அம்பேத்கர் படிப்பு வட்டம், மதுரை மற்றும் ஏப்ரல் 14 வ.புதுப்பட்டி இணைந்து வெளியிட்டிருக்கும் நூல் “போராளி எனும் அதிகாரம்”( உத்தப்புரம் குறித்த தலித் தரப்பு பதிவுகளும் விவாதங்களும்).

உத்தப்புரம் குறித்தது என்பதால் ஆர்வத்தோடு நூலை வாங்கிப் படித்தபோது மிகவும் வருத்தமும் ஏமாற்றமும் அடைய நேரிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உத்தப்புரம் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியவர்கள் ஏன் இந்த அளவு கட்சி மீதும், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி யுள்ளனர் என்று வியப்பு ஏற்பட்டது.

உத்தப்புரம் சுவர் இடிப்பு நிகழ்ந்தது 6 மே 2008. அதையொட்டி ஜூலை 2008 வரை எழுதப்பட்ட தலித் முரசு தலையங்கம், தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளி வந்த சு.ரவிக்குமார், சுகிர்த ராணி, அழகிய பெரியவன் ஆகியோரின் கட்டுரைகள், காலச்சுவடில் வெளிவந்த தி.ஸ்டாலின் கட்டுரை முதலில் இடம் பெற்றுள்ளன. 66 பக்கங்கள் கொண்ட நூலில் கடைசி 3 பக்கங்கள் சிபிஎம் கம்பம் கிளைச்செயலாளர் கடிதம் பின் இணைப்பாக உள்ளது. மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் 19 பக்கங்கள் மட்டுமே. மீதமுள்ள 33 பக்கங்கள் நூலுக்காக யாழன் ஆதி, அ.ஜெகநாதன், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளன. 2008 மே மாதம் நிகழ்ந்த நிகழ்வு பற்றி உடன்வினையாற்றி எழுதப்பட்ட கட்டுரைகளோடு இந்த மூவரும் தற்போது எழுதிய கட்டுரைகளை இணைத்து 2010ல் வெளியிட்டிருப்பது ஏன்? நூலைப் படித்தபோது இவர்களின் நோக்கம் தெளிவாகிவிட்டது.

சமீப காலமாக மார்க்சிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தீண்டாமைக்கு எதிராகப் போராடி வருவதை அங்கீகரிக்க இவர்களுக்கு மனமில்லை. இணைந்து நின்று போராட விருப்பமில்லை. போகட்டும். அவதூறு பொழிய வேண்டுமா?

எழுப்பப்பட்ட கேள்விகள், கருத்துக்கள், தாக்குதல்கள், அவதூறுகள் ஒரு நீண்ட பட்டியல். அவற்றில் சில-

“உத்தப்புரம் சுவர் பிரச்சனையில் தலையிட்டதன் மூலம் சாதி ஒழிப்பில் எவரையும் விட தாம் முன்னுக்கு வந்து விட்டதாக மார்க்சிஸ்ட்டுகள் தீர்மானித்து விட்டனர்”. இதுதான் நூலின் துவக்க வரிகள்.

“கண்ணுக்குப் புலப்படுகிற சாதிய வடிவத் தினை மட்டும் தாக்குதல் தொடுப்பது பிரபலத்தை தேடும் யுக்தியாகும்.” (பக்கம் 5)

“தலித்துகளின் அரசியல் எழுச்சி தங்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை வெளிப்படை யாக ஏற்கும் மனநிலையோ, கடந்தகாலப் போதா மைகளை ஒத்துக் கொள்ளும் நேர்மையோ அவர் களிடம் இல்லாமல் போய்விட்டது” (பக்கம் 6)

“சாதி ஒழிப்பு என்ற சொல்லாடலைக்கூட பயன்படுத்த முடியவில்லையே? தீண்டாமை ஒழிப்பு என்றுதான் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்” (பக்கம் 30)

