உழவரைப் போற்றுதல்

சான்றோரை அடுத்து நம் இலக்கியங்கள் உழவர் களையும் வேளாண்மையையும் போற்றும் சமூக மதிப்பை உருவாக்குகின்றன. ‘உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்று புறநானூறு உழவரைச் சிறப்பிக் கின்றது (புறம். 18). வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர் சோழன் கிள்ளிவளவனிடம் ‘உன் படை வீரரது போர்க்கள வெற்றி உன் நாட்டு உழவரின் வேளாண் வளத்தால் வாய்த்தது என்பதை மறவாதே. உழவரின் பாரம் ஓம்பி அவர்களைப் பாதுகாப்பதை முதற் கடமையாகக் கொண்டால் பகைவரும் உன் அடி பணிந்து போற்றுவர்’ என்கின்றார் (புறம். 35). பாரியினது பறம்புமலையில் உணவு வளம் செழித்து விளங்குவதால் முற்றுகைப் போரில் அவனை விரைந்து வெல்ல இயலாது என்ற புறநானூற்றுக் கருத்தையும் இதனோடு ஒப்புநோக்குதல் வேண்டும் (புறம். 109). ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் என்ற அரசன் உழவர்க்கு ஒரு துன்பமும் உண்டாகாமல் பாதுகாத்து வந்தான் (சிறுபாண். 233). சங்க இலக்கியங்கள் உழவரைச் சுட்டும்போது ‘மலைகண்டாற் போன்ற நிலைபொருந்திய உயரமுள்ள பெரிய பல நெற்கூடுகளை உடைய உழவனே’ என நெற்களஞ்சியத்தோடு அவனை இணைத்துப் பேசுகின்றன (நற். 60).


உழவர் தங்கள் வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருள்களை வறியோர்க்கு வழங்கும் ஈகைப் பண்பை இயல்பாகக் கொண்டிருந்தனர். இதனாலேயே வேளாண்மை என்ற சொல் ஈகை, கொடை, உதவி என்றும் பொருள் பெற்றது. வேளாண் தலைவன் பண்ணன் என்பவன் இரவலர்க்கு வழங்கும் ஈகைப் பண்பை அறிந்த சோழன் கிள்ளிவளவன் தான் உயிர்வாழும் நாளையும் பண்ணன் பெற்று வாழ்வானாக என்று வாழ்த்தினான். வேளாண்மைச் செல்வத்தால் பிறர் வறுமையைப் போக்கும் பண்ணனைப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்ற பொருளாழமிகுந்த தொட ரால் சோழ மன்னன் சிறப்பித்தான் (புறம். 173). இத்தொடர் உழவர் அனைவர்க்கும் பொருந்துவதாகும். உழவரே போர்க்காலங்களில் படைக்கருவி ஏந்திப் போர்க்களம் செல்வர் என்று தொல்காப்பியம் கூறுகின்றது (தொல். 1587). தமிழகத்தில் போர்புரிய சத்திரியர் என்று தனி இனம் இருந்ததில்லை. இரப்போர் சுற்றமும் மன்னனது ஆட்சிச் சிறப்பும் உணவை விளைவிப்போர் கையில் தங்கியுள்ளது என்கின்றார் இளங்கோவடிகள் (10:149-150). சிலப்பதிகாரம் நாடுகாண் காதையில் வேளாண்மை வளத்தையும் உழவரது உயர்ந்த வாழ்வையும் இசையுடன் இணைந்த உழவுத் தொழிலையும் சித்திரிக்கின்றது (10:135-139).


திருவள்ளுவர் உழவிற்கென்று தனி அதிகாரமே வகுத்துள்ளார். அரசனது வெண்கொற்றக் குடை உழவரது குடையின் கீழ் அடங்கும்; உழவர் உழவுத் தொழிலைக் கைவிடுவார்களானால் பற்றை விட்டோம் என்ற துறவியர்க்கும் வாழ்வில்லை, உழவே தலை’ என உழவின் மேன்மையை வள்ளுவர் தொகுத் துரைக்கின்றார். உழவர் குறித்த இந்தச் சிந்தனையின் தொடர்ச்சி யாகக் கம்பர் ‘மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்கும் கை’ என்கின்றார். ‘உழுதுண்டு வாழ்வ தற்கு ஒப்பில்லை கண்டீர் பழு துண்டு வேறோர் பணிக்கு’ என்பது ஒளவையின் வாக்கு.


