வருகுதப்பா தீபாவளி, வழக்கம்போல், நீ என்ன செய்யப் போகிறாய்?

தம்பி! பழைய சாத்திரம் இன்றைக்கு உதவாது; இன்றைக்கு ஏற்றபடி அது மாறவும் மாறாது. அதை ஒருத்தன் எடுத்து வைத்தால்தான் அல்லது அது அசைக்கப்பட்டால்தான் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத் திற்கு மாறும். அல்லது அதை ஒருவன் எடுத்து நமக்கு வேண்டாததை அடித்து வேண்டியதை எழுதினால் தான் திருந்தும்.

ஏன் அப்படிச் சொல்லுகிறேன்? அதற்கு உயிரில்லை, அது ஏடு; காகிதம் போன்ற அசேதன வஸ்து; சிந்திக்கும் தன்மை அற்றது.

“ஆதலால் சாத்திரம் சொல்லுகிறது. அந்தப்படிச் செய்கிறேன்” என்று நீ சொல்லுவாயானால், நீ சேதன (சிந்திக்கும் சக்தி உள்ள) வஸ்து ஆகிய மனிதன் என்றோ, அறிவுள்ளவன் என்றோ சொல்லிக் கொள்ள உனக்குச் சிறிதும் யோக்கியதை கிடையாது.

“சாத்திரம் பெரியவாள் எழுதினது” என்று சொல்லு வாயானால், நீ யார், சிறியவாளா? எந்தப் பெரியவாள்? “அந்தப் பெரியவாள்” காலத்தைவிட முட்டாள்தன மான-காட்டுமிராண்டித்தனமான காலத்திலா நீ பிறந்தாய்? போக்குவரத்துச் சாதனமில்லாத, விஷயஞானம் பெற வாய்ப்பும் சாதனமும் இல்லாத, கல்லாயுத காலத்திலா இருந்து வாழ்ந்து வருகிறாய்! ஆகவே அந்தக் காலத் தைவிட-அந்தக் காலத்துப் பெரியாரைவிட, நீ தாழ்ந்த வனாக இருக்க முடியாது. ஆதலால், சாத்திரம், பெரிய வாள், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்டது என்கின்ற முட்டாள்தனத்துக்குத் தாயகமாக இருக்கும் பித்தலாட் டத்தில் இருந்து முதலாவதாக நீ வெளியில் வா!

“சாத்திரத்தைப் பற்றிக் கவலை இல்லை, பெரிய வாளைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால், அந்தச் சாத்திரங்கள் கடவுளால் சொல்லப்பட்டது; உண்டாக்கப் பட்டது” என்று சொல்லுகிறாயோ? அப்படியானால் இப் படிச் சொல்லுகிறவனைப் போல் முட்டாள் மனித வர்க் கத்தில் ஒருவருமே இருக்க முடியாது என்பதோடு, இதைக் கேட்டு - நம்பி நடக்க ஆரம்பிக்கிறானே, அவனைப் போல் அடிமடையனும் வேறு இருக்க முடியாது என்று சொல்லுவதற்குத் தம்பி, நீ மன்னிக்க வேண்டும்.

கடவுள் இருக்கிறார் என்று வைத்துக் கொள்; கடவுள் சொன்னார் என்று வைத்துக் கொள், யாருக்குச் சொன் னார்? உனக்கா சொன்னார்? மனிதனுக்குச் சொன்னார் என்பாய். அப்படியானால் கிறித்தவருக்குச் சொன்னாரா? முசுலீமுக்குச் சொன்னாரா? பார்சிகனுக்குச் சொன்னாரா? அவற்றை நம்பாத நாத்திகனுக்குச் சொன்னாரா? எப்பொழுது சொன்னார்? அந்தக் காலத்தில் நீ இருந் தாயா? பார்த்தாயா? அல்லது யார் பார்த்தது? கடவுள் சொன்னார் என்று இன்று உனக்குச் சொன்னவர்கள் யார்? சொன்னவர்களுக்குச் சொன்னவர்கள் யார்? சாத்திரம் கடவுளால் சொல்லப்பட்டது என்பதைச் சாத் திரமே சொன்னால் போதுமா? இவைகளையெல்லாம் யோசித்த பிறகல்லவா ‘சாத்திரம் சொல்லுகிறது’ என் பதையும், சாத்திரத்தைக் கடவுள் சொன்னார் என்ப தையும், நீ மனிதனாய் இருந்தால் நம்ப வேண்டும். மாடாயிருந்தால் அல்லவா யோசியாமல் ஆம் என்று தலையாட்ட வேண்டும்? இந்த இருபதாவது நூற்றாண் டில் உனக்கு இதுகூடவா தம்பி தெரியவில்லை?

சாத்திர காலத்தைவிட இன்று கடவுள்கள் அருமை என்று நினைக்கிறாயா? எண்ணி முடியாத கடவுள்கள் தோன்றி இருப்பதோடு தோன்றியவண்ணம் தானே இருக்கின்றன. “கடவுள்களுடைய அற்புதங்கள்” இக் காலத்தில் நடக்காத நாள் எது? மனிதர்களிடத்தில் கடவுள் கள் பேசாத நாள் எது? (அன்னி) பெசண்ட் அம்மை இடம் பேசினார்கள், காந்தியாரிடம் பேசுகிறார்.

அசரீரியும் சோதனைகளும் நடக்காத நாள் எது? இப்படி எல்லாம் இருக்கும் போது, இக்காலத்தில் கடவுள் நேரில் வந்து உன்னையோ அல்லது என்னையோ கூப்பிட்டு நேரில், “அடே மக்களா! நான் தாண்டா சாத்திரம் சொன்னேன், சந்தேகப்படாதீர்கள்” என்று சொல்லித் தொலைத்தால், பிறகு உலகில் ஏதாவது கலவரம் இருக்க முடியுமா?