“சாதியின் எந்தக் கல்லையும் அகற்றாமல் சுவரின் 16 உடை கற்களை அகற்றியது போதும் என்பது தீர்ப்பாக இருக்குமானால் அது எந்த வகையிலும் போராட்டமாகக் கருத முடியாது.” (பக்கம் 32)

“தலித் இயக்கங்களைத் தீப்பொறி ஆறு முகம் பாணியில் சாடவும் செய்கின்றனர்.” (பக்கம் 48)

“உத்தப்புரத்திற்காக மார்க்சிஸ்ட்டுகளின் பங்கை நாம் ஏற்பது - அரசியல் சார்ந்த அவர்கள் நடத்தும் நாடகத்திற்கு நாம் பணிந்து விட்டதாக பொருளாகாது.” (பக்கம் 54)

இவை சில உதாரணங்கள் மட்டுமே .

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலை போராட்ட காலத்திலேயே பூரண சுதந்திரம் வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவில் நிலப் பிரபுத்துவம், சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலை எடுத்தது (திட்டம் பாரா 1.3)

விடுதலைக்குப்பின் நிலத்திற்கான போராட் டத்தில் முன்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டு கள். தஞ்சை மண்ணில் நடந்த வீரம் செறிந்த போராட்டங்களுக்குத் தலைமையேற்றதும் கம்யூ னிஸ்டுகளே. அதன் மூலம் பயன்பெற்றவர்கள் நிலமற்ற ஏழை, தலித் விவசாயக் கூலிகளே. தற் போது இடது முன்னணி அரசுகள் மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவில் நிலச்சீர்த்திருத்தம் செய்து நிலம் வழங்கியிருப்பதும் நிலமற்ற ஏழை தலித் விவசாய கூலிகளுக்கே. முதன் முதலாக கிராமப் பஞ்சாயத்து தலைவர் முதல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மேயர் உள்ளிட்ட பதவிகளில் தலித் மற்றும் மலைவாழ் மக்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதும் கம்யூனிஸ்டுகளே!

 இருந்தாலும் இந்திய சமூகத்தில் புரை யோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை போன்ற சமூக பிரச்சனைகளை எடுத்து போராடுவதில் பலவீனம் இருந்தது. அது களையப் பட்டு தற்போது வீச்சாக இந்த இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு வெளிப்பாடுதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. அதன் ஒரு செயல்பாடுதான் உத்தப்புரம். இதை தலித் அமைப்புகள், போராளிகள் வரவேற்க வேண்டாமா?

இதற்கு முன்னால் ஏன் செய்யவில்லை என்று கேட்பதும் போதாமைப் பற்றி பொழுதெல்லாம் பேசுவதும் என்ன பயன் அளிக்கும்.

மாவட்டங்களில் ஆய்வு நடத்தி பல்வேறு தீண்டாமை வடிவங்களை கண்டறிந்து தொடர்ந்து உறுதியுடன் பல கட்ட இயக்கங்களை நடத்துவது பிரபலம் தேடும் யுக்தியா?

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் உடனடி நோக்கம் தீண்டாமையை ஒழிப்பது. சாதி ஒழிப்பு, தொலை நோக்கு இலட்சியம் . 2000 ஆண்டுகளாக மிகத் திறம்பட சாதியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ணாசிரமத்தை மையமாகக் கொண்டு பிரமிடு வடிவ கட்டமைப்புள்ளது. தனக்கு மேல் எந்த சாதி யும் இருக்கக் கூடாது. ஆனால் தனக்கு கீழ் குறைந்த பட்சம் ஒரு சாதியாவது இருக்க வேண்டும் என மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது. அகமண முறை, தொழில்வாரி சாதி அமைப்பு என கெட்டிப் பட்டு நிற்கிறது. நிலத்தோடும், பொருளாதாரத் தோடும் பின்னப்பட்டுள்ளது. இதை உடைத் தெறிய ஒன்றுபட வேண்டியவர்கள் செயல்படுபவர்களை அவதூறு செய்வது சாதியை ஒழிக்க எந்த விதத்தில் உதவும்? செயல்பாட்டுக்கு வராமல் கட்டுரைகள் எழுதுவது எதற்குப் பயன்படும்? குற்றம் கண்டுபிடித்தே சாதியை ஒழிக்கும் ரசவாதம் ஏதும் வைத்திருக்கிறீர்களா?