அன்று, இயற்கை உரத்தால் தமிழக வேளாண் நிலம் வளஞ்செறிந்து விளங்கியது (நற். 345). ஒரு யானை துயிலும் அளவுள்ள நிலத்தில் ஏழு யானைகள் உண்ணும் அளவு விளைச்சல் மிகுந்திருந்ததைப் புறநானூறு பதிவு செய்துள்ளது (புறம். 40). கௌரவர் போர் முடியும் வரையில் உதியன் சேரன் இருபடை வீரர்க்கும் பெருஞ்சோறு குறையாது வழங்கியுள்ளான் (புறம். 2). காவிரி பாயும் சோழ வளநாட்டில் வேலி ஒன்றுக்கு ஆயிரம் கலம் நெல் விளையும் என்று பொருநராற்றுப்படை கூறுகின்றது (246-248). பாண்டியனது மதுரை மாநகரில் நீர் வளச் சிறப்பால் ‘உழவுத் தொழில் ஓங்கி வளர்ந்தது; விதைத்த ஒரு விதையி லிருந்து ஆயிரக்கணக்கான தானியங்கள் விளைந்தன; விளை நிலங்களும் மரங்களும் ஏராளமான பயனைத் தந்து சிறந்தன; மக்கள் பசியும், நோயுமில்லாமல் அழகுடன் மகிழ்ந்து வாழ்ந்தனர்’ என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடு கின்றது (10-13). இயற்கை உரம், ஊடுபயிர் (மலைபடு : 121-123), சுழற்சி வேளாண்மை (குறு. 384), திணைசார்ந்த பயிர் விளைச்சல் இவற்றால் தமிழகம் உணவு விளைச்சலில் முனைப்புடன் விளங்கியது. நெல் முதலான நன்செய்ப் பயிர்கள் மட்டுமல்லாமல் கருங்கால் வரகு, இருங்கதிர் தினை, சிறுகொடிக்கொள், எள் எனப் புன்செய் வேளாண்மையிலும் தமிழர் அறிவுவளம் பெற்றிருந்தனர். இதனால், சங்கக் காலத்தில் உணவு விளைச்சலிலும் வாணிகத்திலும் தமிழகம் சிறந்து விளங்கியது.


நம்முடைய இலக்கியங்களில்தான் உழவர் பற்றிய மதிப்பும், உழவு பற்றிய மரபுவழி அறிவும் பதிவாகி உள்ளன. தமிழை ஒரு பாடமாகப் படிப்பதை ஒதுக்குவதால் இந்த மதிப்பையும், அறிவையும் உணராத தலைமுறையினர் பெருகுவர். இதனால், நாம் பன்னாட்டு அடிமையாகும் நிலை உருவாகும். இன்று பூச்சி மருந்து, உயிரித் தொழில் நுட்பம் எனும் மரபீனி மாற்றம் செய்த விதைகளால் நம் உடல்நலமும், சுற்றுச்சூழலும் விளைநிலங்களும் சீர்கெட்டு வருகின்றன. மூவாயிரம் ஆண்டுகள் மாறாத வளத்துடன் விளங்கிய விளைநிலங்கள் மூன்றே ஆண்டுப் பசுமைப் புரட்சியில் கிழடுதட்டிப் போய்விட்டன. அள்ளிக் கொடுத்த உழவர்கள் கடனாளியாகி விட்டனர். வேளாண்மையை மதிக்காத குமுகாயம் உருவாகின்றது. நெல் வயல்களை வேலியாகக் கொண்ட திருநெல்வேலி தன் பெயர் அடையாளத்தை வேகமாக இழந்து வருகின்றது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறும் இந்த நிலைதான் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. ஒவ்வொரு ஊரையும் சுற்றி வளமான விளைநிலங்கள் அன்று இருந்ததை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன (நற். 390). நிலத்தின் வளம் பெருகுவதும், சுருங்குவதும் அந்த நிலத்தில் வாழும் மக்களின் எண்ணத்தைச் சார்ந்தது, வாழ்பவர் இயல்பிற்கு ஏற்ப நிலம் இருக்கும், நிலத்திற்கு என்று தனியான இயல்பில்லை என்று புறநானூறு கூறுகின்றது (புறம். 185). விளைநிலங்களில் கட்டடங்கள் கட்டவோ மண் நிரப்பவோ கூடாது என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றார். மற்ற ஆட்சியர்களும் இதனைப் பின்பற்றினால் நன்மை விளையும்.


