தோழர்களே, சிங்கள இனவெறி படுகொலைக்கெதிராக நாம் போராடினோம். நம்மால் இயன்றவரை போராடினோம். துரோகங்கள் இருட்டடிப்புகள் நாடகங்களை மீறி போராடினோம். இந்த கடமை முடியவில்லை. நம் மக்களின் குருதி காயவில்லை. எந்த சிறு அரசியல் தீர்வையும் இனவெறி- குடும்ப- கும்பலாட்சி- கொள்ளைக்காரத்தனத்தின் மொத்த உருவமான ராஜபக்சே தமிழர்களுக்கு அளிக்க தயாரில்லை. ஆகவே உலக தமிழர் ஒற்றுமை என்ற மாபெரும் சக்தி தான் தமிழரின் கண்ணீரை துடைக்க இருக்கும் ஒரே ஆயுதம். அதிலும் நில-அரசியல்படி தமிழக தமிழரின் ஒற்றுமை இன்றியமையாதது.

தமிழகத்தின் ஆளும் குடும்ப - கும்பலாட்சியும் அதன் எடுபிடிகளும் ஒற்றுமையை குலைக்க செய்யாத சதியில்லை; போடாத நாடகமில்லை. அது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் தற்போது போராடும் நண்பர்களுக்கிடையே பிளவு உருவாக்கவும் நமது உண்மையான எதிரியை குறிவைப்பதில் இருந்து திசை திருப்பும் நோக்கிலும் சில கருத்துக்கள் பரப்பபடுகின்றன. அவல முரணாக இதை பரப்புபவர்களும் ஆதரிப்பவர்களும் தமிழ்தேசிய உணர்வுள்ள நண்பர்கள் தான். தமிழகத்தில வாழும் சிறுபான்மை தேசிய இனத்தை சேர்ந்தவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று பரப்புரை செய்கிறார்கள். இக்கருத்து மலையாளிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்றும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை விரட்டி அடிக்க வேண்டும், அவர்கள் தமிழகத்தின் துரோகிகள் என்றும் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறார்கள் என்றும் எந்தக் கேள்விகளும் இன்றி பரப்பவும் ஆதரிக்கவும் செய்கிறார்கள். இதை தான் நாம் சிங்கலனிசம் என்கிறோம். ராஜ்தாக்கரேயிசம் என்கிறோம்.

ராஜபக்சே கும்பல் ஒரு ராணுவ சர்வாதிகார குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த கொள்ளைக் கும்பல் இலங்கை வளத்தை இந்திய சீன கொள்ளையர்களுக்கு அள்ளி கொடுத்து அந்த நாட்டையே உலகின் வறுமை மிக்க நாடுகளில் ஒன்றாக மாற்றி வைத்துள்ளது. சிங்கள மக்களும் தொழிற்சங்கங்களும் போராடும்போது உங்களின் வறுமைக்கும் இந்த நிலைக்கும் தமிழர்கள் தான் காரணம் அவர்கள் தான் படிப்பை பறிக்கிறார்கள், தொழிலைப் பறிக்கிறார்கள், வணிகத்தைப் பறிக்கிறார்கள் என்று வெறி ஊட்டி தனது கொள்ளையை மறைத்து கொள்கிறது. 50 ஆண்டு கால சிங்கள ஆளும் வர்க்கத்தின் பிழைப்பு இதில் தான் நடக்கிறது. அதன் உச்சமாக தமிழர்களின் மீது பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு வெறியூட்டி வெற்றி கண்டு விட்டார்கள். சிங்கலனிசம் வெற்றி, இனவெறி வெற்றி.