அல்லது ரமண ரிஷிகள் என்ன, சாயிபாபாக்கள் என்ன, மகாத்மாக்கள் என்ன, மற்றும் தெய்வீக சக்தி பெற்றவர்கள் என்று சொல்லப்படும் மகான்கள் என்ன - இத்தனை பேர்களில் யாரிடமாவது ஒரு வார்த்தை சொல்லித் தொலைக்கக் கூடாதா?

இவ்வளவு தகராறு, தர்க்கம், கலகம் நடந்து ஒருத் தன்மேல் ஒருத்தன் கல், சாணி, செருப்பு எறிந்து அடிதடி நடந்து போலீசு வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத சுவாமிகள், இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?

ஆகையால், “கடவுள் சொன்னது சாத்திரம்” என் பதைக் கட்டி வைத்துவிட்டு, உன் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தித் தீபாவளியைப் பற்றி யோசித் துப்பார். அப்பா - தயவு செய்து கோபியாதே தம்பி!

“கோபம் செய்தால் எமன் கொண்டோடிப் போவான்” என்று சொன்னது சரியல்ல; கோபம் செய்தால் நீ ஏமாந்து போவாய் என்று நான் கூறுகிறேன். ஆகவே அறிவுக்கண்ணுடன் நாடு, இனம், மானம் ஆகியவை களின்மீது பற்றுவைத்துத் தீபாவளியைப் பற்றிச் சிந் தித்துப் பார்!

தீபாவளிக் கதை :

தீபாவளிக் கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலில் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்புக் கொடுக்கின்றோம்.

இந்த தீபாவளிக் கதை மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதாகும்.

மகாவிஷ்ணுவுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரண்டு காவலர்கள் உத்தரவின்றி உள்ளே விட மறுக்கப்பட்ட இரண்டு பேர் பிராமணர்கள் சாபத்தால், இரணியன் - இரணியாட்சதன் என்று இரண்டு இராட்ச தர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு, சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க, மூத்தவன் தேவர்களுக்குத் தொல்லைக் கொடுத்து வந்தான்; இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி, சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான்.

தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரம் எடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட் சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவ தாரம் எடுத்து வந்து, சமுத்திரத்திற்குள் பாய்ந்து, இரண் யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டுப் போய்விட்டார்.

இதுவரை, கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை; இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.

என்னவென்றால், விஷ்ணு பல அவதாரம், பல ரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும்பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர் தத்தை வஞ்சித்துத் தேவர்களுக்குக் கொடுப்பதற்காக - அசுரர்களை ஏமாற்ற, மோகினி அவதாரம் எடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்தவுடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து, அவர் பின் திரிந்து - மோகினி இணங்காமல் போய், இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்ட - அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி, தங்கமாக வேர் இறங்கி விட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம், சிவன் பத்மாசூரனுக்கும் வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சிவனைக் கொல்ல வர, சிவன் ஓடி ஒளிந்து விஷ்ணுவைக் கூப்பிட, விஷ்ணு மோகினி அவதார மெடுத்துத் தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும் படிச் செய்துவிட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யப்பன் பிறந்தார்.

இப்படியுள்ள கதைகள் போலவே, விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சதனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி, அந்தப் பூமியையே அந்தப் பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்குச் சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்றுவிட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப் பெயர் இட்டார்கள் என்றால், நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும் நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந் தையாகப் பிறந்தால் ‘நரகன்’ என்று பெயர் இடாமல்  வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அசாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்துகொண்டு, பிரம்மாவின் மனைவி காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித் தானாம்; அதோடு தேவர்களுக்குத் தொல்லைக் கொடுத் தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர் களுக்காகக் கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளியாகும்.

இது என்ன கதை? இதில் அறிவு, மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியைச் சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே! பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதா னாலும், சுருட்டினவன் எங்கே இருந்துகொண்டு பூமியைச் சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும் தானே பாயாகச் சுருட்டப்பட்டு பாய்க்குள், சிக்கி இருக்க வேண்டும்? அப்படி இருக்க, அவன் பூமியைத் தூக்கிக் கொண்டு ஓடி ஒளிய சமுத்திரம் ஏது? வேறு சமுத்திரம் இருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமி யைத் திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரம் எடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரம் எதற்கு? அப்போது அது ஆகாரமாக எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்!

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்? கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியே தான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமாதேவி இணங்கலாமா? இது என்ன கதை? திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது?

வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு திராவிடர்கள் தானே ஆண்டுகொண்டிருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதனால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தாலும் சரி, மலத் தைத் தின்னாலும் சரி, “எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம்” என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்குப் போதிக்க வந்த மநுநூல் போன்ற ஒரு கோட் (Code) தானே ஒழிய, இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்துச் சொல்ல முடியும்?

ஆகவே, அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகா சூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாட லாமா? நாம் திராவிடர் அல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக்கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக்கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண் டாடும் அளவுக்கு மானம், ஈனம் அற்றவர்களா நாம்! நாம் வீரத்திராவிடர் அல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப் பாய்க் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால், இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதிமிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத் தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

(“குடிஅரசு” சித்திரபுத்திரன் என்ற பெயரில் கட்டுரை, 7-10-1944. பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனை கள் இரண்டாம் பதிப்பு பக்கம் 4080-4084)