நெல்லையும், மலரையும் தூவி வழிபடுவது நம் பண்பாடு. மங்கல நிகழ்வுகளில் நாழி நிறைய நெல்லைக் குவியலாக வைத்து வழிபடுவர். இதனை ‘நிறைநாழி நெல்’ என்பர். ஆனால், இன்று ஒரு துணிக்கடையில் பட்டாடை விளம்பரத்தில் மணமகள் நிறைநாழி நெல்லைக் காலால் எட்டி உதைத்து வீட்டிற்குள் வருவதாகத் தொலைக்காட்சி யில் காட்டுகின்றனர். இதைத்தான் நாம் பண்பாட்டுச் சீரழிவு என்கிறோம். தெய்வமாகப் போற்றிய நிறைநாழி நெல்லை எட்டி உதைத்துக் கீழ்மைப்படுத்தும் சமுதாயம் விளைநிலங்கள் அழிந்து சுருங்குவதைப் பற்றிக் கவலைப் படவா செய்யும்? வழிபாட்டிலும் மங்கல நிகழ்வுகளிலும் பலவகைத் தானியங்களை மண்கலத்தில் வளர்த்து, அந்த முளைப்பாலிகையை நீரில் விட்டு நாடு வளம் பெற வேண்டுவது நமது பண்பு. இன்றும் இவ்வழக்கம் திருமண நிகழ்வுகளிலும் கிராம மக்கள் வழிபாட்டிலும் உள்ளது. ஆனால், ‘யாகம்’ என்ற பெயரில் ஒன்பான் தானியங்களை நெருப்பில் போடும் வழக்கம் பெருகி வருகின்றது. இது நமது உயர்வான வேளாண் மதிப்பிற்கு எதிரானது.


நிலத்தையும், காலத்தையும் முதற் பொருளாகக் கருதிய தமிழர் அறிவுநுட்பத்தைத் தமிழ்க் கல்வியால் மட்டுமே அறிய முடியும். தமிழ் இலக்கியத்தைக் கற்காத மாணவர் உடையாலும், உள்ளத்தாலும் மண் உணர்வி லிருந்து அயன்மைபடுத்தப்படுகின்றனர். மக்கள் தொகை மிகுந்த நாடு வேளாண்மைக்கு முதன்மை கொடுத்துச் சிந்திக்கவில்லை என்றால் விளைவு என்னவாகும்?


கடந்தகால வேளாண் வரலாற்றை உணர்ந்தால்தான் அதை நிகழ்காலப் போக்கோடு ஒப்பிட்டுப் பார்த்து அழிவைத் தடுத்துப் புதிய ஆக்கங்களைப் பெருக்கிச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஊகவணிகம், உலக வணிகம், வணிக ஒப்பந்தம், தேவையற்ற வேளாண் இறக்குமதி, கட்டுப்படி ஆகாத வேளாண் செலவு இவற்றால் உழவர்கள் மூச்சுத் திணறுவதைப் பற்றிக் கற்றோரில் எத்தனை விழுக்காட்டினர் கவலை கொள்கின்றனர்? எல்லாவற்றையும் பணமாக மட்டுமே பார்க்கும் கல்வியால் மனித மாண்பு பழுதுபட்டுப் போகும். மண்ணை மறந்த கல்வியால் நிலவளத்தை மட்டுமன்று; நில எல்லைப் பரப்பையும் இழந்தோம். கடவுளையும், சாதியையும் காப்பாற்றும் கவலையில் சிறிதளவு கூடக் கற்றவரிடம் வேளாண் வீழ்ச்சி பற்றிய கவலை இல்லை. தமிழ் இலக்கியக் கல்வி மண் மீதும், மாந்தன்மீதும் பற்றுகொள்ளும் பண்பை வளர்க்கின்றது. பிறரைச் சாராமல் நம்முடைய இயற்கை வளங்களைப் பெருக்கி, நமக்கு நாமே வாழும் வகையை வகுத்துக்கொள்ளும் அடிப்படை அறிவு நம்முடைய சங்க இலக்கியங்களில்தான் உள்ளது.


