மறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் கோவை மாவட்டம் ஆலாந்துறை என்ற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை. பின் ஹைதராபாத்தில் திருமண வாழ்க்கை. வாழ்க்கையின் எதேச்சையான சூழல்களும், நெகிழ்வுகளும், சிறுசிறு கவனிப்புகளும் கவிதைக்கான களமாகிவிட்டிருக்கிறது அவருக்கு . “புதையுண்ட வாழ்க்கை" என்ற தலைப்பில் அவரின் முதல் கவிதைத் தொகுப்பை கவிஞர் மீரா, (அகரம் பதிப்பகம், சிவகங்கை) வெளியிட்டார்...

இரண்டாம் கவிதைத் தொகுப்பை _ மீண்டெழுதலின் ரகசியம்-தமிழினி வசந்தகுமார் வெளியிட்டார். தொடர்ந்து மன அவஸ்தைகளின் போதும் கவிதைகள் எழுதுவதைக் கைக் கொண்டார். தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களாய் மீண்டும், மீண்டும் நிரம்பியது அவரின் வாழ்க்கை. இரு கவிதைத் தொகுப்புகளுக்குப் பின் அவ்வப்போது எழுதிய கவிதைகள் பல நூறைத் தாண்டும். சில சிறுகதைகளும், நினைவுக்குறிப்புகளும் எழுதியுள்ளார். அவை இப்போது தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. தொடர்ந்த மன நோய் சிக்கல்களால் சிகிச்சையில் இருந்தார். இருதயக் கோளாறால் இறந்தார். (பிப்ரவரி 11 2009).

தடாகங்கள் :

இயங்குவதன் முன் இயலாத ராகங்கள்

கீர்த்தனைகள் போதனைகள்

மௌனச் சிறகசைப்பில் தடாகங்களின்

நீர்த்தேக்கங்கள்

சின்னஞ்சிறு குமிழிக்குள் ஓர் இதய

மௌன காந்தம்

சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும்

அறிவுடன் படைத்துவிட்டாய்

இத்தாலிய தவிப்பிற்குள் தேகங்கள்

சித்ரா புஜங்கள்

சிதைவசைப்பின் காந்தத் துணுக்குகள்

வெளியேறும் மௌனச் சிதறல்கள்

ஒருங்கிணைந்த அநாமதேய

புத்தகாலய தெய்வீகக் காதல்கள்

புரிந்தேன் நமதே வழி

---- சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் தொகுப்பிலிருந்து

தமிழ்க் கவிதையில் பெண்களின் உலகமும் வாழ்வும் மொழி வடிவச் சிந்தனை உருவான காலத்திலிருந்து பதிவாகிவருகிறது. சமகாலத்தின் கல்வியில் இருந்தும் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்தும் பெண் கல்வியையும் கலைகளையும் விரைவாகவும் சிறப்பாகவும் கற்றுக் கொள்கிற மனோபாவமும் உறுதியும் கொண்டவளாகவே இருந்தாள். இருக்கிறார்கள். சொத்துரிமைச் சமூகத்தின் பலநிலைகளிலும் பெண் படைப்பாக்கங்களும் கலைச் செயல்பாடுகளும் உன்னதமான நிலைகளைக் கொண்டிருந்திருக்கிறது. இந்த நெடிய கலை இலக்கியப்பண்பாடு இன்றளவும் நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெறவும் தொழில் படவும் பெண் நிலைப் படைப்பாக்க முயற்சிகள் சிறப்பான அளவில் முன்னேற்றம் காண்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் பெண்ணியக்கச் செயல்பாடுகளும் நேர்த்தி மிக்கதாகவும் அசலாகவும் தொடர்கிறது என்பதை சுகந்தி சுப்ரமணியன் கவிதைகளிலிருந்து காணமுடியும்.

உயர்நிலைப்பள்ளிப் படிப்பைக் கூடச் சரியாக முடிக்க முடியாத குடும்பச் சூழலில் குடும்பத்தின் பொறுப்பை ஏற்கிற சூழல் தமிழ்ச் சமூகத்தில் நிலவிய காலம் அது.

