கூட்டறிக்கை:

முப்பது வருட ஆயுதப்போராட்டம் நந்திக்கடலோடு இரத்தமும், உயிர்களுமாகக் கரைக்கப்பட்ட பின்னர், தமிழ்ப் பேசும் மக்கள் தாம் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்பதை உணர ஆரம்பித்துள்ளனர். உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் தமிழ்ப் பேசும் மக்களின் சமூக நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்படுமானால் அங்கு இலங்கை அரச பாசிசத்தின் கோரத்தைக் குறித்துப் பேசாத ஒன்றைக் காண்பது அரிது. தாம் சார்ந்தவர்கள் சாரி சாரியாகக் கொல்லப்படுகின்றபோது உலகத்தின் அனைத்து அதிகாரங்களும் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்ததை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆயிரம் தத்துவங்களும், பிரச்சாரங்களும் இல்லாமல் தம் கண்முன்னே அநீதியையும் ,அக்கிரமத்தையும் உணர்ந்துகொண்டவர்கள் அவர்கள்.

முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் இந்திய அரசோடும் உலகின் அனைத்து அதிகாரங்களோடும் இணைந்து நடத்தும் இனச்சுத்திகரிப்பை கண்ட தமிழ்ப் பேசும் மக்கள்  இன்று திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இலங்கை இந்திய அதிகாரங்கள் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து ஆதிக்க சக்திகளுமே தம்மை நிர்வாணமாகக் கண்டுகொண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு பயங்கொள்கிறார்கள். அவர்களை ஒரு புறத்தில் தனிமைப்படுத்தவும் மறுபுறத்தில் இலங்கை அரசின் அழிக்கும் நிகழ்ச்சி நிரலோடு அவர்களை இணைத்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.

அனைத்துத் தமிழ் அரசியல் வியாபாரிகளையும் உள்வாங்கி வைத்துக்கொண்டு இலங்கை அரசு தனது இந்த செயற்பாட்டுத் தளத்தை விரிவாக்கிக் கொள்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் மிகவும் திட்டமிட்ட வகையில் தனக்கு ஏதுவாக பயன்படுத்திக்  கொள்கிறது இலங்கை அரசு. அரசியலற்ற தலித்தியம், அரசியலற்ற மனிதாபிமானம், அரசியலற்ற அபிவிருத்தி, அரசியலற்ற இலக்கியம் என்று தனது சமூகவிரோத அரசியலுக்கு எதிர்வினையாற்றாத ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் இலங்கை, இந்திய உலக அதிகாரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.

அரசியலற்ற இலக்கியத்தை நிறுவனப்படுத்தும் முதலாவது "சர்வதேச" முயற்சியாக இலங்கையின் தலைநகரில் தமிழ் எழுத்தாளர்களால் ஏற்பாடு செய்ய்யப்பட்டிருக்கும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டைக் கருதலாம். அவர்களின் நிகழ்ச்சி நிரலின் சிறிய முதலாவது ஆரம்பமாக "எழுத்தாளர் மாநாடு" இருக்கலாம்; ஆனால் அதன் பின்னணியில் உருவமைக்கப்படுகின்ற அனைத்து மக்கள் விரோத அரசியலும் இவ்வாறு தான் ஆரம்பமாகியிருக்கிறது.

ஒரு நிகழ்வின் அளவையும் பருமனையும் விட கோட்பாடு சார்ந்த அதன் உள்ளடக்கம் என்பது தான் பிரதானமானது. ஆரம்பத்தில் புலம்பெயர் தேசங்களிலிருந்து ஒரிருவர் தான் அரசின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டனர். இன்று தமிழ்ப் பேசும் மக்கள் கூட்டத்தின் ஒரு குறித்த பகுதியினரையே அவர்கள் தமது வலைப்பின்னலுக்குள் உள்ளடக்குவதில் வெற்றிகண்டுள்ளனர்.

அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் தமது சொந்த நலன்களுக்கு அடகு வைத்துவிடலாம் என்பதை சமூகப் பொதுப்புத்தியாக மாற்றும் இன்னொரு நிகழ்வுத்திட்டம் தான் சர்வதேசத் தமிழ்  எழுத்தாளர்கள்  மாநாடு.

கொலைகளும் கூக்குரல்களுமாகக் காட்சிதரும் இலங்கை அரசின் உள் முற்றத்தில், மனிதப் பிணங்களின் மேல் நடந்து சென்று கூட்டம் போடக் கூப்பிடும் அரசியலற்ற இலக்கியவாதிகள் ஓர் ஆரம்பம் மட்டுமே. இது குறித்துப் பேசும் சுதந்திரமுள்ள அரசியல் சூழலில் வாழுகின்ற ஒவ்வொரு சமூக உணர்வுள்ள மனிதனும் எதிவினையாற்ற மறுத்தல் என்பது அவமானகரமானது. 

முதலாவதாக சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் அடிப்படையில் பொதிந்துள்ள பொதுவான அரசியலின் தீவிர வலதுசாரிச் சந்தர்ப்பவாதம் குறித்துப் பேசப்பட வேண்டும். இரண்டாவதாக இன்றைய‌ சமூகப் புறச் சூழலில் அதன் பயன்பாடு குறித்து சொல்லப்பட்ட வேண்டும்.

ஈழப் படுகொலைகளின் பின்னான அரசியல் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உரைகல். இங்கு வெறுமனே அரசியல் கனவான்களாக உலாவந்த பலர் செய்ற்பாட்டுத் தளத்தை நோக்கி நகரவேண்டிய தேவையை இது உருவாக்கியுள்ளது. இங்கு உண்மைக்கும் - பொய்மைக்கும், நீதிக்கும் - அநீதிக்கும், அடக்குபவனுக்கும் - அடக்கப்படுவனுக்கும் இடையேயான அணிசேர்க்கைகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அடக்குமுறையின் பக்கத்திலும், இலங்கை அரசு சார்ந்தும் வெளிப்படையாகவே ஓர் அணி சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. அதிகாரத்தின் அரவணைப்பிலுள்ள, இலங்கை அரசின் வலைப்பின்னலுள் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொருவரும் இந்த மாநாட்டை ஆதரிக்கின்றனர் என்பதே இதன் அரசியலற்ற அரசியலைப் புரிந்துகொள்ள நீண்ட விவாதங்கள் தேவையற்றவை என உணர்த்தி நிற்கின்றது.

தெருக்களில் அனாதைகளாக கொன்றுபோடப்பட்ட ஒவ்வொரு தமிழ், சிங்கள   எழுத்தாளர்களினதும் உணர்வுகளையும் தமது அரசியலற்ற இலக்கியத்திற்கு விலைபேசி விற்பனை செய்யத்துணியும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சார்ந்த எழுத்தாளர்களான இவர்களை நிராகரிக்குமாறு மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறோம்.

தேடகம் - கனடா           
புதிய திசைகள் - இங்கிலாந்து  
மே 18 இயக்கம் - கனடா  
இனியொரு - இங்கிலாந்து 
அசை - பிரான்ஸ் 
03-12-2010  

- அனுப்பியவர் -‍ 'இனியொரு' அசோக் யோகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)