மார்க்சிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை தீண்டாமைப் பிரச்சனைகளில் தலையீடு செய்வதும், வர்க்க ஒற்றுமையைக் கட்டி சமூக மாற்றத்தை உருவாக்குவதும், நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து சாதியை முற்றிலும் வேரறுப்பதும் தனது லட்சியமாகக் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக உங்களுடைய நீளமான கட்டுரைகளில் ஏதும் முன் வைக்கவில்லையே? உங்களுடைய கட்டுரைகளில் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசு களை விமர்சிப்பதைவிட, சாதி ஆதிக்க சக்திகளைத் தாக்குதல் செய்வதைவிட மார்க்சிஸ்ட் கட்சியையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் மற்றும் எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் மீதான தாக்குதல் தான் நிறைந்து கிடக்கிறது.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை சமத்துவப் போராளி என்று குறிப்பிட்ட போஸ்டரை பார்த்ததும் ஆதவன் தீட்சண்யா சிரிப்பு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உத்தப்புரம் பற்றி என்ன கூறினார்? மார்க்சிஸ்ட் கட்சி தேவையில்லாமல் வன்முறையைத் தூண்டுகிறது. நான் பிள்ளைமார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிப்பேன். அவர்கள் நல்லவர்கள் என்று குறிப் பிட்டார்.

பேரையூருக்கு அம்பேத்கர் பிறந்த தினவிழா பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த திருமாவளவன் உத்தப்புரம் பற்றி விரிவாகப் பேசுவார். ஆதரவு தெரிவிப்பார், நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்த்த உத்தப்புரம் இளைஞர்களுக்கு அவரது பேச்சு ஏமாற்றம் அளித்தது. எனவே அவர்கள் கடும் சொற்களை பயன்படுத்தி திட்டினார்கள் என குறிப்பிட்டுள்ளார். சு.வெங்கடேசன் இந்த நூலில் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் சாதாரண தொண்டன் சிவப்புத் துண்டு அணிந்து சாதி ஆதிக்க சக்திகளை எதிர்த்து சுத்துப்பட்டு கிராமங்களில் எதிர் நீச்சல் போட்டு அம்பேத்கர் பிறந்த தின பேனர் இல்லாமலே தீண்டாமைக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை அவர் பாணியில் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கரை எந்த வகையிலும், அவதூறு செய்வது நோக்கமல்ல. இதனால் வெங்கடேசனும், மார்க்சிஸ்ட் கட்சியும் அம்பேத்கரை மதிக்க வில்லையெனக் குறிப்பிட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி அம்பேத்கரைப் பெரிதும் மதிக்கிறது. அவருடைய பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது. ஆண்டு தோறும் அவரது நினைவு நாளில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து கவுரம் செய்கிறார்கள். இவை யெல்லாம் கட்டுரையாளர்களுக்குத் தெரியாது போலும்.

தோழர் சம்பத்தின் செம்மலர் ஜூலை 2008 பேட்டியை கொச்சைப்படுத்தியுள்ளனர். இடது சாரிகள், தலித் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதை ஏற்காமல் “அய்க்கியத்தை விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்க போவது ஒருவகை தந்திரம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதய சுத்தியோடு ஒற்றுமைக்கான அறைகூவலைகூட திரித்துக் கூறுவது சரிதானா?