பெரியவளாகிவிட்டால் போதும் ஒருத்தன் கையில் ஒப்படைத்து விடுவதே வாழ்நாளின் கடமை என்பதாக பெற்றோர்களுக்குள்ள நிலைமை. அல்லது பொருளாதார நிலை. அன்றியும் குடும்பத்தில் அதிக சகோதர சகோதரிகள். சுகந்தி ஒரு பெண் நிலை வாழ்க்கையின் பொதுமைப்பண்பு. பெரியவளாகி விடுகிற சிறுமிகளைத் தகுந்த பாதுகாப்பான ஒரு குடும்பத்திலிருந்து வந்து பெண் கேட்டுவிட்டாலே பெரும் சந்தோசம் குடி கொண்டு விடும். அந்தக் காலத்தில் பெண் கேட்டு வருகிறவர்கள் கேட்கிற ஒரே ஒரு கேள்வி... “புள்ள நல்ல வெட்டு வெடுக்குன்னு ஊட்டு வேலை செய்வாளா...” என்பதுதான்.

அன்றைய நாளில் வீடுகளில் மாடு கன்று ஆடு கோழி என்று கட்டாயமாக மாட்டுக் கட்டுத்தறியைச் சுத்தம் செய்வதும் தண்ணீருக்காக ஊரு ஊரு அலைந்து திரிகிற வாழ்க்கையை சுகமாக ஏற்றுக் கொள்ள முன் வருகிற சிறுமிகளுக்கு விரைவில் புருசன் அமைந்து விடுவது வழக்கு. சுகந்திக்கு ஏற்பட்ட வாழ்க்கை என்பது அந்த நாட்களின் சிறுமிகளுக்கும் ஏற்பட்ட வாழ்க்கை. சுகந்தியின் சொற்களிலிருந்து அந்த நாளைய கிராமங் களும் சிறுமிகளும் அவர்களின் பருவங்களும் நினைவி லிருந்து பிறக்கிறது.

சுகந்தியை எந்த இடத்திலும் சாதாரண மனுசியி லிருந்து வேறுபட்டவர் என்பதை இந்தப் படைப்புகளை வாசித்த பொழுது ஏற்க முடியவில்லை. காரணம் இந்தப் பொதுமை உலகம் அப்படித்தான் அவரைப் போலத் தான் இருந்து வருகிறது. அவர் காலத்திற்குப் பிறகு இப் பொழுதும் நிறைய நோய்கள் புதிய புதிய நோய்களை உருவாக்கி உருவாக்கி குழந்தைகளுக்கும் பெண் களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மருத்துவ மனைகளும் புதிய புதிய காவல் நிலையங்களும் அந்தக் காவல் நிலையங்களுக்கு புதிய புதிய வாகனங்கள், நவீன கருவிகள் காமிராக்கள். புதிய நவீன வசதி கொண்ட காவல் நிலையங்கள் Ôநீதிமன்றங்கள்Õ பாதுகாப்புக் கருவிகள் அதற்கான புதிய அளவில் குற்றங்களையும் நாம் செய்து நம் சமூகத்தினரும் செய்து நமது நீதிமான்களின் மாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பும் நம் பொதுமைப் பண்புகளுக்குக் கடமைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் சமூகத்தை நேர் செய்ய கலையால் தான் முடியும். கவிதைக் கலையின் பிடியற்ற பிடியில் கவிதையைக் கைப்பற்ற முனைபவர்களில் முக்கிய மானவராக சுகந்தி அறியப்பட்டவர்.

Òதனது நாட்குறிப்பில் ஒரு நாள் எழுதியிருப்பது. இந்த மனித உடலே நோய்மையின் கூறுகளால் ஆனது. ஏதோ மருத்துவமனையில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருகிறவர்கள் மட்டும் தான் நோயாளிகள் மற்றவர்கள் மிக நலமாக இருக்கிறார்கள் என்பதான பாவனைகள் இங்கு நிகழ்கிறது. அப்படியல்ல. மனிதனின் இருப்பே நோய்மைக்கூறுகளின் செயல் பாடுகள்தான். நோய்மை இல்லாத இருதயம் துடிப்பதே யில்லை. நோய்மையின் வெளிப்பாட்டு அளவில்தான் ரத்தம் பாய்கிறது. இயற்கை வளங்களை உணவைச் சார்ந்திருக்கிற எல்லா உயிரிகளும் நோய்மைக் கூறுகள் கொண்டதுதான்.Ó

