ஈழத்தில் நடந்தேறிய போரின் இறுதிக் கட்டத்தில் பாரிய அளவில் போர்க் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் பரவலாக வெளிவந்துகொண்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று கோடன் வைஸ் (Gordon Weiss) எழுதி வெளிவந்திருக்கின்ற The Cage: The Fight For Srilanka and The Last Days of Tamil Tigers என்கிற நூலாகும். அவுஸ்திரேலியாவில் பிறந்த கோடன் வைஸ் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றுவதுடன், கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றுவதுடன் 2007 முதல் 2009ன் இறுதிவரை ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராக இலங்கையில் பணியாற்றியவர். இறுதிப் போர் கருக்கொண்டு பாரிய அழிவுகளுடன் நடந்தேறிய இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் பணியாற்றியவர் என்பதுடன், செய்மதிகளின் துணையுடன் பெறப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இதர தரப்புகளில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களைத் திரட்டி மிகப் பெரிய மனிதப் படுகொலைகள் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்தேறின என்பதற்கு வலுச் சேர்த்தவர். சனல் 4 தொலைக்காட்சிக்கு இவர் வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றும் முக்கியமானது. அந்த நேர்காணலில் Srilanka war crime is Srebrenica moment என்று குறிப்பிடுகிறார். (இணைப்பிற்கு http://goo.gl/qDBEP)

the_cage_400இவ்வாறான செயற்பாடுகளூடாக இலங்கை அரசாலும், அரசதரப்பு ஆதரவாளர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தவர். இலங்கையில் பணியாற்றிய காலத்தில் தான் தொகுத்த தரவுகளுடன் தனது தொடர்ச்சியான உழைப்பினூடாக இலங்கையில் முரண்பாடுகள் எழுந்த வரலாற்றையும் அதன் ஆரம்ப காலம்தொட்டு தொகுத்து இந்த நூலில் ஆவணப்படுத்தி உள்ளார். தமிழ்த் தேசியத்தை ஓயாது பேசிக் கொண்டிருந்தவர்கள் செய்திருக்கவேண்டிய ஆனால் பலர் செய்யத் தவறிய இந்தக் காரியத்தைச் செய்திருக்கும் கோடன் வைஸின் இந்தப் புத்தகம் நிச்சயமாகப் படிக்கவேண்டிய ஒன்று.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போர்முனையில் சடலமாகக் கைப்பற்றப்பட்டதாக புத்தகத்தின் முதலாம் அத்தியாயம் The Lions Victory ஆரம்பமாகின்றது. (அண்மையில் ரொரன்ரோவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் ஒன்றில் சேரன் கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சொன்னதற்கே அதற்கு என்ன ஆதாரம் என்று அவருடன் வாதிட்டவர்கள் இருக்கின்றார்கள். மிகத் தீவிரமான ஆதரவாளர்களாக இருந்தவர்கள் பலர் இன்னமும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்பதை நம்பிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று தொடங்கும் இந்த நூலை ஏற்றுக் கொள்வது கூட சிரமமாக இருக்கலாம். ஆனால் குறைந்த பட்சம் அவர் இன்னமும் இருக்கின்றார் விரைவில் மீண்டும் வருவார் என்றே நம்பிக்கொண்டிருக்கும்போது அப்படி நடவாது போகும் இடத்து விடுதலைப் போராட்டம் மிக முக்கிய காலகட்டம் ஒன்றில் தேக்கமடைந்தே போய்விடும் என்றாவது புரிந்துகொள்ளவேண்டும்.)

"சிறீலங்காவில் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவது உட்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழர்கள் புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் சுதந்திரத்தை மெல்ல நுகர ஆரம்பித்தார்கள். இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழே பத்தாண்டுகளாக இருந்தது. ஒரு நிழல் அரசாங்கத்தையே தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்திய புலிகள் இக்காலப்பகுதியில் நீதிமன்றங்கள், ஊராட்சி மன்ற நிர்வாகம், சுங்கம், வரி வசூலிப்பு, காவல்துறை, வங்கிகள், தொலைக்காட்சி, வானொலி போன்ற சேவைகளைக் கொண்டு நடத்தினார்கள். கிழக்கு திமோர், கொசாவா போல தாமும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை அங்கே மலிந்திருந்தது” என்று கூறும் கோடன் வைஸர் போரின் முடிவு பெரும்பான்மையான இலங்கையருக்கு அமைதியைக் கொண்டுவந்தாலும் அரசால் ஒடுக்குமுறைக்குள்ளாகி, அடையாளம் மறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் புலிகளையே தமக்காகப் போராடும் சக்தியாகவே பார்த்தனர் என்று குறிப்பிடுகிறார். இதை வாசித்தபோது “சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்” என்ற புத்தகத்தில் சி.அ. யோதிலிங்கம் குறிப்பிட்டிருந்த கருத்தொன்று ஞாபகம் வந்தது.