தமிழகத்தைப் பார்ப்போம். தமிழகத்தின் வளங்களை பறிப்பவர்கள் யார்? தமிழ்-மலையாள-தெலுகு‍ கன்னட- வட இந்திய -பன்னாட்டு முதலாளிய கும்பல்கள் தான். கர்நாடகத்தை- ஆந்திராவை -கேரளாவை- சடிஸ்கரை- பீகாரை- ஜர்கண்டை- அனைத்து இந்திய மாநிலங்களையும் கொள்ளை அடிப்பது யார்? இதே கூட்டு கும்பல் தான். ஆனால் தமிழகத்தில் சிறுவணிகம் செய்தும் உடல் உழைப்பு செய்தும் பிழைத்து வரும் அண்டை மாநில ஏழை நடுத்தர மக்களை குறிவைத்து திட்டமிட்டு 'இவர்கள் எதிரிகள்' என்றும் 'இவர்களை விரட்டி அடிக்க வேண்டும்' என்றும் கருத்துப் பரப்பல் நடக்கிறது. அதிலும் தெலுங்கர் என்றால் நாயக்கர் ஆட்சி காலத்தில் வந்த தெலுங்கு பேசும் மக்கள் வரை இது பொருந்துமாம். இவர்களைத் தேடிப் பிடித்து தமிழரை அடையாளம் பார்க்கும் பணி தொடங்கப்பட வேண்டுமாம். இப்படிதான் ஒவ்வொரு சாதிகளின் வரலாற்றையும் ஆராய்ந்து தமிழரைப் பிரித்துவிட்டு மற்றவர்களை விரட்டி அடிப்பார்களாம்.

இந்த கருத்தைப் பரப்பும் பிரிவினருக்கு நமது 10 கேள்விகள்:

1. உலக அளவில் தமிழர் பரவி இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறீர்களா வெட்கப்படுகிறீர்களா?

2. அவர்களை எல்லாம் தம் தாயகங்களுக்கு உடனே திரும்பிவர உத்தரவிடுவீர்களா?

3. அவர்கள் அனுப்பும் பணம் அவர்கள் வாழும் நாட்டு மக்களிடம் களவாடப்பட்டது என்று சொல்லி மறுப்பீர்களா?

4. மலேசியாவில் தமிழ் வழியில் படிக்க தமிழர்களை அனுமதிக்க வேண்டுமா? கூடாதா?

5. அண்டை மாநிலத்தில் வாழும் தமிழர்களை விரட்டி அடிக்கச் சொல்லும் அரசியல்வாதிகளிடம் என்ன கோரிக்கை வைப்பீர்கள்.?

6. மலையகத் தமிழர் 5 லட்சம் பேரை திருப்பி அனுப்புவதை ஏற்றுக்கொண்ட இந்திய அரசை தாங்கள் கண்டிப்பீர்களா? ஆதரிப்பீர்களா?

7. தேசிய இனப் போராளிகள் தேசிய சிறுபான்மையினர் உரிமையை ஆதரிக்க வேண்டுமா எதிர்க்க வேண்டுமா?

8. மகராஷ்ட்ராவில் மராத்தி உரிமை பேசும் ராஜ்தாக்கரே தமிழர்களையும் விரட்டி அடிக்கும் பட்டியலில் வைத்துள்ளார். அவரிடம் என்ன பேசுவீர்கள் ?

9. தமிழரை பிறப்பால் தீர்மானிப்பதா அவர்களின் அரசியல் ஆதரவு நிலையில் இருந்து தீர்மானிப்பதா ?

10. நமது அரசியல் சிங்கலனியமா? தமிழ் தேசியமா?

எந்தப் பிரச்சனையையும் அரசியல் பொருளாதார ஆய்வில்லாமல் அணுகினால் கடைசியில் அது சாதி - இன -மதம் என ஏதாவதொரு அடையாள பிரச்சனையாக மாறி சாதிய - இனவாத - மதவாத அரசியலாக சீரழியும். இவை அனைத்துக்கும் ஆன கலவையாக ராஜ்தாக்கரே அரசியலைப் பார்க்கலாம். அதற்கு அரசியல் பெயர் பாசிசம்.

- தங்கபாண்டியன், மதுரை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It