இங்கு சுகந்தி சுப்ரமணியன் அறியப்பட்டது நோய்மையின் காரணங்களால் தான் என்பதே அதிர்ச்சியளிக்கிறது. அவர் மட்டுமல்ல இன்னபிற பல தமிழ்ப்படைப்பாளர்கள் சிலர் அவர்களின் நோய்மையை அறிந்து அவரை அறிந்து கொள்கிறார்கள் என்பதே எரிச்சலும் சங்கடமும் தருவதாகவே உள்ளது. அவர்களின் எழுத்தும் படைப்புகளும் முன்வரிசையில் வந்து பிற்பாடு அவர்களின் நோய்மை பின்னுக்கு வந்தால் தேவலை. ஆனால் நம் விமர்சகர்களோ திறனாய் வாளர்களோ அவர்கள் வசதிக்கு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வையும் உடல் மனம் சார்ந்த பிரச்சனை களையும் முன்னுக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆண் படைப்பாளர்களை எளிதில் குடிகாரர்கள் என்பதும் பெண் படைப்பாளர்களை மனப்பிறழ்வு கொண்டவர்கள் என்பதும் இன்றளவும் தொடர்கிறது.

 “நான் எழுதுன கவிதை புத்தகத்தை பலர்கிட்ட காமிச்சா உங்க வீட்டுக்காரரா எழுதுனார்னு சிலர் கேட்கறாங்க இதுக்கு அடிப்படையென்ன.. பொறாமையா? தெரியலை அதனால நீங்க திருத்திக் கொடுக்கறது மாத்தச் சொல்றது கூட புடிக்காமே போகுது. எஸ் லட்சுமிபாட்டி ஆர் லட்சுமிப்பாட்டி பத்தின கவிதை எனக்கும் புடுச்சது. ரெண்டு பாட்டிகளும் இப்பொ இல்லை. இண்டியா டுடேல கவிதைக்கு ஆயிரம் வந்ததும் எங்க எஸ் லட்சுமிபாட்டிக்கு நெகமம் புடவை ஒண்ணு எடுத்துக் கொடுத்தேன் அவங்க கவிதை எழுதி காசு வந்ததுங்கறதை நம்பவேயில்லை...Ó என்பதாக நாட்குறிப்பொன்றின் சிறு பகுதி. இந்தப் பதிவில் கவிதை சார்ந்த மிக இயல்பான கூறுகளையும் சேர்த்தே எழுதியிருக்கிறார் எனலாம்.

இந்தச் சமூகத்தில் தான் சுகந்தி, ஆர்.சூடாமணி, தமயந்தி. சந்திரா. லீனா மணிமேகலை, குட்டி ரேவதி உள்ளிட்ட படைப்பாளர்கள் இந்தச் சமூகத்தைப் பதம் செய்ய நல்ல கூரானக் கத்திகளை உருவாக்கிட முனைகிறார்கள்.