“குறிப்பாக யுத்தத்தில் ஈடுபட்ட இரு சமூகங்களையும் பொறுத்தவரை சிங்கள சமூகத்திற்கு யுத்தமில்லா நிலை மட்டும் சமாதானமாக இருந்தது. ஆனால் தமிழ் சமூகத்திற்கோ யுத்தமில்லா நிலை, இயல்புநிலையக் கொண்டுவருதல் நிரந்தரத் தீர்வு என்பவைதான் சமாதானமாக இருந்தது – பக்கம் 18 http://noolaham.net/project/33/3219/3219.pdf

அது போலவே அரசியல் தீர்வுக்கான எந்த சமிக்ஞையும் இன்றுவரைக் காட்டப்படவில்லை. அண்மைக்காலமாக ஈழப்போராட்டம் பற்றிய புத்தகங்களையும், வரலாற்றையும், இலங்கையின் இனமுரண்களின் வரலாறு பற்றியும் விரிவாகவும் முடிந்தவரை ஆழமாகவும் வாசிக்கவேண்டியதன் அவசியம் அதிகரித்திருக்கிறது. ஈழப்போர் பற்றிய இந்தப் புத்தத்தில் கோடன் வைஸும் அதன்படியே இரண்டாவது அத்தியாயத்தில் பிரம்மஞான சபையைச் சேர்ந்த ஹென்றி ஒல்கொட் (Henry Olcott) 1874ல் இலங்கைக்கு வருகை தருவதைத் தொடர்ந்து இலங்கையில் உருவாகும் பௌத்த மறுமலர்ச்சியில் இருந்து இனமுரணுக்கான விதை தூவப்படுவதைக் குறிப்பிடுகின்றார். தனது பதினாறாவது வயதில் ஹென்றி ஒல்கொட்டைச் சந்திக்கும் டொன் டேவிட் ஹெவவிதர்ன என்கிற சிறுவன் பௌத்த மதத்தைத் தழுவி அநாகரிக தர்மபாலா என்று தனது பெயரையும் மாற்றிக் கொள்கிறான்.

இங்கே முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது என்னவென்றால், ஹென்றி ஒல்கொட், ஹெலினா ப்ளாவட்ஸ்கி (Helena Blavatsky), வில்லியம் க்வான் ஜட்ஜ் (William Quan Judge) மூவரும் இணைந்து தாபித்த பிரம்மஞான சபை உலகளாவிய சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் வளர்ப்பதையும், பல்வேறு மதங்களையும், தத்துவங்களையும் பற்றிய கற்கைகளைச் செய்வதையும் தன் நோக்காக கொண்டிருந்தபோதும், அவற்றால் உள்வாங்கப்பட்டு பௌத்தத்தைத் தழுவிக்கொண்ட அநாகரிக தர்மபாலா பின்னர் உலகளாவிய சகோதரத்துவத்தைப் போதித்த பிரம்மஞான சபைக்கு முரணாக இலங்கையில் வாழ்ந்த இன்னொரு இனத்தரான தமிழர்கள் மீதான வெறுப்பைக் கட்டியெழுப்பினார். சிங்களமும் பௌத்தமும் பிரிக்கமுடியாதவை என்றும் இலங்கை மண் சிங்களவர்களுடன் ரத்தத்தில் ஒன்றாகக் கலந்தது என்றும் தமிழர்கள் சிங்களவர்கள் தமிழர்களின் நிலையான எதிரிகள் என்கிற வாதங்களை அநாகரிக தர்மபால முன்வைத்தார் என்று இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகின்றது.

கிறிஸ்தவர்கள் மீதும் இந்துக்கள் மீதும் கடுமையான வெறுப்பைக் காட்டிய அநாகரிக தர்மபால, அதே நேரம் சிங்களவர்கள் மீது, அவர்கள் மத்தியில் இருந்த பழக்கவழக்கங்களை கடுமையாகச் சாடி அவர்களுக்கான சீர்திருத்தங்களையும் மேற்கொள்ளுகிறார். அநாகரிக தர்மபால காலத்தில் விதைக்கப்பட்ட விஷம் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், புத்தர் இறந்தும் விஜயன் இலங்கைக்கு வந்தும் 2500 ஆண்டுகள் நிறைவடைந்த 1956ல் தனிச்சிங்களச் சட்டம் வரை வளர்ச்சியடைந்தது. இந்த முரண்கள் எவ்வாறு உருவாகி எவ்வாறு வளர்ச்சியடைந்தன என்று கூறும் முக்கிய நூல் குமாரி ஜெயவர்த்தனாவின் “இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள்”. (நூலகத்தில் வாசிக்கhttp://noolaham.net/project/14/1306/1306.pdf)

இன முரண்களில் முக்கியபுள்ளிகளில் ஒன்றாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பண்டாரநாயக்க பிரிந்துசென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியை 1951ல் அமைப்பது இடம்பெறுகின்றது. இதன் பின்னர் இலங்கையில் முதல் இரண்டு பிரதான கட்சிகளுமே சிங்களக் கட்சிகளாக மாறுகின்றன. இலங்கை சுதந்திரமடைந்த போது ஆசியாவில் பொருளாதார ரீதியிலும், மத்திய வங்கியில் இருந்த நிதிக் கையிருப்பின் அடிப்படையிலும் ஆசியாவிலேயே முக்கிய நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கை 70களில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டது. தவிர, 1948ற்கும் 1970க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் சனத்தொகை ஏறக்குறைய இரட்டிப்பாகி இருந்தது. இதனால் இலங்கை சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதிற்குக் குறைந்தவர்களாக வேறு இருந்தனர். இலங்கையில் வழக்கத்தில் இருந்த இலவசக் கல்வி உட்பட்ட சமூக நலத் திட்டங்கள் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்திருந்தனர். அதே நேரம் சனத்தொகை வளர்ந்த அதே வேகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் இல்லை. இதனால் படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாப் பிரச்சனையும் விரக்தியும் உருவானது. 70களின் மத்தியில் 25% ஆனவர்கள் வேலையின்மையால் வாடினர். அதே நேரத்தில் 1965ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற புதிய இடதுசாரிகளை உருவாக்கிய ரோஹன விஜேவீராவின் தலைமையில் 1971ல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியும் நடக்கின்றது. இலங்கை அரசால் கொடூரமான முறையில் அடக்கப்பட்ட இந்தக் கிளர்ச்சி 15,000 இளைஞர்கள் கொல்லப்படுவதுடன் தோல்வியில் முடிகின்றது.

