தோழர் லெனின் அவர்கள் "பன்றிகளின் தொழுவம் நாடாளுமன்றம்' என்று முத்திரை பதித்த வார்த்தைகளை சொல்லி ஆண்டுகள் நூறு. இந்திய நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இன்று, பன்றிகள் மட்டுமல்ல, கொலை, கொள்ளை போன்ற செயல்களை செய்பவரின் கூடாரம் ஆகியுள்ளது.

சாதி சங்கங்களை ஆரம்பித்து தான் இந்த சாதியை சார்ந்தவன், என் சாதிக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளது. அதனால் எனக்கு இத்தனை தொகுதி வேண்டும் என்று சாதியின் பெயரால் கேட்டு தன் சாதி பெருமிதத்தை காட்டுகிற அவலம் இன்று வளர்ந்து உள்ளது.

அதனால் என் சாதிக்காரன் தப்பு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று பேசும் நபர்களும் தலைவர்களும் அனைத்துக் கட்சியிலும் உண்டு. அதேபோல் கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து செய்து தன்னை சமூகத்தில் பெரிய ரவுடியாக காட்டிக் கொள்பவன் தன்னை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்றவாதியாகவும் உள்ளதை இன்று நாம் பார்க்க முடியும்.

இந்தியா மீதும் இந்திய நாடாளுமன்றத்தின் (சட்டமன்றம்) நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும், அதன் அதிகாரம் நம்மை நேரடியாக பாதிக்கும்போது அதை அம்பலப்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அதனால் இந்திய பிரிட்டிஷ் காலணிவாதிகளிடமிருந்து விடுதலை பெற்று பார்ப்பன பனியா கும்பலிடம் ஆட்சி அதிகாரம் வந்த பின் அந்த அதிகார மையத்தில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட சில தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாடுபட்ட அம்பேத்கர், மற்றும் பொதுவுடைமைத் தலைவர்கள், சமூக தளத்தில் பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் இந்திய நாடாளுமன்றத்திலும் அந்த தேசத்தில் (மாநிலம்) உள்ள சட்டமன்றங்களில் அங்கம் வகித்து பல நன்மைகளை செய்து வந்ததை நாம் பார்க்க முடியும்.

ஆரம்ப கட்டத்தில் பணக்காரர்கள் தேர்தலில் பங்கு பெருவதற்கும் தடை விதித்த கட்சிகளும் உண்டு. காங்கிரஸ் போன்ற கட்சிகளை மிட்டா மிராசு பார்ப்பன பனியா அரசு என்று நேரடியாக பொதுவுடைமைக் கட்சிகள், சோசலிச கட்சிகள் சமூக நீதிக்காக போராடிய பல்வேறு தலைவர்கள் பரப்பல் செய்தனர். அதனால் காங்கிரஸ் கட்சியினர் பெரும் பண்ணைக்காரர்கள், பண முதலைகள் நேரடியாக களத்தில் இறங்கியது இல்லை. தமிழகத்தில் மூப்பனார் போன்றவர்கள் கூட கடைசி வரை மக்களை சந்தித்து வாக்கு கேட்டு இந்திய நாடாளுமன்றத்திற்குச் செல்லவில்லை என்பது தெரியும்.

நேரு குடும்பம் இந்திய விடுதலைக்கு "ஆனந்த பவனை' கொடுத்து விட்டு இந்தியாவை தன் வீடு ஆக்கிக் கொண்டார் என்ற விமர்சனம் இன்றும் செய்யப்படுவதை நாம் பார்க்க முடியும். காங்கிரஸ் கட்சியில், காமராசு, கக்கன், நந்தலால், லால் பகதூர் சாஸ்திரி, பொதுவுடைமைக் கட்சியில் டி.கே.டி. தங்கமணி, ஜீவா போன்ற பல்வேறு தலைவர்களும் சமூக களத்தில் அம்பேத்கர், ராம் மோகன் லோகியா போன்றவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் மக்கள் பணி செய்தார்கள். செய்ய முயன்று தோற்று போனார்கள். இவர்களின் பெயரை வைத்து ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் படம் பெரிதாகப் பொறிக்கப்படும். இவர்கள் பெயரை வைத்து அரசியல் செய்வதும் இன்றும் நடந்தேறி வருகிறது.

