அன்புத் தோழர்களே, தோழியர்களே!

அன்பு வணக்கம்.

நலம். இதுவரை மனமார ஏற்றுக்கொண்ட கட்சி மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி. அரசியல், சமுதாயவியல், பொருளியல் கோட்பாடுகளை மார்க் சியப் பெரியாரிய நெறியில் கொண்டுள்ள முதன்மை யான இயக்கம் நம் கட்சி. நம் கட்சியும், கட்சியின் ஏடான சிந்தனையாளன் ஏடும் ஏறத்தாழ 50 ஆண்டுகால வரலாறு கொண்டதாகும்.

சிறப்புக் குழு :

நம் கட்சி இதற்கு முன் எத்தனையோ செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தியுள்ளது. ஆனாலும், கடந்த 20.6.2018 அன்று நடத்திய உயர்மட்டக்குழு சிறப்புக் கூட்டம் மா.பெ.பொ.க. வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தகுந்ததாகும். கட்சி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கிய முடிவுகளை மேற்கொண் டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் நமக்கு புதுத் தெம்பையும், திடமான நம்பிக்கையையும் ஊட்டுகிறது.

கட்சியை வடிவமைத்தல் :

கட்சியை முறைப்படி செப்பமாக வடிவமைத்தல் என்பதை முதல் வேலையாகக் கொள்ளப்பட்டது. கட்சி உறுப்பினர்களை முறைப்படி பதிவு செய்து உறுப்பின ராக்குதல் முதல் வேலை. இதற்காக ஒவ்வொரு மாவட் டமும் மாவட்டக் குழுவைக் கூட்டி, உறுப்பினர்களைப் பதிவு செய்வது. இதனை ஊக்கப்படுத்தும் வகையில் 8.7.2018 முதல் கட்சித் தலைமை இடத்தில் இருந்து இரண்டு, மூன்று பொறுப்பாளர்கள் மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.

நம்பிக்கை :

காஞ்சி, வேலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட் டங்களில் மிகக் குறைந்தது மாவட்டத்துக்கு 50 உறுப்பினர்களைப் புதிதாகச் சேர்ப்பது என்றும், பிற மாவட்டங்களில் குறைந்தது 25 உறுப்பினர்களை யாவது சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த நோக்கத்தைத் திட்டமிட்ட அளவுக்கும் அதிகமாக நிறைவேற்ற நாம் ஒவ்வொருவரும் போட்டி போட்டுச் செயல்பட்டு சாதிப்பது நம் கட்சிக்கும், நாட்டிற்கும் நன்மை பயப்பதோடு, நம் கட்சியின் பொதுச் செயலரின் மனம் நிறைவு அடையவும், புதுத்தெம்பைப் பெறவும் வழி வகுக்கும் என்று நாம் மனமார நம்பிச் செயல்படு வோம்.

பொதுச் செயலாளரின் பங்கு :

இந்தப் பயணப் பணியில் நம் பொதுச் செயலர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் நேரில் கலந்து கொள்ள இயலாத நிலையில், அவர் தனக்கு நேரிடை யாகத் தொடர்புடைய தோழர்களுக்குத் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கு உறுதுணையாக இருக்க உறுதி அளித்துள்ளார். இது, நாம் ஏற்றுள்ள வேலையை எளிதாக்கும்.

மாநாடு : உறுப்பினர்களைச் சேர்க்கும் முதல் சுற்றுப் பணி முடிந்ததும், கட்சியின் சட்டதிட்டப்படி கிளை அமைப்பு களை அமைத்த பிறகு, கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாநில மாநாடு நடத்திடத் திட்டமிடப்பட்டது.

பயிற்சி : இனி வருங்காலங்களில் கொள்கைப் பயிற்சி வகுப்பு என்பது நம் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே நடக்கும்.

மக்கள் நலப் போராட்டங்கள் : வெகுமக்களின் நன்மைக்கான களப் போராட்டங்களை நம் கட்சியே நடத்துவது என்றும்; சூழ்நிலைக்கு ஏற்பத் தோழமைக் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் நம் கட்சித் தோழர்கள் ஒரு குழுவாகக் கலந்துகொள்வது என்றும் முடிவானது.

சிந்தனையாளன் : நம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கும் பணி முதல் கட்டம் முடிவடைந்து, உறுப்பினர் களின் மாநாடு முடிந்த பிறகு, நம் கட்சியின் கொள்கை ஏடான சிந்தனையாளனை வெகுமக்கள் ஏடாக ஆக்க மக்களிடம் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இன்றைய நிலை : கடந்த கால ஏற்ற இறக்கங்களை மனதில் கொண்டு, இனிவரும் காலங்களில் நாம் மிகவும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய, முன் எப்போதும் இல்லாத கட்டாயம் இப்போது அரசியல், சமுதாய, பொருளியல் தளங்களில் உள்ளது. அதே நேரத்தில் முன்பு இல்லாத நல்ல வாய்ப்பு, சூழ்நிலை நமக்கு - நம் தோழர், தோழியர்களுக்கு இப்போது உள்ளது. படிப்பு, பணி, குடும்பப் பொறுப்பு என்பதெல்லாம் முன்பைவிட இப்போது மிகவும் குறைவே. இப்போதும் நாம் செயல்படாவிட்டால் நமக்கு வேறு வாய்ப்புக் கிடைப்பது மிகவும் அய்யமே. நாம் செயல்பட வேண்டிய களங்களை, நம் எதிரிகளே அடையாளம் காட்டி நம்மை அறைகூவி அழைக்கின்றனர்.

நாம் மார்க்சியப் பெரியாரியப் புரிதல் உள்ளவர்கள், தோழர் வே.ஆனைமுத்து அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள், சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதை எண்பிக்க இதுவே சரியான நேரம். இன்றுமுதல் நம் கட்சிக் கோட்டையை வலுவாக அமைத்திட நாளும் எண்ணிச் செயல்படுவோம் என்று அன்புடன் அழைக்கிறேன்.

வள்ளுவத்தை நெஞ்சில் நிறுத்தி,

மார்க்சியப் பெரியாரியத்தைக்

கண்களாகக் கொண்டு

மானிட நேயத்தை

நோக்கமாகக் கொண்டு

களம் காண்போம்,

வெற்றி பெறுவோம்.

வணக்கம், நன்றி!