ஒரு மார்க்ஸிய லெனினிய இயக்கம் என்று ஜேவிபி அழைத்துக்கொண்டபோதும் மிகக் குறுகிய காலத்திலேயே அவர்களும் சிங்களப் பேரினவாத இயல்புகளுடனேயே செயற்பட ஆரம்பித்தனர். இந்த நிலையில் இன்று ஜேவிபியையும், ரோஹன விஜேவீராவையும் புரட்சிகர சக்திகளாக சிலர் முன்மொழிவதையும் அவதானிக்கவேண்டும். இவர்கள் புரட்சியாளர் என்று சொல்லும் ரோகண விஜேவீராவும், ஜேவிபியினரும் எவ்வளவு பிற்போக்குத்தனமாக, பிற இனத்தவர்கள் மீது வெறுப்பைத் தூண்டுகின்றது போல நடந்து கொண்டுள்ளனர் என்பதையும் கவனிக்கவேண்டியது அவசியமாகின்றது. இது பற்றி விரிவாக அறிய குமாரி ஜெயவர்த்தன எழுதிய இலங்கையின் இனவர்க்க முரண்கள் என்ற புத்தகத்தில் ஆகக் குறைந்தது 134 – 137 பக்கங்களையோ அல்லது 8வது அத்தியாயத்தையோ (மார்க்ஸிசத்திலிருந்து மேலாதிக்க வெறியை நோக்கி) வாசிக்கவும்.http://noolaham.net/project/14/1306/1306.pdf

இதற்குப் பிறகு அதன் கிளர்ச்சியும் தோல்வியடைந்த பின்னர் சுயவிமர்சனம் என்ற பெயரில் ஜேவிபி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இக்கட்டத்தில் தமிழர் ஒரு தேசிய இனம், பெரும்பான்மையினரால் அவர்கள் ஒடுக்குதலுக்குள்ளாக்கப்படுகின்றனர், அவர்கள் பிரிந்துசெல்லும் எல்லை வரையிலான சுய நிர்ணய உரிமை உடையவர்கள் என்று ஜேவிபியினர் ஏற்றுக்கொண்டனர். இக்கட்சி பிரிவினையை ஆதரிக்கவில்லை. இலங்கை என்ற அமைப்புக்குள்ளேயே தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம் என்று நம்பியது. இந்த நிலைப்பாட்டில் பல தத்துவார்த்த, நடைமுறைக் குறைபாடுகள் இருந்தன. எனினும் இலங்கைத் தோட்டப்பகுதித் தமிழர் மத்தியில் ஜேவிபியினர் வேலைசெய்ய இது வழிவகுத்தது. இதனால் ஜேவிபியின் தமிழர்களும் இணைந்தனர். மாநகரசபைத் தேர்தல், மாவட்ட சபைத் தேர்தலில் ஜேவிபி சார்பில் தமிழர்களும் போட்டியிட்டனர். (இலங்கையின் இன வர்க்க முரண்கள் – பக். 140)

இதே சமயம் ஜேவிபியினரின் இந்த தமிழர் மீதான ஆதரவு நிலைப்பாட்டுக்கு அதே இயக்கத்தின் பொதுச் செயலாளாரான லயனல் போபகேயின் செல்வாக்கு அதிகம் தாக்கம் செலுத்தி இருக்கின்றது. 2010 மேயில் கோடன் வைஸுசனான சந்திப்பொன்றில் லயனல் போபகே கூறுகின்றார்,

“எனக்குப் பதினான்கு வயதாக இருக்கின்றபோது நடைபெற்ற 1956 கலவரத்தின்போது ஒரு தமிழ்ச்சிறுவன் பாதுகாப்பிற்காக எம்மிடம் ஓடிவந்தான். அந்தச் சிறுவன்தான் எமது கடைக்கு வெற்றிலை விநியோகம் செய்பவன். அவனைக் கொலைவெறியுடன் துரத்தி வந்த கூட்டத்தினரிடம் இருந்து எனது தந்தை காப்பாற்றினார். அதன் பிறகு எனக்கு ராகுல கல்லூரியில் இரசாயன‌வியல் கற்பித்து வந்த தமிழாசிரியர் ஒருவர் 1958 கலவரத்தின்போது காணாமற்போனார். பின்னர் 60களின் தொடக்கத்தில் நான் றிச்மண்ட் கல்லூரியில் கல்வி கற்றபோது எனக்கு இரசாயன‌வியல் கற்பித்த ஆசிரியரும் இவ்வாறே காணாமற்போனார்.