சமீபத்திய சம்பவங்களைகூடத் திரித்துக் கூறியுள்ளனர். மாவட்டங்களுக்கும் பேருந்து கழகங் களுக்கும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப் பட்டது. ஆனால் வீரன் சுந்தரலிங்கம் பெயர் சூட்டப்பட்டபோது மட்டும் சாதி ஆதிக்க சக்திகள் அதனை ஏற்கவில்லை. கலவரம் செய்தனர். பஸ்சில் ஏற மறுத்தனர். அப்போது வீரன் சுந்தரலிங்கம் பெயரை வைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தது மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால், தமிழக அரசு சமரசம் செய்து அனைத்து பெயர்களையும் நீக்கியது. சாதிய சக்திகளின் நிர்பந்தத்திற்கு அரசு அடிபணிந்தது. இதைத் திரித்துக் கூறி மார்க்சிஸ்ட் கட்சி பெயர் வைப்பதை எதிர்த்தாக எழுதியுள்ளனர்.

தோழர் பிருந்தாகாரத்தின் குங்குமப் பொட்டைக்கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. சுர்ஜித் ஏன் தாடி வைத்தார்?. நம்பூதிரி பாட் என்ற சாதிப் பெயர் எதற்கு? என சிறுபிள்ளைத்தனமாகப் பலரும் கேட்டு பதில் சொன்ன விசயத்தை புதிய வடிவில் இவர்களும் கேட்டுள்ளனர். கட்சிக்கு வருவதற்கு முன்பாகவே பிருந்தா காரத் வங்காளப் பெண் என்ற முறையில் குங்குமப் பொட்டு வைத்திருக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அது நீடிக்கிறது. அவ்வளவுதான். காவல்துறையின் அடக்குமுறையை மீறி போராடி உத்தப்புரம் சென்று அந்த மக்களுடன் மகிழ்ச்சியுடன் உணவு அருந்தினார். சாதிப்பிரச்சனைகளில் உ றுதியான நிலை எடுத்து தீண்டாமைக்கு எதிராகப் போராடி வருகிறார். அதெல்லாம் இவர்கள் கண்ணுக்குப் புலப்படவில்லை. குங்குமப்பொட்டு மட்டும்தான் தெரிகிறது.

 உத்தப்புரத்தில் பிள்ளைமார் என்பதால் அவர்கள் சிறுபான்மை சாதி என்பதால் பிரச்சனையில் மார்க்சிஸ்ட்டுகள் தலையிட்டுள்ளனர். முக்குலத்தோர் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் என்ன செய்தார்கள் எனக் கேட்டுள் ளனர். மேலவளவு, கவணம்பட்டி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, வடிவேல்கரை, மேல உரப்பனூர், கைலம்பட்டி இவை எந்த வகையைச் சேர்ந்தவை?

திருமாவளவனும், தலித் தலைவர்களும் எடுத்த நடவடிக்கைகளை மறைத்துவிட்டு மாவட்ட ஆட்சியரின் துணையோடு தேர்தலை நடத்திவிட்டு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி விசயத்தில் முழுமையாக மார்க்சிஸ்ட் கட்சிதான் என பிரச்சாரம் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். திருமாவளவனின் பணியை கட்சி குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இறுதிக் கட்டத்தில் வெற்றிக்கான சில படிகளை உருவாக்கி யது யார்? பத்தாண்டு காலம் தலித் தலைவர் பதவி யில் இல்லாவிட்டால் சுழற்சி முறை இல்லை யென அறிவிக்க வற்புறுத்தி போராடியது மார்க்சிஸ்ட்டுகள். தேர்தலை தடைசெய்ய வேண்டும் என சாதி ஆதிக்க சக்திகள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது கட்சியின் சார்பில் இந்தக் கட்டுரையாளர் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்து அந்த வழக்கை நடத்தி வெற்றி கொள்ள முடிந்தது. அரசின் பிரதிநிதி என்ற முறையில் மாவட்ட ஆட்சித் தலைவரும் இதில் தலையிட்டு தேர்தலை நடத்த உதவி செய்தார். ஊராட்சித்தலைவர் பதவிக்கு மட்டும் போட்டி யிடாமல் அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர் களை நிறுத்தி வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி பஞ்சாயத்து நிர்வாகத்தை அமைப்பதில் மார்க்சிஸ்ட் தோழர்கள் முன் நின்றனர். வெற்றி பெற்ற தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சென்னையில் வரவேற்பும், பாராட்டும் தமிழக அரசு நடத்தியபோது திருமாவளவனும், அதில் பங்கேற்றார். விடுதலை சிறுத்தைகளின் பணி அங்கீகரித்துப் பாராட்டப்பட்டது.

