காஷ்மீரைப் பாருங்கள்

நம்மால் அறியப்பட்ட காஷ்மீர்!

நாம் அறிய வேண்டிய காஷ்மீர்!

காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க அய்.நா.வை பஞ்சாயத்துக்கு அழைக்க வேண்டும் என்று மவுண்ட்பேட்டன் பிடிவாதமாகக் கூறியதை, உள்துறை அமைச்சர் பட்டேல் கடைசி வரை ஏற்கவில்லை; ஆனால் பிரதமர் நேரு ஏற்றார்.

இந்த நிலையில், பாக்கித்தான் பிரதமர் லியாகத் அலிகான் இந்தியப் பிரதமர் நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் பாக்கித் தான் தனிநாடாக உருவாவதை விரும்பவில்லை. இந்திய இராணுவத்தில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிகள் வெளியேறியவுடன், பாக்கித்தான் என்ற தேசத்தை இந்திய இராணுவம் சீரழித்துவிடும்” எனக் கடுமை யாக எழுதியிருந்தார். அந்தச் செய்தியை பாக்கித்தான் வானொலி மூலம் பரப்பவும் செய்தார்.

இருதரப்பும் இப்படிக் கருத்துக்கூறிய நிலையில், லாகூரில் 1947 நவம்பரில் நடந்த இருதரப்புப் பேச்சு வார்த்தையின் போது, ‘காஷ்மீர் சிக்கலைத் தீர்க்க மூன்றாம் தரப்பை அழைப்போம்’ என்று மவுண்ட் பேட்டன் வற்புறுத்தினார். பாக்கித்தான் இதற்குச் சம்மதித்தது.

ஆனால் இந்தியத் தலைவர்கள், “காஷ்மீர் மன்னர் இந்தியாவோடு இணைக்க ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பிறகு, எந்த அடிப்படையிலும் காஷ்மீர் பேரில் உரிமை இல்லாத பாக்கித்தானை ஏன் சமமாக மதித்துப் பேச வேண்டும்” என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் இந்தியப் படை 1947 நவம்பர் 7ந் தேதி சிறீ நகரில் குண்டு மழை பொழிந்தது. இறுதியில் பாக். முரட்டுப் படையினர் 300 பேர் கொன்றொழிக்கப் பட்டனர். அவர்களின் உடல்களை அப்படியே போட்டு விட்டு, தப்பினால் போதும் என்று மீதிப்பேர் ஓடிப்போ னார்கள். நவம்பர் 8ஆம் நாள் பாரமுல்லாவை இந்தியப் படை மீட்டது. அடுத்த சில வாரங்களில் யூரி நகரை யும் முரட்டுப் படையிடமிருந்து இந்தியப் படை மீட்டது.

எல்லை கடந்து வந்த பழங்குடி முரட்டுப் படையினர் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஆங்கிலேயே அதிகாரிகளின் தூண்டு தலால், 1947 நவம்பர் இறுதியில் பாக். பிரதமர் லியாகத் அலிகான் தில்லிக்கு வந்து நேருவைச் சந்தித்தார். அப்போது ஒரு தீர்வு ஏற்படும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக, காஷ்மீரில் பாக். படையின் தாக்குதல் அதிகரித்தது. இப்போதும் மவுண்ட் பேட்டன் தன் நிலைப்பாட்டில் மாறவில்லை. அவருடைய வற்புறுத்தலின் பேரில் இருநாட்டுப் பிரதமர்களும் 1947 திசம்பரில் மீண்டும் லாகூரில் சந்தித்தனர்.

ஏற்கெனவே ஜம்மு-காஷ்மீர் இடைக்கால அரசுக்குத் தலைவராக, 1947 அக்டோபர் இறுதியிலேயே ஷேக் அப்துல்லா அமர்த்தப்பட்டிருந்தார். இப்போது அவர் கூடுதலாக ஏதும் கோரினால் அதையும் அளிக்க இந்தியத் தலைவர்கள் ஆயத்தம் ஆனார்கள்.

அதே நேரத்தில் பாக். தரப்பிலிருந்து புதிதாக ஆள் வர வர, வேகமாக முன்னேறுவதும், களப்பலி அதிகமாகும் போது பின்வாங்குவதுமாக இருந்தனர். ஒரு கட்டத்துக்குமேல், போரின் மய்யம் கில்கிட், ஸ்கர்டு மலைப் பகுதிகளை நோக்கித் திரும்பிவிட நேர்ந்தது. எல்லாப் போர் முனைகளிலும் இந்தியப் படையின் கை ஓங்கியிருந்தது.

ஆனால் அரசியல் களத்தில், “அய்.நா. அவையின் தலையீட்டுக்கு” பாக்கித்தான் நீர் வார்த்து வளர்த்தது. இந்தியாவுக்கு அது கவலை தந்தது.