பாடத்திட்டங்களில் எனக்குக் கற்பிக்கப்பட்ட துட்டகைமுனு – எல்லாளன் கதைகள் எல்லாம் இன்றைய சமூகத்தின் தேவை பற்றி சிந்தியாதவையாகவே இருந்தன. இவற்றின் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான ஒவ்வொரு வன்முறையும் சரியாகத் திட்டமிடப்பட்டு, அமைப்புமயமாக்கப்பட்ட தாக்குதல்களே”

ஆனால் 82ன் பின்னர் ஜேவிபியினரின் நிலை மீண்டும் மாறத் தொடங்கியது. இவ்வாண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரோஹண விஹேவீராவுக்கு வெறும் 273,428 ஓட்டுக்களே (4.19%) கிடைக்கின்றன. இந்தத் தோல்விக்குக் காரணம் தான் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்ததே என்ற முடிவுக்கு வந்த ரோஹண விஜேவீரா இலங்கை மக்களுக்கு ஒரு செய்தி என்ற பெயரில் அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகிறார்,

“ஜேவிபியும் நானும் நாட்டைப் பிரிப்பதற்கான எந்த ஏகாதிபத்திய முயற்சிகளையும் முழுமையாக எதிர்க்கின்றோம். நான் உயிருடன் இருக்கும் வரை, ஜேவிபி இருக்கும்வரை நாட்டைப் பிரிக்க எந்த ஏகாதிபத்தியச் சக்தியையும் அனுமதியோம்.”( இலங்கையின் இன வர்க்க முரண்கள் – பக். 141)

இதுபோலவே இடதுசாரிகளாலும் இனமுரண்களில் நியாயப்பூர்வமாக நடந்துகொள்ள முடியவில்லை. ஏமாற்றங்களின் உச்சமாக 1972 யாப்பு அலுவல்கள் அமைச்சராக இருந்த லங்கா சம சமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வா எழுதிய யாப்பு அமைந்தது. லங்கா சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை பங்களித்த சிறீமா அரசால் 1972ன் அரசியல் யாப்பு சிறுபான்மையினரின் உரிமைகளை ஒழித்துக் கட்டியதுடன் அரச கரும மொழியாக சிங்களமே இருக்கும் என்பதுவும் அறுதியிடப்பட்டது. அது மாத்திரமல்லாமல் யாப்பின் 6ம் பிரிவு பௌத்தத்துக்கு இலங்கை முதன்மையான இடம் கொடுக்கவேண்டுமெனவும் ஏனைய மதங்களுக்கு உரிமைகளைத் தரும் அதே சமயம் பௌத்தத்தை போஷிப்பதும் பாதுகாப்பதும் அரசின் கடமை என்றும் கூறுகின்றது. இதற்குப் பிற்பட்ட காலங்களில் இடதுசாரிக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை மாற்றி இலங்கை மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்று குரல் கொடுத்தாலும், 1972 யாப்பில் பௌத்தமதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவும், அதன்பின்னர் அதுவே 1978 யாப்பிலும் அதுவே தொடரவும் வழி அமைத்தவர் கொல்வின் ஆர் டி சில்வாவே. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கவேண்டிய இடதுசாரிகள், சிறுபான்மையினருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளைக் குழி தோண்டிப் புதைக்க துணைபோயினர். இது போன்ற காரணிகளால் தமிழர்களுக்கும், 70களின் பின்னர் சிங்கள இடதுசாரித் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது.

The Cageல் 19ம் நூற்றாண்டில் இருந்து இலங்கையில் இன முரண்கள் தோன்றி வளர்ந்ததைச் சொல்லத் தொடங்கும் கோடன் வைஸ் நூலின் இரண்டாம், மூன்றாம் அத்தியாயங்களுக்கு Paradise Found, Paradise Lost என்று பொருத்தமாகவே பெயரிடுகின்றார். Paradise Found என்கிற இந்த அத்தியாயத்தில் இனமுரண்களுக்கு தூபமிட்ட 72, 78 யாப்புகள், முதலில் மொழிரீதியாகவும் (1973), பின்னர் மாவட்ட ரீதியாகவும் (1974) கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல்கள் (இவற்றின் விளைவாக 1969ல் பொதுப் போட்டிப் பரீட்சை மூலமாக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான தமிழ் மாணவர்கள் 27.5% ஆக இருந்து 1974ல் மாவட்டவாரி தரப்படுத்தலின்போது 7% ஆகக் குறைந்தது), 1983ல் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரம், அதன் பின்னர் தொடரும் இந்தியத் தலையீடுகள், 1987ல் ராஜீவ் – ஜெயவர்த்தன இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டமை, தொடரும் இந்தியத் தலையீடுகளை முன்வைத்து மீண்டும் தீவிரமாகும் ஜேவிபி எழுச்சி என்பன விவ‌ரிக்கப்படுகின்றன.

கோடன் வைஸின் இந்தப் புத்தகத்தில் தொடர்ந்து இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாகச் செய்த குளறுபடிகளையும், துரோகங்களையும் எந்த இடத்திலும் குறிப்பிடாமல் கடந்து செல்வது அவதானிக்கக் கூடிய குறையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிடும்போது எந்த இடத்திலும் அந்த ஒப்பந்தம் எவ்வாறு புலிகள் மீது திணிக்கப்பட்டது என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இந்தப் புத்தகத்தில் இல்லை. அதே நேரம் வைஸர் குறிப்பிடுவதைப் போலவே பெரும்பான்மைத் தமிழர்கள் இந்தியாவின் வருகையை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டதையும் அதே நேரம் சிங்களவர்கள் மத்தியில் அது வெறுப்பைத் தூண்டியதும் ஒப்புக்கொள்ளவேண்டியதே.

இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து ரோகண விஜேவீரா பிரச்சாரம் செய்கிறார். நாடெங்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து ஜேவிபியினர் முன்னெடுத்த கலவரங்களில் நாற்பது பேர் வரை கொல்லப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் பிரதமர் பிரேமதாசவும் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் ஜேவிபியினர் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து தென் பகுதிகளில் ஜேவிபியின மீதான கடுமையான ஒடுக்குதல் நடைபெறுகின்றது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்தால் கொல்லப்படுகின்றனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேலானதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகின்றது. இந்த மனித உரிமைமீறல்கள் பற்றி பெரிதாக பேசப்படவில்லை என்பதே உண்மை. இதே காலப்பகுதியில் சர்வதேச ஊடகங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷ்யா வெளியேற்றம், சோவியத் ரஷ்யா மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகள் (Eastern Blocs)இடையே ஏற்பட்ட பிரிவுகள், இஸ்ரேலுக்கு எதிரான் பாலஸ்தீனியர்களின் எழுச்சி, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போன்றவற்றில் குவிந்திருக்க இலங்கையில் இந்த அழித்தொழிப்புகள் நடந்தேறின.

ஜேவிபியினருக்கு எதிரான இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி, பலதடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினரின் உடனடி தலையீட்டை வேண்டிக் குரல்கொடுத்தவர்தான் இன்று தமிழர்களுக்கு எதிராக பாரிய அளவில் போர்க்குற்றங்களை நிறைவேற்றியும், நிறைவேற்றத் தூண்டுதலாகவும் இருந்த மகிந்த ராஜபக்சே. அன்று மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த மகிந்த ராஜபக்சே, தமிழர்களுக்கெதிரான படுகொலைகளுக்கு கூட்டுச் சேர்ந்தது ஜேவிபிக்கு எதிரான ஒடுக்குதலில் நாட்டின் தென்பகுதியில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட கோதபாய ராஜபக்சேயுடனும், கம்பகாவில் பெருமளவில் ஜேவிபியினர் என்ற குற்றச்சாட்டில் கைதானவர்கள் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட்ட ராணுவ முகாமுக்குப் பொறுப்பாளராகவும் இருந்த சரத் பொன்சேகாவுடனும். இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான முக்கிய சம்பவங்கள் நடந்தேறிய காலப்பகுதி பற்றி விவ‌ரிக்கும் இந்த அத்தியாயம் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு மிகப்பெரும் முட்டுக் கட்டையாக அமைந்த ராஜீவ்காந்தி கொலையுடன் நிறைவுறுகின்றது. இந்தச் சம்பவத்திற்கு கோடன் வைஸர் நேரடியாகப் புலிகளையே குற்றஞ்சுமத்துகின்றார்.

ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கொன்றினை இத்தனை ஒளிவுமறைவுகளுடன் ஏன் இந்தியா நடத்துகின்றது, யார் யாரைக் காப்பாற்றவேண்டும் என்ற செயல்திட்டத்துடன் இதெல்லாம் நடைபெறுகின்றது என்பதையாவது அவர் சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருச்சி வேலுச்சாமி எழுதிய ராஜீவ் காந்தி கொலைவழக்கு வெளிவராத மர்மங்கள் என்ற புத்தகத்தில் மிக மிக எளிய முறையில் ராஜீவ் கொலை பற்றிய நிறைய சந்தேகங்கள், வழக்கு விசாரணையில் இருந்த ஓட்டைகள் என்பன விவ‌ரிக்கப்படுகின்றன. (இங்கே நான் ராஜீவ் கொலை வழக்கிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற கூற முன்வரவில்லை. அதே நேரம், இந்த வழக்கு விசாரணை மிகுந்த ஒற்றைத்தன்மையுடனேயேயும், ஒளிவு மறைவுடனுமே நடத்தப்பட்டது என்பதைக் கவனிக்கவேண்டும் என்று கூறுகின்றேன்) தவிர்த்து எல்லா விடயங்களையும் ஆதி முதல் எழுதும் கோடன் வைஸ் இந்திய அமைதிப்படை இலங்கையில் தங்கியிருந்த காலங்களில் செய்த அத்துமீறல்கள், ஆயிரக்கணக்கான கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் பற்றிப் பேசவேயில்லை என்பதும் கவனிக்கவேண்டியது.

இது போல புத்தகத்தின் இன்னுமொரு அத்தியாயத்தில் இலங்கை அரசு புலிகள் மீதான இறுதிப் போருக்கு இந்தியாவிடம் கேட்ட உதவிகளை, அவ்வாறு செய்வது தமிழ்நாட்டின் ஆதரவை இழக்கவைக்கும் என்று இந்திய அரசு அஞ்சியதால் மறுத்தது என்றும், இதனைப் பயன்படுத்தி சீனா இலங்கை அரசிற்கு மேற்படி உதவிகளை நிறைவேற்றி இலங்கையிலும், இந்து சமுத்திரத்திலும் தன் செல்வாக்கை நிலைநாட்டியது என்ற பொருள்படவும் கூறப்படுகின்றது. உண்மையில், ந‌மக்குக் கிடைத்த தரவுகள், நாம் அறிந்த செய்திகள், தகவல்கள் போன்றவற்றின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்கு கணிசமாக இருந்திருக்கின்றது என்பதை இலகுவாக அறியமுடியும். தவிர, போர் முடிந்த பின்னர் கோத்தபாய ராஜபக்சே வழங்கிய நேர்காணல்களிலும் இந்தியத் தேர்தல்களின்போது (2009) கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை தாம் நிறுத்துவதாகக் கூறி இந்திய அரசிற்கு உதவினோம் என்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற சார்புகள் இந்தப் புத்தகத்தின் முழுமைத்தன்மையை இல்லாமல் செய்கின்றன என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதே நேரம் இந்திய, அமெரிக்க தொலைதூர ராடர் மற்றும் புலனாய்வுத்துறையினரின் உதவியுடன் இலங்கை ராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் 8 ஆயுதக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டதையும் அவற்றில் ஒன்று 1700 கடல்மைல்கள் தூரத்தில் தாக்கப்பட்டதையும் குறிப்பிட்டே இருக்கின்றார். இதே தகவலை DBS ஜெயராஜிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கேபியும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