இடதுசாரி கட்சிகளுக்குள்ளும் வேறு பாட்டை உண்டாக்க இந்த நூலில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. பாப்பாபட்டி, கீரீப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டுமென சிபிஐ தலைவர் து.ராஜா அவர்கள் இந்து பத்திரிகையில் கட்டுரை எழுதியதையும் மாநில அளவில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது து.ராஜா துவக்கி வைத்ததையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த உண்ணா விரதத்தில் சிபிஐ தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றவர்கள் கலந்து கொண்டதைக்கூட குறிப்பிடவில்லை. இந்த உண்ணாவிரதத்தை சிபிஎம் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், இந்தக் கட்டுரையாளர் மற்றும் மதுரை மாவட்ட சிபிஎம் தலைவர்கள் சென்று ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் வாழ்த்துரை வழங்கியதை இப்படியா மறைப் பது?

சில தனிப்பட்ட சம்பவங்களையும் இவர் கள் விட்டு வைக்கவில்லை. மேலவளவு பிரச்சனை யில் மச்சக்காளை கட்சிக்கு எதிரான நிலை எடுத்த தையும், உத்தப்புரம் பிரச்சனையில் கம்பம் கிளைச் செயலாளர் லட்சுமணன் கடிதம் எழுதியதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். குடியாத்தம் பொதுத் தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த லதாவை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற்றதை குறிப்பிடும் போதுகூட அதை அங்குள்ள செஞ்சட்டை வீரர்கள் சிலர் எதிர்த்தது ஏன் என வினா தொடுத்துள்ளனர். கட்சியின் நிலைபாட்டுக்கு மாறாக நிலையெடுத்த இவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதுதான் மார்க்சிஸ்ட் கட்சி. லட்சத்திற்கும் மேற் பட்ட கட்சி உறுப்பினர்கள் கட்சியின் நிலையில் நின்று உறுதியுடன் போராடுவது இவர்கள் கண் ணுக்கு தெரியவில்லை. விதிவிலக்காக அங் கொன்றும், இங்கொன்றுமாக கட்சி நிலை பாட்டை மீறும் தனிநபர்கள் மட்டும் தெரிகிறது.

கொடியங்குளத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி என்ன செய்தது என்று கேட்டுள்ளனர். காவல்துறை தலித் மக்களை தாக்கியபோது அங்கு அடக்குமுறைகளை மீறிச் சென்றவர் தோழர் சம்பத். அதே மாவட்டத்தில் நாலுமூலைக்கிணறு கிராமத்தில் தலித் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்திய போது அதில் தலையிட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று ரூ. 23 லட்சம் நஷ்டஈடு பெற்றுக் கொடுத்ததும், மாவட்டக் காவல்துறை கண்காணிப் பாளர் உட்பட 88 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வைத்ததும் மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

இந்த நூலில் சுகிர்தராணி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். “அந்தந்த உட்சாதிகளுக்காக அந்தந்த இயக்கங்கள் மட்டும் போராட வேண்டும் என நினைத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவருக்கும் தலித் என்ற பொதுச் சொல் எதற்கு?” மேலவளவிற்கு வருபவர்கள் உத்தப்புரத்திற்கு வருவதில்லை. உத்தப்புரத்திற்கு வருபவர்கள் மேலவளவிற்கு வருவதில்லை. இருவரும் அருந்ததியர் பிரச்சனைக்கு வருவதில்லை. சுகிர்தராணி சொல்வதையாவது பரிசீலிப்பீர்களா?

