காட்சிப்பிரமாணம்
மணிமேகலை காப்பியத்தில் பேசப்படும் தர்க்கம், வேதநெறி, சைவ நெறி, வைணவ நெறி சார்ந்து, இந் நூலின் காலம் கி.பி.450-600 எனக் கொள்ளலாம். திந்நாகரின் சமகாலத்தவரான சங்கரஸ்வாமியின் நியாயப் பிரவேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தர்க்க வகைகள் மணிமேகலையிலும் உண்டு. அப்போதைய வேதநெறி நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் மட்டும் கொண்டு நிலவியது. இருசுடர் பஞ்சபூதம், இயமானன் என்ற பகுப்புகொண்டு, சிவபுராணக் கதைகள் போற்றியும் சைவநெறி நிலவியது. நாரணனையும் பாகவதக் கதைகளையும், விஷ்ணு புராணத்தையும் சிந்தையில் நிறைத்தபடி வைணவ நெறி நிலவியது. இவை மணிமேகலையிலும் உண்டு. அப்பரும், சம்பந்தரும் கோயில் தோறும் சென்று சிவனைப் போற்றிப் பாடியபோது, அங்கு வாழ்ந்த வேதியர் நான்கு வேதங்களும் (தைத்ரியம், பௌடிகம், தலவாகாரம், சாமவேதம்) ஆறு அங்கங்களும் தேர்ந்த வராக விளங்கினர். சிவனைக் காரைக்கால் அம்மை யார் பாடியபோதும் இப்படியே. முதலாழ்வார்களும், திருமழிசை ஆழ்வாரும் திருமாலைப் பாடிய படி வந்தபோதும் வேதியர் நிலை இதுவே.
மணிமேகலை தவத்திறம் கொண்டு தானத்தையும், சீலத்தையும் வழுவாது போற்றினாள். மணி பல்ல வத்தில் புத்தபீடிகையைத் தொழுது தனது பழம் பிறப்பு உணர்ந்தாள். அமுதசுரபியும் பெற்று நின்றாள். பிற்பாடு பாரகம் அடங்கலும் பசிப்பிணி அடங்க உணவளித்தாள். சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக ஆக்கினாள். இப்படியாக மணிமேகலை தானபாரமிதையில் ஓங்கி விளங்கினாள். உதயகுமரனைத் தவிர்த்த பின்னர், அரச மாதேவிக்கு அறநெறி செப்பி சீலபாரமிதையில் உயர்ந்து திகழ்ந்தாள். அப்போது அவள் வயது ஈராறு ஆகலாம். பழம் பிறப்பு உணர்வும், தானமும், சீலமும் அவள்பால் பெருகி ஒளி வீசியதால் “மன்னுயிர் முதல்வி” ஆனாள். இப்போது அவளது உணர்வினில் காமம், வெகுளி, மயக்கம் நீங்கி, அறவணஅடிகள் முன் அமர்ந்தாள். தவத்திறம் பூண்டு பௌத்த நெறியை அவரிடம் செவி மடுத்தாள். முதலில் அளவையியலைப் பௌத்த அறமாக அறிந்தாள். இகஉலகியல் புறநிலைப் பொருள்களை அறியும் பிரமாணங்களை, அப்பொழுது ஏற்படும் குற்றங்களை அறிந்தாள்.
பொருள் எனப்படும் ஒன்றினைப் புறநிலைக்காட்சிப் பிரமாணத்தால் பொருளின் இருப்பு மட்டுமே உண்மை இருப்பு என அறியப்படுகின்றது. அதனுடைய பெயர், பொருண்மை, பண்பு, செயல், சாதி ஆகியன காண்பவருடைய உணர்வால் அந்தப் பொருளுக்குத் தரப்படுகின்றன. இந்தப் பஞ்ச கற்பனையினால் பொருளானது உணரப்படுகின்றது. இவற்றிற்கு ஏதுக்களின் வழியான அனுமானமே உறுதியான பிரமாணமாக விளக்கமுறுகிறது (மணி. 29 : 49-56). கண்களால் நேரடியாகக் காணப்படும் காட்சியினைக் காரணமாக / ஏதுவாகக் கொண்டு, அப்போது கண்ணுக்குப் புலப்படாது நிலவும் அதன் மூல காரணத்தை உய்த்துணர்தல் இது. கண்ணால் நேரடியாகக் கண்ட புகையைக் காரணமாகக் கொண்டு அங்கே எரிந்துகொண்டுள்ள நெருப்பை உய்த்துணர்தல் இது. இப்படி உய்த்துணரப்பட்ட தீயே அங்கு எரிந்துகொண்டிருக்கும் உண்மையான புறப்பொருள் என்று, அங்கீகரித்தல் இது.அகவயமாக உய்த்துணரப்பட்ட இந்தத் தீயானது, புகையுள்ள இடத்தினில் நிலவும் தீ என்ற பொதுப் பொருள் ஆகும். அகவயமாக உணரப்பட்ட இந்தப் பொதத் தீயே, அங்குக் கண்ணால் காணப்பட்ட புகைக்குக் காரணமாக அப்போது அங்கு நிலவுகின்ற அந்தக் குறிப்பிட்ட தீ எனக் கண்ணால் நேரடியாகக் காணாது ஏற்பது இது. கண்ணால் நேரடியாகக் கண்டுகொண்டிருக்கும் புகையின் தீ அன்று இது. இப்போது அனுமானம் என்பது உய்த்துணர்தல் என்பதற்கும் மேலே, ஓர் அறிதல்முறையாகவே சாத்தனார் பௌத்த அறிதலியலில் இங்கு நிலை நிறுத்தினார் (இது இன்றளவும் வழக்கினில் நிலவுகிறது). இப்படியாகக் காட்சி அளவை, அனுமான அளவை என்ற இந்த இரண்டு மட்டுமே அறவண அடிகளால் மணிமேகலைக்குக் கற்பிக்கப்பட்டன. அவர்பால் இவ்வண்ணமான பௌத்த மெய்யியலைக் கற்றுணர்ந்தாள்.