The Tiger Rovolt என்கிற நாலாவது அத்தியாயத்தில் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகால நிலைகள் பற்றிய சிறு குறிப்புகளுடன் புலிகளின் ராணுவ ரீதியான வளர்ச்சிகள், அவர்கள் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்புகள், அரசியல் படுகொலைகள் போன்றன குறிப்பிடப்படுகின்றன. தீவிரமான விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் எதிர்க்கப்படுவதற்கு இந்தப் புத்தகத்தில் நிறைய இடங்கள் இருக்கின்றன. புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தியது, அவர்கள் செய்த அரசியல் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள், மக்களைக் கேடயமாகப் பாவித்தமை போன்றவை இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இன்றுவரை தீவிர புலி ஆதவாளர்கள் பலரால் நிராகரிக்கப்பட்டும், எதிர்க்கப்பட்டும் வருகின்ற கருத்துக்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. புலிகளுக்குப் பின்னைய தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதில் பரவலாக எதிர்கொள்ளப்படும் சிக்கலே இதுவாகத்தான் இருக்கின்றது.

இதற்கு நல்லதோர் உதாரணமாக, போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நவநீதம் பிள்ளை இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையொன்றில் விடுதலைப் புலிகள் மக்களை வெளியேறாமல் தடுத்து வைத்துள்ளனர், ஆட்களை கட்டாயமாக போரில் ஈடுபடுத்துகின்றனர் என்று குறிப்பிட்டபோது இவ்வாறு நவநீதம்பிள்ளை கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாற்று என்று கூறி அந்த அறிக்கையைக் கண்டிக்குமாறு கேட்டு தொடர்ச்சியாக மொய்த்த மின்னஞ்சல்களையும், தற்போது சன‌ல் 4 வெளியிட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஒளித்தொகுப்பில் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சுமத்திய பகுதிகளை நீக்கிவிட்டே தமிழர்கள் மற்றவர்களுடன் பரிமாறவேண்டும் என்று பரவிய மின்னஞ்சல்களையும் கூறலாம்.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கின்றபோது நண்பர் ஒருவரிடம் பேசியபோது அவர் சொன்னதுபோல, “தீவிர ஆதராவாளர்கள் புலிகள் மீதான விமர்சனம் = புலி எதிர்ப்பு = போராட்டத்துக்கான எதிர்ப்பு = துரோகிகள் என்கிற ரீதியில் அணுகுவதும், மாற்றுக்கருத்து = புலி எதிர்ப்பு மட்டும் என்று பார்ப்பதும்” இன்னும் இன்னும் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என்பதையும் பார்க்கவேண்டும். நாம் மிகப் பெரிய வீழ்ச்சி ஒன்றை அடைந்திருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொண்டு, அடுத்து என்ன செய்வது, எதில் இருந்து தொடங்குவது என்று சிந்திக்கவேண்டும். அதற்கு, இதுவரை செய்தவற்றில் எதைத் தொடர்வது, எதைத் தவிர்ப்பது, இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம், இன்றைய‌ உலக ஒழுக்கில் எமக்கு எவை சாதகமாக அல்லது பாதகமாக இருக்கின்றன என்பவற்றை ஆராயவேண்டும். இதற்காகத்தான் சுயவிமர்சனப்பார்வை அவசியம் என்பது உறுதியான நம்பிக்கை.

ஆனால் சுயவிமர்சனம் என்பது ஒரு தரப்பினர் மீது காழ்ப்பை உமிழ்வது அல்ல, இலங்கையில் இத்தனை போர்க்குற்றங்களும், இனப்படுகொலையும் நடைபெற்றிருக்கையில் அது பற்றி எந்த விமர்சனமும் இன்றி மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி கூறி விழாக்களை தொடங்குவது, நடத்துவது அல்ல. தாம் சார்ந்திருந்த இயக்கங்கள் / தாம் போராளிகளாக இருந்த காலங்களில் செய்த போர்க்குற்றங்கள், வன்முறைகள் பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காமல், எல்லாத் தரப்பும் பிழைவிட்டவைதான் என்று ஒரே தாவலாகத் தாவி அதற்குப் பின்னர் வரிக்கு வரிக்கு பாசிசப் புலிகள், பாசிசப் புலிகள் என்று பல்லவி பாடுவது அல்ல. 'விடுதலைப் புலிகள் பெண்விடுதலையை முன்வைக்கவில்லை, தலித் விடுதலையை முன்வைக்கவில்லை' என்று தொடர்ந்து குற்றஞ்சுமத்திவிட்டு யாராவது குறுக்கிட்டு 'இல்லை புலிகள் இவற்றைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள்' என்று சுட்டிக்காட்டினால், 'அவர்கள் அப்படி செய்தபோதும் அவர்களால் சாதீயத்தை அடக்கமுடியவில்லையே, பெண் விடுதலையை நிலைநாட்ட முடியவில்லையே' என்று விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று புளகாங்கிப்பது இல்லை.

இதே தவறைத்தான் புலி ஆதரவாளர்களும் செய்கின்றனர் என்பதையும் ஒப்புக்கொண்டேதான் ஆகவேண்டி இருக்கின்றது. சுயவிமர்சனம் தேவை என்று சொல்வதையே, இல்லை அது பிளவை அதிகரிக்கும் என்று சொல்வதுதான் புலி ஆதரவாளர்களின் வழமையாக இருக்கின்றது. 