மூலை

மூலை சேர்ந்தாயிற்று

எல்லாம் ஒதுங்கியபின்

தேவையானவற்றைத் தேடி

அலுப்பாயிற்று

கிடைப்பவையெல்லாம் எதுவோ ஆக

வராதவை,வந்தவை

எல்லாம் பட்டியலில் இடம் பெற

பெயர்ந்தானது மனசை

உனக்குள் வைத்திருப்பவற்றை

கொடுக்க மனசில்லையென்றும்

தவிர்க்க எத்தனையோ இருக்க

விலகியிருக்கிறேன் எனக்குள்

வருபவையெல்லாம் விலகிப்போக

வராதவையெல்லாம் தூரத்திலிருக்கிறது

என்றாலும்

எல்லாமே வானத்தின் கீழ்

சகஜமாயிருக்கிறது---------                            பக்.194

மேற்குறிப்பிட்ட கவிதையிலேயே அவருடைய மன இருப்பு நிலையை அறியமுடியும். கொங்கு நாட்டில் வயது மூப்படைந்தவர்களைப் பற்றிப் பேசுகிறவர்கள் “அது கெடை சேர்ந்துகிட்டதுÓ என்பார்கள் மேலும் “மூலை சேர்ந்துடுச்சு...” என்பது வழக்கு. அவர்களுடைய படுக்கை, சாப்பாட்டுத் தட்டு, எச்சில் சட்டி உள்பட எல்லாம் அருகாமைக்கு வந்துவிடும். அவர்கள் இனி அங்கேயே கிடந்து பிராணனை விடவேண்டியதுதான். உடலுக்கு கிடைக்கிற அதிகபட்ச மரியாதையை அவ்விடத்துதான் காணமுடியும். சுகந்தியின் இந்தக் கவிதை தமிழில் எழுதப்பட்ட கடைசிகால உயிர் நிலையை அற்புதமாகக் காட்டியிருக்கிறது. வாழ்வின் அந்திம நாட்கள் பற்றியும் நோய்மை குறித்தும் வயோதிக இருப்பு பற்றியும் இலக்கியங்கள் பேசியிருக்கிறது. ஆனால் இந்த மூலை சேர்தல் என்கிற கெடை சேர்தல் பற்றிய இந்தக் கவிதை புதிய தொனி. தான் அங்கு பறந்து இங்கு பறந்து ஓரிடத்தில் நிலை கொண்டா யிற்று. இனி இங்கிருந்து நேரே தன் மூதாதையர்களின் கூட்டுக்குள் நுழைய வேண்டியதுதான் என்பதான கூற்று. ஆனால் மூலை சேர்கிற வயசா அவருக்கு.

சுகந்தியின் கவிதைகளில் எங்கினும் காணப் படாதது என்னவெனில் எந்த நிலையிலும் தன் இயலாமை குறித்த வருத்தம் எங்குமில்லை. இந்தப் பொருளியல் சமூகத்தில் பெண் இருப்பு வசம் பற்றிய எளிய விமர்சனங்களாகவே கவிதைகள் உள்ளது. அவர் உடல்நலம் பற்றிய செய்திகளை இந்த நூலிலிருந்து எடுத்துவிட்டு வாசித்தால் அல்லது தவிர்த்த நூலாக இருந்திருக்குமானால் இந்தக் கவிதைகள் முழுக்க பெண்ணியக்கத்திற்கான புரட்சிகரமான கவிதைகளாக அறியப்படும். பெண் புற உலகின் மீது வெளிப் படுத்துகிற அன்பு எத்தகைய கருணை மிக்கதாக இருக்கும் என்பதை உணர்வு வெளிப்பாட்டுடன் அறிந்து கொள்ள சுகந்தியின் கவிதைகள் உதவும். உளச்சிக்கலும் மனச்சிக்கலும் கவிதை, சிறுகதைகளுக்குள் நுழையாத வண்ணம் கலையின் அளவில் சிறப்பாகவும் நேரடி யாகவும் வெளிப்பட்டுள்ளது. அவருடைய எல்லையற்ற தீவிர இலக்கிய வாசிப்பின் வழியாக இன்னபிற படைப்பாளர்களின் படைப்புகளில் பெண்மையின் இருப்பைத் தேடியபடியே இருந்திருக்கிறார்

தன் கணவரின் சமகாலத்தின் படைப்பாளர்களின் எழுத்துகளில் பெண் நிலைவாதம் பற்றியும் பெண் இருப்பு பற்றியும் அவருக்குள் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்திருப்பதை தன் நினைவுக்குறிப்புகளில் எழுதி வைத்து இருந்த பதிவுகளையும் சுப்ரபாரதி மணியன் இணைத்துள்ளது நூலுக்கு பெரிய பலமாக இருக்கிறது. தன் நட்பும் உறவும் தமிழிலக்கியப் படைப்பாளர்களுடனும் இருப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார் அவர் எழுதுகிறார்

“அசோகமித்ரன் வீட்டுக்கு வந்தப்போ வாங்க தாத்தான்னு கூப்புட்டேன். என்ன நெனைச்சாரோ, வருத்தமோ என்னவோ. பிலிம் பெஸ்டிவலுக்கு வந்திருந்தார். கேசரி பண்ணினேன் சாப்பிடவேயில்லை. பொட்டலமா குடுத்துரு வாங்கிட்டுப் போறேன்னார். அவர் வீட்டுக்கு போனப்போ ஸ்ரீமுகி சின்ன பொண்ணு அழுதிட்டே இருந்தா. என்னமோ சிரமம் குழந்தைக்கு அதுதான் அழுகுதுன்னார். ஒண்ணும் புரியலை. தி நகர் பஸ் ஸ்டேண்ட் போயி பஸ் ஏர்றப்போ பாத்தா ஜட்டி ஈரமாயிருக்கு அதுதா அழுதிருக்கா. அவருக்குக் கோபமே வராது போலிருக்கு...Ó