நிலமும் நீரும் மணலும்

உணவைத் தரும் வேளாண்மைக்கு முதன்மை யானவை நிலமும் நீருமாகும். எனவேதான் புறநானூறு ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கின்றது (18). ‘நீரின்று அமையாது உலகம்’ என நற்றிணையும் (1) திருக்குறளும் குறிப்பிடுகின்றன. குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியனிடம், “வானவாரி நிலம் மிகப் பரந்த அளவில் உடையதாக இருந்தாலும் அது ஓர் அரசனுக்குப் பெருமை தராது. ஆதலால், நிலம் குழிவாக உள்ள பகுதியில் நீண்ட நெடிய கரை அமைத்து நீரைத் தேக்க வேண்டும். இவ்வாறு நீரைத் தேக்கியவரே இந்த உலகத்தில் தங்கள் புகழைத் தளைத்தவராவர்” (புறம். 18) என்று கூறுகின்றார். குளம் தொட்டு வளம் பெருக்குவதே மன்னன் கடமை என்று பட்டினப்பாலையும் வலியுறுத்துகின்றது (284). ‘மழை பிணித்து’ ஆண்ட மன்னன் என்று பாண்டியனைச் சிலப்பதிகாரம் போற்றுகின்றது.


தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர். இரண்டு பக்கப் பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம். 118). கல்கொண்டு அணை கட்டப்பட்டதை ‘வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும்’ (தொல். பொருள். 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம். அரசன் பெயரில் குளம் இருந்ததைக் “கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர்” (நற். 340) என்று நற்றிணை தெரிவிக்கின்றது. குளங்களுக்குக் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் (அகம். 252). “நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர்” (அகம். 237) என நீர் வளத்தோடு இணைத்து ஊரைச் சிறப்பிக்கும் முறையைச் சங்க இலக்கியங்களில் காணலாம். நீர் வளத்திற்கு அடிப்படையான மழையின் பயனைத் திருவள்ளுவர் வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் நுட்பமாகத் தொகுத் துரைக்கின்றார்.


நீர் குறித்த நம் முன்னோரது துடிப்பான செயல் பாடும், சிந்தனையும் இன்று அறுந்து போய்விட்டன. பல்லாயிரம் ஆண்டுகளாக வளத்துடன் விளங்கிய ஆற்றின் படுகைகளும் குளங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன. சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள், தாள் ஆலைகள் ஆகியவற்றின் கழிவுகளால் பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு போன்ற ஆறுகள் மாசடைந்து விட்டன. தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்னும் ஏமாற்றுச் சொற்களால் மக்களின் வாழ்வடிப்படைகளான நிலவளமும், நீர்வளமும் அழிக்கப்பட்டுவருகின்றன. வெளிமாநில, வெளிநாட்டுக் குப்பைகள் நம் நிலத்தில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. மண்ணைக் காக்கும் மனவலிமை நம்மிடம் மழுங்கிவிட்டது.

நிலத்தின் மடியில் நீரைத் தேக்கி வைப்பது மணல். மன்னர்களை வாழ்த்தும்போது ‘கடற்கரையில் பெருங் காற்றுத் திரட்டிக் குவித்திருக்கும் மணலினும் நெடுநாள் புகழுடன் நீ வாழ்வாயாக’ (புறம். 55) என மணலை வாழ்த்துவதுக்குரிய மங்கலப் பொருள்களுள் வைத்து மதித்தனர். ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ (குறள். 396); ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்’ (நல்வழி. 9) என மணலின் அருமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மணலை அளவோடு எடுத்துப் பயன்படுத்தாமல் மடு அறுத்துப் பால் குடிக்கும் செயல்போல அதனைப் பெருமளவில் இன்று கடத்துகின்றனர்.