இன்று விடுதலைப் புலிகள் மீது மாற்று இயக்கத்தினர் குழந்தைகளைப் போரில் சேர்த்தல், கட்டாயப்படுத்தி போரில் ஈடுபடுத்தல், அரசியல் படுகொலைகள் போன்ற குற்றச்சாற்றுகளை முன்வைக்கின்றபோது இதே தவறுகளில் இருந்து அவர்கள் தமக்கு வழங்குகின்ற பழி விலக்கங்களையும் கவனிக்கவேண்டும். உதாரணமாக கீழ்வரும் அறிக்கையில் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம்,

“Several other armed groups have been responsible for the recruitment and use of children in Sri Lanka. There were reports in the past of the Eelam People‟s Revolutionary Liberation Front (EPRLF), the People‟s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), Tamil Eelam Liberation Organisation (TELO) and the Eelam People‟s Democratic Party (EPDP) recruiting and using children, although not in large numbers. These groups were originally set up in the 1980s in opposition to the government. However, since 1990 they have worked in cooperation with the government against the LTTE.

Current information indicates that EPDP and PLOTE are continuing to recruit and use children for task-specific purposes. For example, in the lead up to the presidential election in January 2010, children were reportedly recruited to assist these groups with tasks including guarding their offices and distributing campaign material.

Questions to the Government of Sri Lanka

What measures have been taken by the Government of Sri Lanka to ensure that EPDP and PLOTE do not recruit and use children and that any children associated with them are released and provided with all necessary support for their rehabilitation and reintegration? - Coalition Report to CRC on OPAC Implementation in Srilanka –April 2010 pg 8.”

இலங்கை அரசு போர்க்காலத்தில் ஊடகத்துறையை எப்படி மிரட்டிக் கட்டுப்படுத்தியது, அதன் மீது எப்படி வன்முறையை ஏவியது என்பதையும் கோடன் வைஸ் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். 2009 ஜூன் 1ம்திகதி ஊடகத்துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பற்றி மகிந்த ராஜபக்சே ஊடகத்துறை பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஜெயந்த பொடல என்கிற ஊடகவியலாளர் கடத்திச் செல்லப்பட்டு பலமாகத் தாக்கப்பட்டார் (பக்கம் 154). ஜயந்த பொடல மாத்திரமன்றி லசந்த விக்ரமசிங்க கொலை, பிரகீத் எக்னலிய கொட, வெற்றிவேல் ஜசிகரன், நாமல் பெரரா போன்றவர்கள் மீது அரசு வன்முறையைப் பாவித்த விதமும் இங்கே பட்டியலியடப்பட்டுள்ளது. (இது பற்றி மேலதிகமாக வாசிக்க http://goo.gl/UEjcT என்ற ஆவணத்தைப் பார்க்கலாம்.)

இலங்கை அரசு தனக்குச் சார்பான பிரசாரங்களை எப்படி முன்னெடுத்தது என்பது கூர்ந்த அவதானத்துடன் குறிப்பிடப்படுகின்றது. போர்க்காலங்களில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும், சர்வதேச நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடாத்தியபோது அந்தப் போராட்டங்கள் பற்றி ஊடகங்களில் பின்னூட்டங்களிடும்போது தொடர்ச்சியாக தமிழர் தரப்பு நியாயங்களை நிராகரித்து பல பின்னூட்டங்கள் வந்ததை நாம் கவனித்திருப்போம். அண்மையில் டைம் இதழ் நடத்திய கருத்துக் கணிப்புகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ராஜபக்சேவின் பெயர் நீக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். அது போல, இலங்கை அரசால் நியமிக்கப்பட்டவர்களே கூட இப்படியான பின்னூட்டங்களை வெளியிட்டிருக்கவும் கூடும். அதே நேரம், புலம் பெயர் நாடுகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் தமிழர்கள் வசிக்கின்ற போதும் தன்னிச்சையாகவேணும் எமது போராட்டத்தின் நியாயங்களை நாம் பதியத் தவறினோம் என்பதே உண்மை. அதே நேரம் இலங்கை அரசு தனது ஊடகப் பிரசாரத்தை முழுவேகத்தில் செயற்படுத்தியது. இந்த இடத்தில் கோடன் வைஸ் சொல்வதைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்,

“Apart from its hold on the national media, the government controlled numerous official and unofficial websites located within Srilanka and in countries such as Sweden, Singapore and Canada. Roving self-styled Srilankan ‘terrorism experts’ eloquently explained the workings of the Tamil Tigers in international TV studios, and backed up Srilanka’s diplomat abroad. Carefully manufactured information converged to support the government’s narrative of events. – Page 176 and 177 ”