பாக். - இந்தியப் பிரதமர்களின் சமரசக் கூட்டம் ஒன்றில், பிரதமர் நேரு, “பாக். முரட்டுப் படையினால் பதற்ற நிலை தொடருகிறது. அவர்களை உடனே வெளி யேற்ற வேண்டும். இரு தரப்பினரும் அய்.நா.வுக்குச் செல்வோம்” என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இதன்படி, 1947 திசம்பர் 31 அன்று இந்தியப் பிரதமர் நேரு, அய்.நா. அவையின் விதி 35இன்கீழ், தம் முறையீட்டு விண்ணப்பத்தைப் பதிவு செய்தார். சில நாள்களில் இதுபற்றி, அய்.நா. பாதுகாப்புக் குழுவில் விவாதம் நடந்தது. அதுசமயம் அய்.நா. பாதுகாப்புக் குழுவில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் மேலதிகாரம் பெற்றிருந்தன.

அங்கு நடந்த வாக்குவாதத்தின் போது, பாக்கித் தான் சார்பாகப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஃப்ருல்லா கான் 5 மணிநேரம் எடுத்து வைத்த வாதம் ஆணித்தரமாக இருந்தது.

அவர், “டோக்ரா வம்சத்தார் ஜம்மு-காஷ்மீரை பிரிட்டிஷாரிடம் விலைக்கு வாங்கினார்கள் என்கிற மண் உரிமையை வைத்து, காஷ்மீரிகளைச் சுரண்டி நாசப்படுத்திவிட்டார்கள் என்றும் - டோக்ரா இனத்தவரின் ஆதிக்கத்திலிருந்து காஷ்மீரிகளை மீட்டுக் காப்பாற்றுவதே பாக். அரசின் நோக்கம்” என்பதையும் வலிவாக நிறுவி விட்டார். தொடக்கத்தில் இந்தியத் தரப்பில் பேசியவர்களின் வாதம் அவ்வளவு வலுவாக இல்லை.

என்ன நடந்தது?

அங்கு, 20 நாள்கள் நடந்த கேட்புரையின் போது, இந்திய அரசு சார்பில், இரண்டாம் கட்டத்தில், டாக்டர் ஏ.இலட்சுமண சாமி முதலியார், என். கோபாலசாமி அய்யங்கார், ஷேக் அப்துல்லா போன்றோர் பங்கேற்று வாதாடினர்.

பாக். தரப்பில் பேசியவர்கள் பாக்கித்தானுடன் அதன் மன்னரால் சேர்க்கப்பட்ட ஜுனாகர் சிற்றரசை இந்தியா கைப்பற்றிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினர். இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி தரப்பட்டது.

அதாவது, பாக்கித்தானுக்கு எதிராகக் குற்றவாளிக் கூண்டில் நின்று இந்தியா விடை சொல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

உலக நாடுகளைச் சேர்ந்த நாள் ஏடுகள் பலவும் காஷ்மீர் நிலை பற்றி எழுதிய செய்திகள் இந்தியத் தரப்புக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தன. அதாவது பாக். படைகள் மூன்று மாத காலமாக எல்லை தாண்டிவந்து காஷ்மீரில் செய்த அட்டுழியங்களைப் பற்றி அவை எழுதின; அவை பற்றிய செய்திகளை ஆதாரங்களுடன் அவை வெளியிட்டன. காஷ்மீரில் தாக்குதல் நடத்துவது பாக். முரட்டுப் படைதான் என்றாலும் அவர்களுக்கு ஆயுதங்களைத் தருவதும், அப்படை இடம்பெயர வாக னங்களைத் தருவரும் பாக்கித்தான் தான் என்பதை உலக நாட்டு ஏடுகள் அம்பலப்படுத்தின.

இந்த  வேளையில் 1948 சனவரி 30 அன்று காந்தி அடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதால், அய்.நா. பாதுகாப்புக் குழுவின் நடப்புகள் தாமதப்பட்டன. ஆனால் இந்தியப் படைக்கும், பாக். படைக்கும் சண்டை தொடர்ந்து நடந்தது.

இதற்கிடையே 1948 பிப்பிரவரி 20 அன்று ஜுனாகரில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் - பாக்கித்தானுடன் இணைவதற்கு ஆதரவாக 91 வாக்குகளே பதிவாயின; ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக 1,90,870 வாக்குகள் பதிவாயின. ஜுனாகர் இந்தியாவுடன் இணைவது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் அமைதி ஏற்பட்ட பிறகு, இதுபோன்ற வாக்கெடுப்பை காஷ் மீரிலும் நடத்துவதாக, 1948 மார்ச்சு 8 அன்று, இந்திய அரசு, அய்.நா. அவையில் வாக்குறுதி அளித்தது.

