பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடைப்பிடித்தும் வந்தார்.  1. நமக்குத் தொழில் கவிதை.  2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல் எந்தக் காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும்.  மரணத் திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன.  அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.  பாரதியின் படைப்புகள் பன்முகத் தன்மை கொண்டவை.  அன்பின் தேடலாக அமைந் தவை.  சமகாலத்தன்மையைத் தொனித்துக்கொண்டே இருப்பவை.
 
bharathi oru thedal 340இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள் நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றிய சிந்தனையை அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஈனர்கள் என்று சாடுகிறார்.  தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப் பதை அறிந்துகொள்ள முடிகிறது.  பாரத தேசம் சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஒரு புதிய தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.  தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருக்குத் தென் பட்டிருக்கின்றன.  எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.  வறுமையும் பிரச்சினைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லாக் காலத்திலும் எவ்வகைச் சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
 
அதனால்தான் மரணமில்லாப் பெருவாழ்வும் அவனின் கனவாக இருந்திருக்கிறது.  அவரின் இறுதிச் சொற்பொழிவினை ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.  அதன் தலைப்பு: “மனிதனுக்கு மரணமில்லை.”  அவரைச் சிறந்த சொற்பொழிவாளராகக் காட்டும் தரவு களைத் தந்திருக்கிறார்.  இதைத்தவிர இஸ்லாம் மார்க்க மகிமை போன்ற சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டி இதைச் செய்திருக்கிறார்.
 
தாவரங்களின் வழி அன்பைத் தனது தொழி லாக, மதமாக வரித்துக் கொண்ட இன்றைய சுற்றுச்சூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கும் காலத்தில் சமூக மனிதனாக எழுத்தாளர்கள் கைக் கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைக் கூர்ந்து கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது.  பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்து வதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.  பட்டுப் பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக் குட்டியின் மீது விழுந்து அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதைத் தவிர்க்கிறார்.  அதைத் தன் வீட்டு வேலைக்கார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லிப் பரிசாக அளித்தவர்.  கழுதைக்குட்டியைத் தோளில் வைத்துக் கொண்டாடிய காட்சி பல இடங்களில் காட்டப்பட்டிருக்கிறது.  
 
திருவனந்த புரம் மிருகக் காட்சிசாலையில் சிங்கத்துடன் உரையாடியவர்.  திருவல்லிக்கேணி கோவில் யானைக்குத் தேங்காய் பழம் கொடுத்து உபசரித் தவர்.  காக்கை குருவிகளுக்கு உணவு அளித்துப் புரந்தவர்.  புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர்.  எல்லா உயிர்களிடத்தும் அன்புகொள்ள வலியுறுத்தியவர்.  சக உயிர்களின் இருப்பு எப்படிப் பூமியின் சம நிலைக்கு உதவுகின்றன என்பது பாரதியின் செயல் பாட்டால் விளங்கியதை சேதுபதி எடுத்துரைக் கிறார்.
 
பல அபூர்வமான புதிய தரவுகளையும் செய்தி களையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக் கிறது.  பாரதி தலைமறைவு வாழ்க்கையில் சென்னையி லிருந்து புதுவைப் பயணத்தை இரயிலில் மேற் கொண்டாரா, இல்லை படகில் சென்றாரா என்ற ஆய்வில் படகில் சென்றிருக்கும் வாய்ப்பு பற்றி எடுத்துரைக்கிறார்.  (இதை மெய்ப்பிக்க அவர் அரசாங்கத்தின் கெமிக்கல் எக்ஸாமினரின் முதல் நிலை உதவியாளரான நஞ்சுண்டராவ் வாரிசு களை சேதுபதி தேடிச் சென்ற அனுபவங்களை நூலில் குறிப்பிடவில்லை.  ஆனால் அதுவே ஒரு தனி நூல் அளவு விரிவானது) படைப்புகளைத் தொகுக்கப்படுகிறபோது ஏற்படும் மயக்கம் தந்திருக்கும் குழப்பத்தை சேதுபதி, பாரதிதாசன், அரவிந்தர் மீது பாடிய அரவிந்த் பாம்பு என்ற கவிதை பாரதியின் பாடலென இடம்பெற்றிருப் பதை ஆதாரங்களுடன் காட்டுகிறார்.  தன் நண்ப ரான அரவிந்தரின் நட்பு ஆன்மீக இலக்கிய உறவாக இருந்ததைக் காட்டும் அத்தியாயங்கள் வெகு சிறப்பானவை.  பாரதி எப்பொருளையும் விட்டு வைக்கவில்லை.  எந்தக்கடவுளையும் கூட.  
 
பக்தி இலக்கியப் பார்வையிலிருந்து மாறுபட்டு செயலாக்க நிலையில் நாயன்மார்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திருப்பதை சேதுபதி விரிவாய்ச் சுட்டிக்காட்டுவதில் நவீன நாயன்மாராகப் பொலி வுறும் பாரதியைக் காட்டுவதன் மூலம் கலை வடிவம் மீறிச் செயல்வடிவிற்குரிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.  சமூக செயல்பாடுகளில் இன்றைய எழுத்தாளர்கள் நிற்க வேண்டிய இடம் எது என்பது இதனால் பூடகமாக சேதுபதி வெளிப்படுத்தியிருக் கிறார் என்பது சமகால முக்கிய செய்தியாகும்.  அருணகிரிநாதர் முதற்கொண்டு அரவிந்தர் வரைக்கும், நவராத்திரி முதல் தீபாவளி வரை, மதம் முதல் தொழிலாளி வர்க்கம் வரை பாரதியின் பாடல்கள் கவிதையின், படைப்பிலக்கியத்தின் உச்சமாயும், சமூக வாழ்வியலாகவும் அமைந்திருப் பதை சேதுபதி ஆழமான வாசிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.  அருணகிரிநாதரின் கவிதைகளை மொழிபெயர்த்தது, நாயன்மார் களின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை சேதுபதி வெளிப்படுத்துவது பாரதியின் ஆழமான வாசிப்பின் அடையாளத்தையும் பன்முகத்தன்மையையும் விரிவு படுத்துகிறது.
 
மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல் என்ற வகை யிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக் கிறது...  அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது.  இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது.  சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின் வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கிய சம்பவங்களையும் சுவாரஸ்யமான செய்திகளையும் அவரின் கவிதை களின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்பு களில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டு வதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.
 
பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்
முனைவர் சொ. சேதுபதி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
41-க்ஷ, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098
விலை : ` 115/-
Pin It