இலங்கை அரசு தனது போரினை ராணுவ ரீதியாக மாத்திரமல்லாமல் பல்தரப்புகளிலும் தொடர்ந்து கொண்டுசெல்கின்றது என்பதற்கு நல்லதோர் உதாரணம் இது. இன்று இலங்கை அரசுக்கு தேவைப்படுவதெல்லாம் இலங்கையில் போரினை நிறைவிற்கு கொண்டுவரப்பட்டதுடன் அங்கே அமைதி நிலை நாட்டப்பட்டுவிட்டது என்பதாக உலகிற்குக் காட்டவேண்டும் என்பதே. போர் நிறைவடைந்தவுடனேயே தொடர்ச்சியாக நடைபெற்ற கலை விழாக்கள், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, காலி கலாசார விழா போன்றவை இலங்கை அரசின் மேற்குறித்த நோக்கத்திற்கான நிகழ்ச்சி நிரலின் படி அமைந்ததாகவோ அல்லது சுயேச்சையாக நடத்தப்பட்டபோதும் அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு வலுச் சேர்ப்பதாகவோதான் இருக்கின்றன. மறுவாழ்வு, புனரமைப்பு என்ற பெயரில் இன்று அரசு விரும்புவதெல்லாம் வரலாற்றைத் தன்னைக் காபந்து பண்ணி மீள எழுதுவதைத்தான். இன்று யாழ் நூலகத்தைப் பற்றி அரச இணையத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகளில் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லை என்பதையும் (பார்க்க http://www.cimicjaffna.com/HistoricalPlaceBody.php ) அதே நேரம், தலதா மாளிகை மீதான விடுதலைப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல் மற்றும் சேதமுற்ற தலதா மாளிகையின் படங்கள் தலதா மாளிகையுடன் இருக்கின்ற அருங்காட்சியக சுவர்களில் காட்சிக்காக வைக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

இவ்வாறான மிகத் தெளிவான திட்டமிடலுடன் இயங்குகின்ற இலங்கை அரசின் செயற்பாடுகளுடன் சேர்த்தே போருக்குப் பின்னைய சூழல் பற்றியும் ஆராயவேண்டி இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை அரசு சீனாவையும், இந்தியாவையும் வைத்து மிகச் சாணக்கியமாக தனது நகர்த்தல்களை செய்து வந்துள்ளது. அது மாத்திரமல்லாமல் லிபியா, வெனிசுலா, ஈரான், கியூபா போன்ற நாடுகள் தொடர்ச்சியாக இலங்கை அரசிற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எடுக்கவிருந்த சில நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தின. இந்த நாடுகளில் பல இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையை முன்வைத்து மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுகின்றன என்று குற்றம் சாற்றுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையையும் இதே கண்ணோட்டத்தோடே இலங்கையில் இருக்கின்ற இடதுசாரிக் கட்சிகள் அணுகின என்பதையும் இங்கே சுட்டிக் காட்டவிரும்புகின்றேன். தமிழர்கள் தொடர்ச்சியாக நம்பி வந்த வாசுதேவா நாணயக்கார போன்றவர்கள் கூட இன்று முழுக்க முழுக்க இலங்கை அரசைக் காப்பாற்றும் இயன்றவரை அதை நியாயப்படுத்தும் வேலைகளைத்தான் செய்கின்றார்கள் என்பதை வைத்துப் பார்க்கின்றபோது, இடதுசாரித் தலைவர்களை தமிழர்கள் நம்பவில்லை என்ற குற்றச்சாற்று மிகப் பலகீனமானதாகவே தோன்றுகின்றது.

கோடன் வைஸின் புத்தகம் சில சில குறைகளை அல்லது எனது பார்வையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றபோதும் அண்மைக்காலங்களில் ஈழத்தில் நடைபெற்ற போர் மற்றும் பேரழிவுகள் தொடர்பாக வெளிவந்த ஆவணங்களில் முக்கியமானதென்றே கூறமுடியும். இயன்றவரை இந்தப் புத்தகத்தை வாசித்தலும், பிறருடன் பகிர்ந்து கொள்வதும் முக்கியமென்றே தோன்றுகின்றது. The Cage தவிர ஈழம், இலங்கையின் இனப் பிரச்சனைகள் பற்றிய முக்கியமான ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், அறிக்கைகள் போன்றவற்றை தொடர்ச்சியாக வாசிப்பதுவும் நிச்சயமாக தெளிவை ஏற்படுத்தும். மகாவம்சம் (http://noolaham.net/project/47/4622/4622.pdf) இலங்கை யாப்பு (http://www.priu.gov.lk/Cons/1978Constitution/CONTENTS.html) போன்றவற்றை வாசிப்பது கூட முக்கியம்.

முறிந்த பனை இன்னுமொரு முக்கிய ஆவணம் (http://noolaham.net/project/11/1001/1001.pdf). தொடர்ச்சியாக முறிந்த பனை புலி எதிர்ப்பு நூல் என்றே பார்க்கப்பட்டிருக்கின்றது. முறிந்த பனையை மீள வாசிக்கின்றபோது அதில் புலிகளின் அரசியல் குறைபாடுகள் பற்றிய கறாரான விமர்சனத்துடன் பிற போராட்ட இயக்கங்கள் மீதான கடுமையான விமர்சனங்களையும் அவதானிக்கமுடியும். இந்தக் கட்டுரையை The Cage பற்றிய முழுமையான விமர்சனமாக நான் எழுதவில்லை. அதே நேரம் இந்தக் கட்டுரை ஊடாக பிறரை என்னால் இயன்றவரை The Cage இனை வாசிக்கவைத்துவிடவேண்டும் என்றே தலைப்பட்டேன். அண்மைக்காலமாக ஈழம் தொடர்பான வாசிப்பே பிரதானமாக இருந்துவருகின்றபோது, என் அண்மைக்கால வாசிப்பு, கடந்த கால அனுபவங்கள், முடிவுகள், The Cage போன்றவை எல்லாம் செய்த ஊடாடட்டத்தின் விளைவே இந்தக் கட்டுரை. இதில் உடன்படவும் முரண்படவும் வேண்டிய புள்ளிகள் எல்லாருக்கும் இருக்கும். அவை பற்றித் தொடர்ந்து பேசவும், எழுதவும் என்றும் விரும்புகிறேன்.

- அருண்மொழிவர்மன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)