கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இரண்டும், தேவர்கள் அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்த புராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிகமிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும்பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப்படுகின்றன. அதில்தான் வைக்கோலிலிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தைகள் தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

கடவுள் பேரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று, தம் இஷ்டம்போல் எதை எதையோ புளுகிவைத்து விட்டார்கள். பாரதமோ இன்னும் மோசம். ஒருத்திக்கு 5 புருடர்கள் இருந்ததாக எழுதிவிட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்து விட்டார்கள். அந்தப் புருஷர்களும் – அந்தப் பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ, எந்த எந்தவிதமாகவோ பிறந்ததாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதையில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலானவற்றிற்கு தகப்பன்மாரைக் கண்டறிவது கஷ்டமாகவேயிருக்கிறது. அக்காலத்தில் ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்!

கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப்படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதியவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புரணாத்தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யார் என்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால், யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத்தக்கவைகள்.

ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் – அவர்களை, அசுரர் – ராட்சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக்கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர்கள்தாம் (அசுரர் என்றால் மது அருந்தாதவர்கள்; ராவணன் என்றால் கறுத்தவன்). இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமார்களால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனுமார் கிடைத்ததுபோல் – கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டதுபோல் – சூரனுடைய நகரமும் எரிக்கப்பட்டிருக்கிறது. சூரன், தேவேந்திரன் மனைவியைச் சிறை பிடிக்க ஆசைபட்டு, அவன் மகனை சிறையில் வைத்தான். ராவணன், ராமன் மனைவியை சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்றுபோலவே – பேர்கள்தான் மாறியிருக்கின்றனவே ஒழிய – கதைப் போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப்படாமல் அமைந்துள்ளன.

கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமாகவே காட்டப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு – அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப்படுகிறான்; சில இழிதன்மைகளாலும் சுமத்தப்படுகிறான். ஆனால், திருவள்ளுவர் குறளோ இவற்றை – ஆரியத்தை – ஆரிய தர்மத்தை. அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக்கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மையையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்கிறார்; ஆசை அறுந்தோன் என்கிறார். அவர் ஓரிடத்திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனமுடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபச்சாரியாகவோ சிருஷ்டித்திருக்கவில்லை.

ராமனை எடுத்துக் கொள்ளுங்களேன்! ராமனை எடுத்துக் கொண்டால் – அவன் யாருக்கோ பிறந்த தாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதேயொழிய, தசரதனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்கு கூறப்படும் காரணமோ அதைவிடப் படுமோசம். அதாவது, மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத்தை திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம். எனவே, அம்மகாவிஷ்ணு அவளுடைய புருஷன் இறக்கும் தறுவாயைப் பார்த்துக்கொண்டேயிருந்து, இறந்ததும் அவனுடைய உடலில் தான் புகுந்து கொண்டு அப்பெண்ணை அடைந்து கூடி இன்புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண், எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்தவுடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, மகாவிஷ்ணு மறு ஜென்மமெடுத்து தன் மனைவியைப் பிறன் கையில் விட்டு தன்னைப்போல் கற்புக் கெட்டவளாக வேண்டும் என்று சாபம் கொடுத்தாளாம்.

அதையொட்டிதான் ராமன் அவதாரம் ஏற்பட்டு – சீதையை ராவணனுக்குப் பறிகொடுக்க வேண்டி ஏற்பட்டதாம். என்னே தெய்வத் தன்மை! பிறன் மனைவி மீது மோகிப்பதும், வஞ்சகமாக அவளை அனுபவிப்பதும் இவைதான் ஆரிய முறைப்பட்ட தெய்வத் தன்மைகள்! ஆண்கள் தன்மை இப்படியென்றால் ஆரியப் பதிவிரதைகளைப் பற்றிப் பேசினால், நமது பெண்கள் சகிக்க மாட்டார்கள்.

– தொடரும்

"விடுதலை' – 5.11.1948

Pin It