"இந்தியாவின் முதல் அமைச்சரவையில் டி.டி.கே. கிருஷ்ணமாச்சாரி மீது ஊழல் வழக்கு அப்போது பேசப்பட்டது. அப்போது இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த நேரு அவரை உடனே பதவியிலிருந்து நீக்கினார். அதன் பின் நெருக்கடி நிலை புகழ் இரும்பு மங்கை என்று போற்றப்படுகின்ற இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் பல்வேறு மாநிலங்களில் ஊழல் பெருக்கெடுத்தது. இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி நிழல் உலக அரசியல் செய்து வந்தார். அந்த ஊழல் எல்லாம் பேசப்பட்டாலும் அது பெரிய அளவில் மக்கள் மனதில் ஆழமாகப் பதியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று வந்தன.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை காலத்தின் மிக மோசமான ஒடுக்குமுறை காரணமாக காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திரா காந்தி அதிகார கோட்டை தகர்க்கப்பட்டது. ஆனாலும் அது நீடித்த ஆட்சியாக இருக்கவில்லை. அதன் பின் செல்வாக்கோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இந்திரா காந்தி. அவரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ராஜீவ்காந்தி, அவர் ஆட்சிக் காலத்தில் 60 கோடி போபர்ஸ் ஊழல் இந்தியாவில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்னிட்டு 1989இல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ராஜீவ் காந்தி பதவி இழந்தார்.

வி.பி.சிங் தலைமையமைச்சர் ஆனார். இந்த ஆட்சி11 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அந்த ஆட்சியை சமூக நீதிக்காக போராடுபவர்கள் அவர் ஆட்சியை இன்றும் பெருமையாகப் பேசி வருகின்றனர். அவர் ஆட்சிக் காலத்தில் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மண்டல் கமிசன் அறிக்கை தாக்கல் செய்தார். அதனால் சமூக நீதி இயக்கத்தார் அவரைக் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.

இடைப்பட்ட காலங்களில் 1977 மொரார்ஜி தேசாய், 1989 வி.பி.சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில் மட்டும் தான் ஊழல் இல்லாத ஆட்சியாக இருந்தது. அதன் பின் மீண்டும் வந்த நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் ஊழல் தலைவிரித்தாடிது. அவர் ஆட்சிக் காலத்தில் தொலை தொடர்பு மந்திரியாக இருந்த 'சுக்ராம்' மீது 400 கோடி ஊழல் பெரிதாகப் பேசப்பட்டது. அதன் பின் மந்திரி பதவி இழந்தார். அதேபோல் பங்கு சந்தையில் அர்சாத் மேத்தா 1000 கோடி ஊழல். அதில் பல காங்கிரஸ் கட்சி தலைவர் பங்கு பெற்றனர் என்றும் அப்போது பேசப்பட்டது.

அதன்பின் ஆட்சிக்கு வந்த பாரதிய சனதா ஆட்சி காலத்தில் பெரிய ஊழல் நடைபெறவில்லை. என்றாலும் வாஜ்பாய் வளர்ப்பு மகன் மற்றும் ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. குற்றச்சாட்டோடு அது மூடி மறைக்கப்பட்டது. தற்போது பாரதிய சனதா ஆட்சிக்காலத்தில் கார்கில் போரில் உயிரிழந்த இராணுவத்தினருக்கான வீடு ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இப்போது நடந்து வரும் ஆட்சியில் ஊழல் மிகுந்த ஆட்சியாக இந்தியாவை அலைக் கழித்து வருகிறது. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற கோட்பாட்டுத் தலைவராக இருந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம் அவர்கள் அப்போது நிதி அமைச்சராகவும், இணை நிதி அமைச்சராகவும் இருந்தனர். பா.ச.க. கட்சியின் சோனியாவை வெளிநாட்டுக்காரி அவரை இந்தியாவின் தலைமை அமைச்சர் ஆவதை எதிர்த்த காரணத்தால் உலக பன்னாட்டு நிறுவனங்களின் முகவர்களாக விளங்கி வந்த மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோர் தலைமை அமைச்சர் மற்றும் நிதி அமைசம்சர் பதவி ஏற்று இந்தியாவை நவகாலனியாக்கி விட்டனர் என்று இடதுசாரிகள் குற்றம் சுமத்து வதில் இருந்து நாம் அதை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டு இந்தியாவில் ஊழல் அற்ற ஆட்சியை நிறுவ முயற்சி எடுப்பேன் என்று மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி கொண்டு வருகிறார்கள்.

2007 இல் பங்கு சந்தையில் ப.சிதம்பரம் ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை அடித்தார். நிதி அமைச்சர் என்ற போர்வையில், அதனால் அந்த கொள்ளைக்கு பின் பங்கு சந்தை சீர் செய்ய எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாது, அடைவதற்கு வாய்ப்பில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

2009 பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக தொகுதிகளில் வெற்றி பெற்றும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்கள் கிடைக்காததால் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அதற்கு அதிகமாக வாய்ப்புக் கிடைத்தது. அதனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்தால் அப்போது பதவி ஏற்கும்போது யாருக்கு என்ன இலாகா ஒதுக்குவது என்பதில் இழுபறி நீடித்தது. அதையெல்லாம் மீறி மன்மோகன் சிங் தலைமை அமைச்சர் ஆனார்.