படைப்பிலக்கியவாதிகளின் குடும்பம் கூட சமூகத்தில் மிகமிக சிறுபான்மை கூட்டம்ந்தான். வாழ்வில் தரிசிக்கும் ஒவ்வொரு கணங்களிலும் மேன்மையான உணர்வினையே கண்டடையும் தருணமாகப் பார்ப்பது அவருக்கு இயல்பானதாகவே உள்ளது. சுகந்தியின் நாட்குறிப்பு பதிவுகள் மேன்மையான சிந்தனைகளாக அல்லாமல் புனிதம் நிரம்பிய அன்றாட வாழ்வின் காட்சிகளைப் பேசுகிறது.

மேலும் ஒரு குறிப்பில்,

“ஹாலோபெரிடால் எனக்குப் புடுச்ச மருந்து. குடுத்த உடனே தூக்கம் வந்திரும். நாள் ஆக ஆக கைகால் விரச்சு ஒரு மாதிரி ஆயிருச்சு. ரோபா மாதிரி ஆயிட்டன். ஒரு மாதிரி நடை. ரோபா மாதிரியே நடந்தேன். சுஜாதாவோட ஜீனோ மாதிரி ரோபா. அது குலைக்கும். லொள்...லொள்ன்னு. நானும் அது மாதிரி உங்களைக் கவ்விக் கவ்வி குதறியிருக்கன்ல...Ó எனும் நாட்குறிப்பில்தான் எத்தனை செய்திகள். இச்சிறு குறிப்பை சாதாரணமாக எழுதிவிடமுடியுமா. அவர் சமகாலத்தின் வாசிப்பின் பிடியில் தீவிரமாக இருந்த பொறுப்புணர்வு அறியமுடிகிறது.

சுகந்தியின் சிறுகதைகள், கவிதைகள், நாட்குறிப்பு களில் காணப்படுகிற படைப்புமொழி சிறப்பானது. அலங்காரமோ வசீகரிக்க அமைக்கிற பெரும் சுவாரசிய மிக்க சொற்றொடர்களோ எதுவுமில்லை. இந்த மூன்று படைப்பிலும் பொதுவான மொழியே அமைந் திருக்கிறது. அவர் எழுத்தின் வழியாக படைப்பிற்காக எந்தத் திட்டமிடலையும் முன்வைக்கவில்லை. குடும்ப உலகம், இலக்கிய உலகம், தன் சுயம், தன் எழுத்து, தன் மன இருப்பு, தன் எதிர்காலம் இவற்றிற்கு இடையே ஒரு எளிய மனுசியின் ரசனைகளாக இந்தக் குறிப்புகளும் கவிதைகளும் படைப்பும் உள்ளது. இந்த நூலுக்கு ஜெயமோகன் எழுதியுள்ள, ஏற்கெனவே எழுதியிருந்த சுகந்திக்கான இரங்கல் கட்டுரை மற்றும் அவர் கவிதைகள் பற்றிய மதிப்பீடுகள் நூலுக்குள் நுழைய வாசகர்களுக்கு சௌகரியமானவை.

சுகந்தியின் பால்யகால வாழ்வு கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார கிராமமாக இருந்த படியாலும் அவருக்குக் கொங்கு வழக்காறு மொழி இயல்பாகவே வந்து பேசுகிறது.

மேற்கு மலையடிவார கிராமங்கள் மிகவும் இயற்கையும் பேரழகு வாய்ந்த அழகிய சூழல்கள் வாசிக்கும் பொழுது நமக்கு ஏற்படுகிறது. இவருடைய பதிவுகளில் வரும் பாத்திரங்கள் முழுக்கவும் ஆலாந்துறை கிராமத்து மாந்தர்கள் போலவே மாறிவிடுகிறார்கள். சுகந்தியைப் பொருத்தவரை அசோகமித்ரன், ஜெய மோகன், அருண்மொழி நங்கை, திலகவதி, லதா ராம கிருஷ்ணன், சுஜாதா இப்படியாக தன் இலக்கிய நண்பர்கள் கணவரின் இலக்கிய நண்பர்கள் அனை வருமே தன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்னும் நினைப்பு அவருக்கும் மனதிற்கும் ஏற்பட்டுவிட்டதை ஆச்சர்யமாகப் பார்க்கிறேன்.

