சிறு பிள்ளைகள் ஒருவருக்குகொருவர் சண்டை போட்டுக்கொள்ளும் போது - சரியான தோஷம் சொல்லுவதற்கு வழியில்லாதபோது கோபத்தில் வெறியால் ஏதாவதொன்றைச்சொல்லி வைவதற்கு ஒருவன் மற்றவனைப் பார்த்து அதினால்தான் உங்கள் வீட்டின் மேல் காக்காய் பறந்தது என்று சொல்வதுண்டு.

அதுபோலவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்வத்தைப்பற்றி குற்றம் சொல்ல வகை இல்லாமற்போனால் ஏதாவது சொல்லித் தீர வேண்டிய நிலைமைக்கு ஸ்ரீமான் கலியாணசுந்திர முதலியார் வந்துவிட்டதால், சென்ற வாரத்திற்கு முந்தின பத்திரிகையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் என்கிற தலைப்பின் கீழ் முஸ்லீம் லீக் தீர்மானத்தைப் பற்றி எழுதிவிட்டு வகுப்புவாரி தீர்மானம் தப்பு என்கிறதற்கு ஆதாரமாக முஸ்லீம் லீக்கில் மௌலானா முகமதலிக்கும், ஸர். அப்துல் ரஹீமுக்கும் தீர்மான விஷயத்தில் ஏற்பட்ட அபிப்பிராயபேதத்தை எடுத்துக்காட்டி இவ்வித அபிப்பிராயபேதம் உண்டாவதால் வகுப்புவாரிப் பிரதிநிதித்வம் கூடாது என்கிறார்.

இருவருக்கும் அபிப்பிராயபேதம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமா? வேண்டாமா? என்கிற விஷயத்தில் இல்லவே இல்லை என்பதையும் அதற்காக ஏற்படுத்தும் திட்டத்தில்தான் என்பதையும் ஸ்ரீமான் முதலியார் அறிந்திருந்தும் இதைப்பொது ஜனங்களுக்கு திரித்துக்கூற வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது பற்றி நாம் பரிதாபப்படுகிறோம்.ஸ்ரீமான் முதலியார் கூற்றுப் போலவே அபிப்பிராயபேதம் இருந்திருந்தாலும் அதற்காக அத்தத்துவமே வேண்டாமென்று சொல்லி விடலாமா?சுயராஜ்ய விஷயமான தீர்மான விஷயத்தில், அபிப்பிராய பேதமேற்பட்டால் அதற்காக சுயராஜ்யமே வேண்டாமா? என்று நாம் கேட்கிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.01.1926)
Pin It