அவர் பிரதமர் ஆன பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடையே பிணக்கு வரத் தொடங்கின. ஆனாலும் அதை சரி செய்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் மன்மோகன்.

இப்போது இந்தியாவையே புரட்டிப் போட்டு இருக்கும் அலைகற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல் இவையெல்லாம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முறை மக்களிடம் அம்பலப்பட்டுள்ளது.

இதை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சி நலன், மற்றும் மாநிலத்தில் நடைபெறும் ஊழலை மறைப்பதற்கு பயன்படுத்திக் கொண்டன. குறிப்பாக கர்நாடகாவில் பா.ச.க. வின் எடியூரப்பாவின் நில ஒதுக்கீடு ஊழல், ஒரிசாவில் பிஜு பட்நாயக் ஊழல், உ.பி. மாயாவதியின் ஊழல், ஜார்கண்ட் மது கோடாவின் ஊழல், தமிழகத்தில் செயலலிதா மீதான ஊழல், பீகார் லாலு பிரசாத் யாதவின் ஊழல் இந்தியா முழுக்க ஊழல் மிகுந்துள்ளது. இதை எல்லாம் மறைக்கவும் தங்கள் கட்சி நலன் சார்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன.

ஊழல் என்று வந்தால் அதற்கு காங்கிரஸ் மட்டும் இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவது ஒரு வாதத்தில் தொடர்புடையதாகவும், ஊழல் என்ற பெருங் கடலில் மூழ்கிக் களித்ததாகவும் இருந்திருக்கின்றனர். ஓரிருவர் எத்தகைய ஊழலிலும் தொடர்புடையவராக இல்லாமல் இருந்திருந்தால், அவர் எந்த விதப் பதவிகளையும் ஏற்காதவராக இருந்திருப்பார் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ஊழல், இன்று காற்றைப் போல எங்கும் ஊழல் இந்திய நிர்வாகத்தில் நிரம்பியுள்ளது.

63 ஆண்டு விடுதலைப் பெற்ற இந்தியாவில் 51 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஊழலைப் பற்றி பேச என்ன நேர்மையுள்ளது என்கிற நியாயமான மக்கள் கேள்விக்கு சோனியாவும், மன்மோகனும் அவரின் கூட்டாளிகளும் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு எழுகிறது. அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் பேசிய மன்மோகன்சிங் தான் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு முன் நின்று 2ஜி அலைக் கற்றை விடயத்தில் பதில் அளிக்க அணியமாக உள்ளேன் என அறிவித்து, அங்கு கூடியுள்ள அனைத்து கொள்ளை ஊழல் பேர்வழி வழிமொழிந்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தனக்கு மறைப்பதற்கு எதுவுமே இல்லையென்றும் தான் அய்யத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும் அவர் பேசியதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு என்பது பா.ச.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் இயங்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அவசியம் என்ன என்பது காங்கிரஸ் கட்சியின் கேள்வி. நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவுக்கு தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் விசாரிக்கும் உரிமை உண்டே தவிர, இதன் பின்னணி பற்றி விசாரிக்கவோ, தொடர்புடையவர்கள் என்று கருதுபவர்களை அழைத்து விசாரிக்கவோ உரிமைகிடையாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு என்பது அப்படிப்பட்டதல்ல.

பிரச்சினையின் எல்லா பரிமாணங்களையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றக் கூட்டுக் குழு. தேவைப்பட்டால் இந்த குழு தமிழக முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஏன் சோனியா காந்தி, உள்ளிட்ட யாரையும் கூப்பிட்டு விசாரிக்கலாம். கேள்வி எழுப்பலாம். இத்தனைக்கும், நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் பா.ச.கவைச் சார்ந்த முரளி மனோகர் ஜோஷி. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்படுமானால் அதன் தலைவர் ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார். அப்படி இருந்தும் அரசு, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவை அமைக்க ஏன் தயங்குகிறது என்பதுதான் அய்யத்தை எழுப்புகிறது.

மன்மோகன் ஆட்சி ஏற்றுக் கொண்ட பின் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வாரி அரசின் சலுகை வழங்கப்படுகின்றன. இந்தியாவின் வட பகுதியில் குறிப்பாக சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் கிடைக்கும் கனிம வளங்களை கொள்ளை அடிப்பதற்கு அந்த மாநில அரசுகள் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்துக் கொடுத்து அங்கு வாழும் மக்களை வெளியேற்ற அரசுகள் முயன்று வருகின்றன. தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற பன்னாட்டு கொள்ளையர்களை எதிர்த்து அங்கு மக்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக பழங்குடிகள், மாவோயிஸ்ட் கட்சியினர் இந்த பன்னாட்டு கொள்ளையர்களை எதிர்த்து போராடி வருகின்றனர். தமிழகத்தில் விளை நிலங்களை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிலங்களை அபகரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது தமிழக அரசு.