உயிர் உள்ள அஃறிணைப் பொருளோடும் உயிர் அற்ற அஃறிணைப் பொருளோடும் மனித உயிர் பிணைக்கப்பட்டுள்ளதைத் தமிழ் இலக்கியங்கள் நுட்பமாகப் பதிவு செய்துள்ளன. உயர்திணை என்று மக்களைச் சுட்டிய தொல்காப்பியர் அஃறிணையைத் தாழ்ந்த திணை என்று கூறாது கருப்பொருள் என்று பகுத்தார். மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் மாந்த வாழ்விற்கு அரண் என்கின்றார் திருவள்ளுவர் (742). மழையே மழையே தூரப்போ (ஸிணீவீஸீ ஸிணீவீஸீ நிஷீ ணீஷ்ணீஹ்) என்று படிக்கும் மாணவர் உள்ளத்தில் மண்ணையும் மணலையும் நீரையும் பற்றிய சிந்தனை எப்படித் தோன்றும்? வாழ்வியல் சிந்தனை, பொருளியல், பண்பாடு என அனைத்திற்கும் மேல்நாட்டு நடைமுறைகளை நாம் கடைப்பிடிப்பது தவறு. இந்த மண்ணிற்குப் பொருத்தமான வாழ்வியல் சிந்தனைகள் நம் இலக்கியங்களில்தான் உள்ளன.

சென்னை ஆட்சித் தலைவராக இருந்த எல்லிசு என்பவர் 1818இல் சென்னை நகரில் கிணறுகள் பல அமைத்தார். கிணற்றுக் கைப்பிடிச் சுவரில் நீண்ட கல்வெட்டை அவர் பதித்துள்ளார். அதில், தனக்குக் கிணறு வெட்டும் சிந்தனையை ஏற்படுத்தியது எது என்பதை,


“புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்

தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்

திருக்குறள் தன்னிற் திருவுளம் பற்றிய

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

என்பதின் பொருள் என்னுள் ஆய்ந்து”

(திராவிடச் சான்று ப. 25)


என்று குறிப்பிட்டுள்ளார். ஊற்று நீர், மழை நீர், ஆற்றுநீர், மலை, பாதுகாப்பான அரண் இவ்வைந்தும் நாட்டிற்கு உறுப்பு எனும் வள்ளுவரின் குறள்வழியேதான் கிணறு வெட்டியதாக எல்லீசர் கல்வெட்டில் பதிவுசெய்துள்ளார்.


வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் இலக்கியத் தால் தான் பெற்ற சிந்தனையை இந்தச் குமுகாயத்துக்குப் பயன்படுத்தும்போது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த முடியாதா? தாய்மொழிதான் ஒருவனுடைய சிந்தனைக்கு மிக நெருக்கமானது. தமிழ் இலக்கியங்களை ஒரு பாடமாகப் படிப்பது தடையாகும்போது நமது முன்னோரின் பல்துறைப்பட்ட உயர்ந்த சிந்தனைகளை நாம் இழந்தோராவோம். தமிழ் இலக்கியங்கள் நம் வாழ்விய லோடு உறவுடையன. அவை நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்த சிந்தனைகளைக் கொண்டவை. எனவே இந்த மண்சார்ந்த மக்களின் உண்மை நிலையை அறிந்து அவர்களது தேவையை நிறைவுசெய்யும் வழிமுறைகளை வகுக்கத் தமிழை ஒரு பாடமாகப் படிப்பது தேவையாகும். நம் முன்னோர் நிலம், நீர், மணல் ஆகிய இயற்கை வளங்களைப் பெருக்கி அளவோடு பயன்படுத்திய அறிவியல் சிந்தனைகள் தொடரத் தமிழை ஒரு பாடமாகப் படித்தல் தேவையான ஒன்றாகும். முதலாம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை, தமிழை ஒரு பாடமாகப் படிக்காமல் பட்டம்பெறும் துன்பம் தமிழகத்தில் ஒழிதல் வேண்டும். நிலத்தை முதற்பொருளாக மதிக்கும் பண்புள்ளம் கொண்ட பல்துறைக் கல்வியாளர்களை இலக்கியக் கல்வியால்தான் உருவாக்க முடியும்.

 

Pin It