, பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் துளியும் இருந்ததில்லை.
 
          சரி! இப்பொழுது பாரதியாரின் சாதிய விடுதலை உணர்வையும் பொதுவுடைமைக் கருத்தின் மீதான காதலையும் அலசிப் பார்ப்போம். "ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி" என்ற சொற்களை வைத்துக் கொண்டு பாரதியாரின் பொதுவுடைமைக் காதலைப் பலவாறாகப் பாராட்ட வேண்டும் என்று பாரதி புகழ்பாடிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்பாடல் ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதலாளிகள் அரசைக் கைப்பற்றியதில் மகிழ்ந்து எழுதினாரா அல்லது நவம்பர் மாதத்தில் லெனின் ஆட்சியைக் கைப்பற்றியபோது எழுதினாரா என்பது பற்றிய தெளிவில்லை. இப்பாடலில் லெனின் பற்றியோ பொதுவுடைமை இயக்கம் பற்றியோ ஒரு சொல் கூட இல்லை. பிப்ரவரி மாதத்தில் முதலாளிகள் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஜார் அரசன் வீழ்ந்ததைப் பற்றித் தான் பாரதியார் கூறியிருக்கிறார். 
 
          சரி! ஐயமுள்ள விஷயத்ததைப் பற்றி விவாதிக்க வேண்டாம். சோவியத் ஆட்சி அமைந்த பின், சுரண்டலாளர்களுக்கு எதிராக லெனின் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்காக, பாரதியார் தெளிவாகத் தெரிவித்து உள்ள கருத்துகளை அலசிப் பார்க்கலாம்.
 
          பாரதியார் தன்னுடைய 'தொழிலாளர் பெருமை' கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே கூர்மை அடையும் முரண்பாடுகளை விளக்கி விட்டு இந்தியாவில் இது போன்று முரண்பாடுகள் கூர்மை அடைய விடக் கூடாது என்றும் ஆரம்பத்திலேயே கவனித்து கிளர்ச்சிகள் நிகழா வண்ணம் வர்க்க சமரசத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது வர்க்க சமரசம் ஏற்பட வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கமே ஒழிய தொழிலாளர் விடுதலை அடைவது அவருடைய நோக்கம் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே முதலளித்துவவாதிகள் வேண்டுமானால் பாரதியாரைக் கொண்டாடிக் கொள்ளலாமே ஒழிய, பொதுவுடைமைவாதிகள் நிச்சயமாக பாரதியாரை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
          பொதுவுடைமைவாதிகள் பாரதியாரை எற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரை நிராகரிக்க வேண்டியது இல்லையே என நினைப்பவர்கள் அவருடைய செல்வம்(1), செல்வம் (2) என்ற கட்டுரைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். சோஷலிச அரசை அமைத்த பிறகு அதை எதிர்த்துக் கலகம் செய்த உள்நாட்டு வெளிநாட்டுச் சுரண்டலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகைள அறிந்து கொதித்துப் போகிறார். சிலர் சோவியத் அரசைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் அப்படி எழுதி இருக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்று அவருடைய சொற்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. சுரண்டலாளர்கள் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்றும் அன்பினால் மட்டுமே அவர்கள் மனதை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தாங்கள் தாக்கப்படும்போது எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக லெனின் கூறுவதைச் சுட்டிக் காட்டி விட்டு "லெனின் வழி சரியான வழியில்லை" என்றும் இது போன்று சுரண்டலாளர்களைப் பலாத்காரமாகத் தண்டிப்பவர்கள் பரம மூடர்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு 'லெனின் வழி சரியான வழி இல்லை' என்று நேரடியாகவும் 'லெனின் பரம மூடர்' என்று மறைமுகமாகவும் கூறியுள்ள பாரதியாரை முதலாளித்துவவாதிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொள்ளலாம். பொதுவுடைமைவாதிகள் பாரதியாரை நிராகரிக்ககாமல் இருப்பது கொடும் குற்றமாகும்.
 