தமிழகத்தை முன்னால் முதல்வர் செயலலிதாவும் அவரின் தோழியின் குடும்பமும் சேர்ந்து கொள்ளை அடித்தன. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடந்தன. அதன்பின் 2006 இல் தமிழகத்தில் ஆட்சி அமைத்த தி.மு.க. கட்சியினர் இன்று தமிழகத்தை தன் குடும்பத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அதனால்தான் கருணாநிதி தன்னை இராசராசன் வாரிசு என்று தம்பட்டம் அடித்து தன்னை முடிசூடா மன்னனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவருக்கு மூன்று இளவரசர்களும் ஒரு இளவரசியும் சேர்ந்து இந்த தமிழகத்தை இவர்களின் சொர்க்க பூமியாக நினைத்து ஆண்டு வருகின்றனர். இந்த முடிசூடா மன்னனின் கீழ் பணிபுரியும் அமைச்சர்கள் தமிழகம் தாண்டி இந்தியாவில் தங்களை முடிசூடிக் கொள்ள முயன்று வருவதின் விளைவாக இன்று அலைகற்றை ஊழலில் ராசராசனை மிஞ்சிய மன்னனாக இன்று ஆ.ராசா பதவி ஏற்றுக் கொண்டார். ஏற்றுக் கொண்டு இந்த நாட்டின் தனி மன்னனாக கருதிக் கொண்டு செயல்பட்டதால் இன்று அவரின் மணிமகுடம் வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த மணி மகுடம் வீழ்வதற்கு இவரின் கொள்ளை பங்காளிகள்தான் இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, கனிமொழி, கருணாநிதி என இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் பட்டியலில் பல்வேறு தொழில் அதிபர்கள், தொழில் போட்டிகள் மற்றும் இந்தியாவை வெளி நாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் முனைப்பின் விளைவுதான் இந்த அலைக்கற்றை ஊழலும் அது வெளிவந்த பின்னணியையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இன்று இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா கட்சிகளிலும் ஊழல் மிகுந்துள்ளது. இந்த இந்தியாவை இனி யாரும் காப்பாற்ற முடியாது.

இந்த அலைக்கற்றை ஊழலில் இந்திய நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. அரசுக்கு நட்டம் பல கோடிகள். எதிர்க் கட்சிகள் இந்தச் சிக்கலை எழுப்பாமல் இருந்திருந்தால் நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் மன்றத்தை விழிப்படையாமல் வைத்திருந்தால், இந்த அரசு காதும் காதும் வைத்தாற் போல் முடித்து வைத்து இருப்பார்கள். இந்த ஊழலை பொறுக்க மாட்டேன் என்று திரும்ப திரும்ப பொய் சொல்லி வருகின்றனர் மன்மோகனும் சோனியாவும். அதேபோல் தமிழகத்தை ஆண்டு வரும் இராசராசன் கருணாநிதி தனக்கு தனிப்பட்ட முறையில் பணம் ஏதும் இல்லை. எனக்கென்று இருந்த வீட்டையும் இந்த மக்களுக்காக ஒப்படைத்து விட்டேன் என கபட நாடகம் ஆடுகிறார். அதுமட்டுமல்ல, ஊழல்வாதி இராசாவை காப்பாற்ற "ஆரியர் திராவிடர்' போர் என்ற ஒரு கட்டுக்கதை அமைத்து ஒரு திரைக்கதை அமைத்து தமிழக மக்களை ஏமாற்ற எத்தனிக்கிறார். இதை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சி என்று ஒன்றை கூட நாம் சுட்டிக் காட்ட முடியாது. அனைத்து தேர்தல் கட்சிகளும் ஊழல் மிகுந்த கட்சிகளாகத்தான் உள்ளது. எந்த கட்சிக்கும் வேறுபாடு இல்லை.

ஊழல் நிறைந்த இந்தியாவை தமிழகத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று மக்கள் மாற்று வழி தெரியாமல், திணறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மக்களை தேர்தல் வழி போலி சனநாயகத்தை ஊழல்வாதிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். ஆகையால் மாற்று அரசியலை எதிர்நோக்கி மீண்டும் போராட்ட களத்தை நோக்கி அணியமாகி களம் அமைக்க முயன்று கொண்டு வருகின்றனர். அந்தக் களத்தில் இந்த தேர்தல் கட்சிகளின் அரசியல் அயோக்கியத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது நம்மை போன்ற தமிழ் தேசிய இயக்கங்கள், மார்க்சிய லெனினிய இயக்கங்கள், மற்றும் சனநாயக ஆற்றல்களின் கடமையாகும். அதை நோக்கி அரசியல் விடுதலையை முன் நகர்த்துவோம். ஊழல்வாதிகள் மக்கள் விரோத அரசை தூக்கி எறிவோம்.