அந்தோ அவலம் மிகப்பெரும் அவலம்

இந்தக் கொடுமை எங்கே உண்டு

இராசிவ் காந்தி இறப்பு வழக்கு

மோசடி யாக முடிவின்றி நீள்வதோ?

உலக உத்தமர் காந்தியின் உயிரைப்

பறித்தவர் பெற்ற பாவ மன்னிப்பு

ஏழு பேர்க்கு இல்லாமற் போவதேன்?

தமிழராய் இருப்பதே தகுதி இழப்பா?

முருகன் சாந்தன் பேரறி வாளனுடன்

மற்றவர் சிறையில் மடிந்தே போவதா?

நடுவில் அமையும் எந்தநாய் அரசும்

கொடுங்கரத் தோடே தமிழனைக் கொல்லும்

அமைதிப்படை என்ற அழிவுப் படையால்

எமதினம் அழித்தவர் இராசிவ் காந்தி

பாழும் அந்தப் படுகொலைக் காக

ஈழமே சிதைந்து இடுகா டானது

ஆனாலும் மறப்போம் மன்னிப்போம் என்று

சோனியா இராகுல் சொல்லி விட்டனர்

இதற்குப் பின்பும் இந்திய வன்மம்

குதறி எடுக்கும் எந்தமிழ்க் குலத்தை!

அகவை மூத்த எம்தாய் அற்புதம்

உகுத்திடும் கண்ணீர் உயிரையே பிசையும்

தப்பான ஒப்புதல் வாக்குமூலம் பற்றிக்

காவல் அதிகாரி தியாக ராசன்

நீதி நாயகம் தாமஸ் மொழிகள்

திருட்டு தில்லியின் செவிட்டுக் காதில்

ஏறாது என்றால் என்ன இதன்பொருள்?

எடுபிடி வேலையில் எந்நேரம் இருக்கும்

எடப்பாடி அரசே செயலில் இறங்கு!

ஆளுநர் வழியே அரசியல் சட்ட

உறுப்பு நூற்று அறுபத்து ஒன்றால்

உடனே இவரை விடுதலை செய்யலாம்

செருப்படி தில்லிக்கு வீழும் செயல்போல்

உருப்படி யாய்இது ஒன்றேனும் செய்கவே!