அவருடைய நாட்குறிப்புகள் மிகவும் இலக்கிய நேர்மை வாய்ந்தவை. ஆங்காங்கு பிதற்றலும் உளறலுமாக எழுதிவைத்திருப்பதாகத் தோன்றுவது எல்லாமே தனி மனித இருப்பின் வலி. அகத்தின் அழகு முகத்திலும், அகத்தின் கலை எழுத்திலும் தென்படும் போல. சுகந்தியின் குறிப்புகள் பூச்சிதறல்களாக அமைந்திருக்கிறது. ஒரு பாரா ஒரு சிறுகதையின் கச்சிதம். அவர் குறிப்பிடாத தத்துவ வெளிப்பாடே இல்லை. அவருக்குத் திட்டமிடப்பட்டுவிட்ட தத்துவ ஏற்பாடு அவர் சிந்தனையில் நின்று விட்டது. உதாரணத்திற்கு சில குறிப்புகள்.

“தன்னம்பிக்கை இருந்தா மார்க்சியம்

தன்னம்பிக்கை போய்ட்டா ஆன்மீகம்

சுதந்திரம் வேணுமுன்னா பைத்யம் ஆகணும்.Ó

Òஒண்ணாவதிலிருந்து பத்தாவது வரைக்கும் கண்ணைத் தொறந்ததில்லை. ஸ்கூல்ல. (கல்யாண மேடையிலதா கண்ணைத் தொறந்தேன்) பசங்களை பாத்ததேயில்லை. என்.எஸ்.எஸ்ன்னு பச்சியப்பன்னு ஒரு வாத்தியார் சொல்லிட்டே இருப்பார். லீலாவதின்னு ஒரு டீச்சர் அழகாதா இருப்பாங்க. அழகா பொடவ வுடுத்துவாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் லவ். நாந்தா காதல் கடிதம் கொண்டு போயி குடுப்பன். குடுக்காட்டி ஸ்கூல வுட்டு துரத்திடுவன்னு சொல்வாங்க. ஒரு நாள் தலைமையாசிரியர் கவனிச்சார் லீலாவதியோட அழகைப் பாத்து கார் வாங்கிக் குடுத்தார். அப்புறம் பச்சியப்பனும் லீலாவதியும் கார்ல பறந்துட்டே இருப்பாங்க. ஒரு கொழந்த பொறந்ததும் கார் பஸ் ஆயிடுச்சு. லீலாவதி ஒரு சாக்கை தூக்கிப் போட்டுட்டு அங்கெயும் இங்கயும்னு அலைவாங்க. இங்க கூட வந்தாங்க. நான் கண்டுக்கவேயில்லை. ஆனா குடும்பம் நடத்தறாங்க சாக்கோடவே.Ó

Òகாத்திருப்பதே வாழ்க்கையாய்ப் போய் விட்டதுன்னு வாழ்க்கையாப் போச்சுன்னு புவியரசு சொன்னாரில்லை ஒரு பொண்டாட்டிக்காக ஒரு ஞாயித்துக் கிழமைக்காக ஒரு மட்டன் துண்டுக்காகன்னு சேத்துக்கலாம்.”

சுமார் 350 பக்கங்கள் பெருந்தொகுப்பாக சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் வெளிவந்திருக்கிறது. அவருடைய படைப்புகள் மேலும் சில நூறு பக்கங்கள் இருக்கலாம். தமிழுக்கு ஒரு முக்கியமான வரவு. தொகுத்த ÔகனவுÕ இதழாசிரியர் நாவலாசிரியர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கும் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மௌனத்தில் முயங்கி

மெய் ஞானத்தில் மவுனம் தாங்கி

அலை தோய்ந்த ஆறுகரையோரம்

அம்மனதைத் தேடிய அலைபாய்தல்.

சின்னச் சிறை முல்லைப்பூவின் இதழ்கள்

சின்னக் குருத்தாய் சிரித்து மலரும் முல்லைப்பூ - பக் 86

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

கே.கே.நகர், சென்னை.

விலை: ` 330/-