அருந்ததியர்கள் மீது மார்க்சிஸ்ட்டுகளுக்கு ஏன் திடீர் பாசம்?. உள் ஒதுக்கீடு எதற்காக? பிற்பட்ட வகுப்பில் உள்ள சாதியினருக்கு உள் ஒதுக்கீடு உள்ளதா? என்றொல்லம் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதுவரை கிடைத்துள்ள இட ஒதுக்கீட்டுப் பலன் உரிய விகிதத்தில் அருந்ததியர் களுக்குக் கிடைக்கவில்லை. எனவே தான் உள் ஒதுக்கீடு கோரிக்கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன் வைத்தது, பெற்றது. பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சாதிகள் இருப்பதால் உள் ஒதுக்கீடு நடைமுறை சாத்தியமில்லை. பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் என்ற ஒரு பகுதி உருவாக்கப்பட்டு தனியாக இடஒதுக்கீடு அளிக்கப் பட்டுள்ளது. அதிலும் உரியவர்களுக்கு பலன் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக வருமான வரம்பு வேண்டும் என்று சொன்னது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் இந்துத்துவாவை, மனுவேதத்தை எதிர்க்க வேண்டாமா? கேள்வி மிக மிகச் சரியானது. ஆனால், இன்றுவரை இந்துத்துவாவையும் மனுவின் வர்ணாசிரமத்தையும் உறுதியுடன் எதிர்ப்பது மார்க்சிஸ்ட் கட்சி அல்லவா?

மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தி தலித் சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இதுகூட இவர்களை உறுத்துகிறது. தமுஎகசவிற்கு தலித் இலக்கியம் பற்றி கொள்கை இல்லையென கூறியுள்ளனர். 1996-ல் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இந்த எழுத்தாளர் சங்க மாநாட்டில் தலித் இலக்கியம் பற்றி விவாதித்து கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தலித் அல்லாதவர்களும் தலித் இலக்கியம் படைக்கலாம். ஆனால் தலித் எழுத்தாளர்கள் படைக்கும்பொழுது அது இன்னும் உணர்வுப்பூர்வமாகவும், சிறப்பாகவும் அமையும் என்பதையும் அந்த மாநாடு இறுதிப்படுத்தியுள்ளது.

இன்னொரு கொடுமையான கேள்வி: “தஞ்சையில், நாகையில் பள்ளன் கட்சி, பறையன் கட்சி எனக் கூறிக் கொள்ளும் மார்க்சிஸ்ட்டுகள் மதுரைப் பகுதியில் யாருடைய கட்சி? அதிமுக வுக்கு அடுத்தப்படியாக அது அறிவிக்கப்படாத முக்குலத்தோர் கட்சி.”

மார்க்சிஸ்ட் கட்சியில் யாரையும் சாதிச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு சேர்ப்பதில்லை. போராட்டக் களத்தில் முன்னுக்கு வரும் தோழர் கள் கட்சியில் இணைகிறார்கள். உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர் வட்டங்களில் அதிக எண்ணிக்கையில் முக்குலத்தோர் இருப்ப தால் கட்சியிலும் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கலாம். மதுரை மாவட்ட கட்சியில் மாவட்டத்தில் வாழும் மக்களை சேர்க்காமல் சந்திர மண்டலத்தில் இருந்தா ஆட்களைக் கொண்டுவந்து சேர்க்க முடியும்? ஒன்றை மட்டும் பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். தீண்டாமைப் பிரச்சனைகளில் தலையீடு செய்யும் பொழுது எங்களது தோழர்களை, பெண்களை நீ யாருக்கு பிறந்தாய் என்பது தொடங்கி எழுத முடியாத பல அர்ச்சனைகளை சாதி ஆதிக்க சக்திகள் செய்த போதும், உறுதியுடன் போராடியவர்கள் அவர்கள் தான். அவர்களுக்குச் சாதி இல்லை. அவர்கள் மார்க்சிஸ்ட்டுகள்.