          சரி! பாரதியாரின் பொதுவுடைமை எதிர்ப்பு இத்துடன் நின்று விடவில்லை. பொதுவுடைமையின் மூலம் மானுட விடுதலை கிடைக்காது (!?) என்று தெளிவாகப் புரிந்து கொண்ட பாரதியார், மானுட விடுதலைக்காக அளித்துள்ள தீர்வைப் பார்த்தால், இப்படிப்பட்ட மகானுபவரை உலகம் இது வரை கண்டதில்லை என்றும் இனியும் காண முடியாது என்றும் நிச்சயமாகத் தோன்றும். அவருடைய தீர்வு என்ன தெரியுமா? ஒவ்வொரு ஊரிலும் உழைக்கும் மக்களும் சுரண்டல்வாதிகளும் அவ்வூரிலுள்ள கோயிலின் முன் ஒன்று கூடி எதிரெதிரில் நின்று கொள்ள வேண்டும். சுரண்டலாளர்கள் தங்கள் உடைமைகள் யாவும் தவறான வழிகளிலேயே பெறப்பட்டு இருந்தாலும், அவற்றைப் பிடுங்கிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதை உழைக்கும் மக்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். (வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும்; தவறான வழியில் பெறப்பட்ட உடைமைகளையும் பிடுங்கக் கூடாது என்று பாரதியார் தெளிவாகக் கூறுகிறார்) அதன் பின் உழைக்கும் மக்கள் கடமை தவறாமல் சுரண்டும் வர்க்கத்தினருக்காக உழைக்க வேண்டும். சுரண்டல் வர்க்கத்தினரோ உழைக்கும் வர்க்கத்தினரை விட்டால் வேலை செய்வதற்கு ஆட்களில்லை என்பதால் அவர்களுடைய கஷ்டங்களை நினைத்து நெஞ்சு உருகுவதாகவும் இனிமேல் அப்படி கஷ்டப்பட விட மாட்டோம் என்றும் தெரிவிப்பார்கள். பின் அவரவர்கள் தங்கள் தொழில்களைச் செவ்¨வாயகச் செய்ய வேண்டும் என ஒப்புக் கொண்டு அப்படி ஒரு பட்டயம் எழுதி அதைக் கோயிலில் அடித்து வைத்து விட வேண்டும். இது தான் சமூகப் பிரச்சினைகளுக்கு பாரதியார் தரும் தீர்வு. இது பெரும் நகைப்புக்கு உரியது என்பது ஒரு புறம் இருந்தாலும், பழைய வர்ணாசிரம முறையில் இருந்து இம்மியளவும் மாற்றமில்லாதது என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு வர்ணாசிரம தர்மத்திற்காக ஏங்கும் ஒருவர் சாதிய விடுதலையை முன்னெடுப்பவர் என்று எப்படி நினைப்பது?
 
          பொதுவுடைமை கருத்துகள் வலுப்பெற்றால், தங்கள் இன நலன்களுக்கு முடிவு வந்து விடுமோ என்ற அச்சமும், பார்ப்பன ஆதிக்கப் படிப்பு தளர்ந்து விடக் கூடாது என்ற வெறியும் கொண்ட பார்ப்பனர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் ஊடுருவி உள்ளதால் தான் பொதுவுடைமைக் கொள்கைக்கு நேர் எதிராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட பாரதியார் பொதுவுடைமைவாதியாகவும் மானுட விடுதலைப் போராளியாகவும் உண்மைக்கு மாறாகச் சித்தரிக்கப்படுகிறார். பொதுவுடைமை இயக்கங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்புத் தோழர்கள் உண்மையை உணர வேண்டும். பொதுவுடைமை இயக்கங்களில் இருந்து பார்ப்பனர்களைக் களையெடுத்தால் ஒழிய அவ்வியக்கங்கள் தவறான திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது  என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
- இராமியா

Pin It