எனவே, 1948 ஏப்பிரலில், அய்.நா. அவையானது - “காஷ்மீர் மண்ணில், பாக். முரட்டுப் படை உட்பட பாக். சார்பான எந்தப் படையும் இருக்கக்கூடாது - உடனே வெளியேற வேண்டும்” என்று கட்டளை யிட்டது. அதேபோல், இந்தியா சார்பிலும் குறைந்த அளவு இந்தியப் படையே காஷ்மீரில் இருக்கலாம் - இந்திய அரசு விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்த ஆவன செய்ய வேண்டும் என்றும் அய்.நா. அவை கேட்டுக் கொண்டது.

இருப்பினும் காஷ்மீரில் உள்ள இந்தியப் படை, சில இடங்களில் பாக்கித்தான் எல்லையைக் கடக்கக் கூடும் என்று பாக்கித்தான் அய்யப்பட்டது. உடனே பாக்கித்தான் படை ஜெனரல் கிரேஸியின் ஆலோச னைப்படி பாக்கித்தான் எல்லையை நோக்கி நகர்த் தப்பட்டது.

ஆயினும் பாக்கித்தான் இராணுவத் தலைமை இடம் ராவல் பிண்டியிலும், பாக். அரசுத் தலைமை இடம் கராச்சியிலும் இருந்ததால், இவ்விரு பகுதியினரிடையே சரியான செய்திப் பறிமாற்றமும் ஒருங்கிணைப்பும் இல்லாமலிருந்தது. இது குழப்பங்கள் அதிகரிக்கக் காரணமாய் இருந்தது.

எனவே, இந்தியப் படையின் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாத பாக். முரட்டுப் படை - காஷ்மீர் பள்ளத்தாக்கைத் தவிர்த்துவிட்டு, பால்டிஸ்தான், லடாக் போன்ற பகுதிகளுக்கு நகர்ந்தது. ஆனால் வழியில் இருந்த கார்கில், டராஸ் போன்ற பகுதிகளைக் கைப் பற்றிக் கொண்டு முன்னேறிய போது, லடாக்கில் நிறுத் தப்பட்டிருந்த மன்னர் அரிசிங்கின் படை காணாமல் போயிருந்தது. மேலும் அப்படையினர் தங்களிடமிருந்த ஆயுதங்களையும் இந்தியப் படை தந்த ஆயுதங்களை யும் போர்க் களத்தில் போட்டுவிட்டு, ஓடிவிட்டனர். இவை பாக். முரட்டுப் படையின் கைக்குக் கிடைத்து விட்டன என்ற செய்தி இந்தியாவுக்குப் பெரிய அதிர்ச் சியைத் தந்தது.

‘ஆஸாதி படையினர்’ (விடுதலைப் படை) என்று தங்களை அழைத்துக் கொண்ட பாக். முரட்டுப் படை தங்களை நெருங்குவதைக் கண்ட லடாக்கியர், பயந்து போய், சிறீநகரில் இருந்த இந்தியப் படைத் தளபதி திம்மையாவை அணுகித் தங்களைக் காப்பாற்றும்படிக் கோரினர். எனவே 1948ஆம் ஆண்டு கோடைக்காலம் முழுவதும் போர்முனையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் இந்தியப் படைகளுக்கு ஏற்பட்டது. உழைப்பும், பணமும், ஆயுதங்களும் வாரி இறைக்கப்பட்டன.

இதற்கு இடையில், மன்னர் அரிசிங்கின் படையும், இந்தியப் படையும் இணைக்கப்படுவதா அல்லது அரிசிங்கின் படையின் பாதுகாப்பிலேயே காஷ்மீரை வைத்திருப்பதா என்ற குழப்பத்துக்கு இந்திய அரசு ஆளானது.

எனவே, “அய்.நா. மேற்பார்வையில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது என்று 1948 மே மாதம் அய்.நா. பாதுகாப்புக்குழு கொண்டுவந்த தீர்மானத் தை ஏற்க இந்தியா உறுதியாக மறுத்துவிட்டது.”

அதுவரையில் காஷ்மீர் போரில் இந்திய அரசு செலவிட்ட பணம் கட்டுக்கு மீறிப் போய்விட்டது. எவ்வளவு காலத்துக்கு இப்படிப் போராடுவது என்பதும் பெரிய கேள்வி ஆயிற்று.

1948 சூன் 21 அன்று இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து மவுண்ட் பேட்டன் விலகிக் கொண்டார். அவருடைய பதவிக்கு சி. இராசகோபா லாச்சாரியார் வந்தார்.

இந்நிலையில், இனி, பிரிட்டிஷாரின் இராச தந்திரம் இந்திய அரசியலின் போக்கையும் நிருவாகத்தையும் நிர்ப்பந்திக்காது என்று பலரும் கருதினர்.