உத்தப்புரம் பிரச்சனையை முழுவதும் உள் வாங்கிக் கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. கட்டப் பஞ்சாயத்து ஒப்பந்தம் உருவான நாள் 23.6.89. இதனடிப் படையில் எழுப்பப்பட்டதுதான் முத்தலாம்மன் கோவில் சுற்றுச்சுவர். கலவரம் நடந்த நாள் 2.8.89. இதன் பிறகுதான் இந்தச் சூழ்நிலையை பயன் படுத்தி சாதி ஆதிக்க சக்திகள் தலித்துக்களை தங்கள் பகுதிக்கு வரவிடாமல் தடுக்க உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை எழுப்பினார்கள். இந்தச் சம்பவங்கள் தேதிகள் மாற்றி பதிவு செய்யப் பட்டுள்ளன. (பக்கம் 17)

பிரபலத்தைத் தேடும் யுக்தி அல்ல. தலையீடு செய்துவிட்டு வேறு பிரச்சனைகளுக்கு மார்க் சிஸ்ட்டுகள் செல்லவில்லை. மே 2008 முதல் இன்று வரை எத்தனை காவல்துறை தடியடிகள் அராஜ கங்கள், கைதுகள் இவை அனைத்திலும் மார்க் சிஸ்ட் தோழர்களும், பெண்களும் அந்த மக்க ளோடு வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். காவல் துறை தாக்குதல் நடத்தியபோது கட்சி சார்பில் நிவாரணம் 2 லட்சம் வழங்கப்பட்டது. மாநில பெண்கள் ஆணையத்திற்கு புகார் செய்யப்பட்டது. மாதர் சங்கம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து இடைக்கால நிவாரணம் 10 லட்சம் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் உச்ச கட்டமாக கடந்த ஜூலை 12 அன்று டி.கே.ரங்கராஜன் எம்.பி, சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் மீது தடியடி நடத்தப் பட்டது. இவையெல்லாம் வெறும் பிரபலத்திற் காகவா? தீண்டாமையை எதிர்த்த போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி. இதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கொள்கை. எனவே இது கொள்கைப் போராட்டம்.

தலித் எழுச்சியைக் கட்சி வரவேற்கிறது. இதர சாதி அமைப்புகளை, சாதிக்கட்சிகளைப் பார்ப்பதுபோல் தலித் அமைப்புகளை, தலித் கட்சிகளைப் பார்க்கக் கூடாது. இது அடக்கு முறைக்கு எதிரான எழுச்சி. இந்த எழுச்சியில் ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது எனச் சரியாகவே மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீடு செய்துள்ளது. (திட்டம் பாரா 5.10)

வட மாநிலங்களில் ஏற்பட்ட தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சியை கட்சி வரவேற்று வர்க்க ஒற்றுமையைக் கட்டவேண்டும் என விரும்புகிறது. அனைத்து சாதிய ஒடுக்குமுறை களையும் எதிர்த்துப் போராட வேண்டுமென விரும்புகிறது.

வண்ணக்கதிர் 18.5.2008ல் சு.ரவிக்குமார் எம்எல்ஏ எழுதிய கட்டுரை இவ்வாறு முடிகிறது: “அத்தகைய போராட்டங்களை தலித்துகள் மட்டுமே, இடதுசாரிகள் மட்டுமே தனித்து நடத்த இயலாது. அதற்கு ஒரு பரந்த ஜனநாயகக் கூட்டு உருவாக்குவது அவசியம். அதை இடதுசாரிகள் தான் உருவாக்க முடியும்”. இதை மேற்கோள் காட்டியதற்காக சம்பத்தைக் கேலி செய்து எழுதியுள்ளனர்.

நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை வேறுபடுத்திப் பாருங்கள். தீண்டாமையை உறுதி யாக எதிர்க்கும் சக்திகள் அனைவருடனும் இணைந்து நின்று போராட வாருங்கள். இல்லா விட்டால் வரலாற்றில் உங்களுக்கு இடமில்லாமல் போய்விடும்.

(வெ.சுந்தரம் - மாநிலக்குழு உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சி.)

Pin It