பாக்கித்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாஃபருல்லா கான், இந்தியா மற்றும் பாக்கித் தானுக்கான அய்.நா. சிறப்புக் குழுவிடம், பாக். இராணுவ வீரர்களும் எல்லையைத் தாண்டி காஷ்மீருக்குள் நுழைந்திருப்பதை 1948 சூலையில் ஒத்துக்கொண் டார்.

இது அரசியல் களத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்று இந்தியர்களால் கருதப்பட்டது.

ஆனால் போர்க்கள நிலைமை வேறாக இருந்தது.

‘லே’ பனி மலைப் பகுதியை நோக்கி முன்னேறிய பாக். முரட்டுப்படையை, வெளியேற்றிட, இந்தியப் படை இரண்டு மாதங்கள் போராட வேண்டியதாயிருந்தது. எந்தவகையான போர்ப் பயிற்சியும் இல்லாத முரட்டுப் படையினரும் பாக். இராணுவ அதிகாரிகளும் சேர்ந்து, திறமையாகப் பயிற்சி பெற்ற 1000 இந்திய வீரர்களைச் சமாளித்தது பாக். தரப்புக்குக் கிடைத்த கள வெற்றி யாகக் கருதப்பட்டது. நிற்க.

அய்.நா. பாதுகாப்புக் குழுவில் தொடர்ந்து நடந்த கேட்புரையின்படி - 1948 ஆகத்து 13 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்து கொண்டு, காஷ்மீர் மக்களின் விருப்பப்படி, சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும்” என்று அத்தீர்மானம் கூறியது.

அச்சமயம் பாக்கித்தான் அதிபர் முகமது அலி ஜின்னா மறைவுற்றார். பாக்கித்தானியர்க்கு அது ஒரு பேரிழப்பு.

முகமது அலி ஜின்னாவின் மறைவை ஒட்டி பாக்கித் தான் நிருவாகச்சுமை முழுவதும் பிரதமர் லியாகத் அலிகான் மீது விழுந்தது.

அப்போது வரையில், இந்தியாவுன் சேர முடியாது என முரண்டு பிடித்த அய்தராபாத் நிஜாம், பட்டேலின் நெருக்கடியைத் தாங்கமுடியாமல் பட்டேலிடம் கையொப்ப மிட்டு, இந்தியாவுடன் இணைந்தார்.

அடுத்த சில மாதங்களில் இந்தியா-பாக்கித்தான் போர் முடிவுக்கு வந்தது.

இந்தியா தரப்பில் ஜெனரல் ராய் புச்சர் - பாக்கித்தான் தரப்பில் ஜெனரல் கிரேஸி இருவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 01-01-1949இல் கையொப்பமிட்டனர்.

அந்த ஒப்பந்தம் என்ன கூறியது?

1.            போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்துப் போடப் பட்ட 01-01-1949 அன்று எந்தெந்த நாட்டுப் படை எங்கெங்கே நின்றதோ அதுதான் போர் நிறுத்த ஒப்பந்த எல்லைக்கோடு (Cease-fire Line.)

2.            ஜம்மு-காஷ்மீர் பகுதி முழுவதும் இந்தப் போர் நிறுத்த எல்லைக்கோடு - இருநாட்டு இராணுவ அதிகாரிகளின் ஒப்புதலோடு, 1949 சூலை 27இல் ஆவணம் ஆக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது.

3.            மனித நடமாட்டம் இல்லாத - இருநாட்டுப் படை களும் இல்லாத சியாச்சின் பனி மலைப் பகுதியில் எது போர் நிறுத்தக் கோடு என்பது தெளிவாக் கப்படவில்லை.

இந்த எல்லைக்கோட்டை மீறுவதுதான், இருநாடு களும் மோதிக்கொள்ள முதலாவது காரணம்.

மன்னர் அரிசிங்கின் ஆளுகையிலிருந்த ஜம்மு-காஷ்மீரில் மூன்றில் ஒரு பகுதியை - ‘குல்மார்க்’, ‘பாக். கூலிப்படை’ என்கிற பழங்குடி முரட்டுப் படை யினராலும் பாக். இராணுவத்தாலும் கைப்பற்றப் பட்டு பாக்கித்தான் ஆளுகைக்கு உட்பட்டுவிட்டது. மூன்றில் இரண்டு பங்கு பகுதி காஷ்மீர் மட்டும் இந்தியாவிடம் உள்ளது.

இதன் விளைவாக புதிதாக ஒரு போர் நிறுத்தக் கோடு அல்லது எல்லைக்கோடு உருவானது. அது, பெயரளவில், அய்.நா. அவையின் பார்வையாளர் குழு கண்காணிப்புக்கு உட்பட்டது.

(தொடரும்)