நிதானங்கள்
காட்சி அளவையால் பொருளானது உணர்வு களால் ஆக்கப்பட்டு, அனுமானத்தால் உறுதி செய்யப் படுவதாக மணிமேகலை பயிற்றுவிக்கப்பட்டு இருந் தாள். இவளை முன்னிலையாகக் கொண்டு அறவணர் பௌத்த மெய்யியலை விவரித்தார். பிறந்தது அழியும், பற்றுடன் கூடியது அழியும், காரணத்தில் இருந்து உருவானது அழியும் என்ற கருத்தியல் உணர்வினில் கூறலுற்றார். பௌத்த மரபின் பன்னிரண்டு நிதானங் களில் இருந்து தொடங்கினார். புறப் பொருளின் தன்மைகளும், உணர்வுகளும் கலந்து அவை நிலவின. 1. பேதைமை, 2. செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6. ஊறு, 7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன். இவற்றில் அருவுரு, வாயில், பவம், தோற்றம் ஆகியன பொருள் வயப் பட்டவை. பற்று, செய்கை ஆகியன புறவயப்பட்டவை. மற்ற பேதைமை, ஊறு, நுகர்வு, வேட்கை ஆகியன அகஉணர்வு வயப்பட்டவை. சாத்தனாரது கருத்தியலின்படி இவற்றைச் செய்தவர் இல்லை. ஒருவரால் உண்டாக்கப்படாதவை. இவை வருவதுவும் போவதுவும் இல்லை. கெடாதன. தமக்குத்தாமே ஆகியவை என்பது அறவணர் கருத்தியல். எனினும் இவை குற்றம், வினை, பயன் தருவன. ஆதலால் இவை நிலையற்றவை. வறியவை-சூன்யமானவை, துன்பம் தருபவை என அவர் மதிப்பிட்டார். அப்போது தான் வீடுபேற்று ஞானம் உதிக்கும் (மணி. 30 : 29-31). இந்த நிதானங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் காரண-காரியமாய் பிரதீத்திய சமத்பாத முறையினில் மண்டலமாக நிலவுகின்றன.இவற்றையெல்லாம் அறவணர் தீ கநிகாயம், மகாவக்கம், மகாபதான சூத்திரம் தழுவி உரைத்தார். இந்த நிதானங்கள் தமக்குத் தாமே உண்டானவை. யாராலும் படைக்கப் படாதவை என்ற கருத்தியல் சாத்தனாரது பங்களிப் பாகும். இவை இகஉலகியலைச் சார்ந்தவையே. பொருளுலகிற்கு அப்பாலானவை அல்ல. இதிலிருந்தே விமுக்தி, மீட்சி, வீடுபேற்று நிலைக்கு உயரவேண்டும். ஆதலால் இந்த நிதானங்களை நிலையற்றவை, சூன்யமானவை, துன்பம் தருபவை களாக மதிப்பிட்டு அறவணர் விவரித்தார்.
மீட்சி
மீட்சி பொருட்டு பௌத்த மரபான நான்கு உண்மைகளை மேற்கொண்டார். 1. துக்கம், 2. துக்க உற்பத்தி, 3. துக்க நிவாரணம், 4. துக்க நிவாரண வழி என்பன இவை (தீ கநிகாயம், கூடதந்த சூத்திரம்). தொடர்ந்து சாத்தனார் நிதானங்களில் இருந்து பஞ்ச கந்தங்களைத் தேர்ந்து கொண்டார். 1. உருவம், 2. வேதனை, 3. குறிப்பு, 4. பாவனை, 5. விஞ்ஞானம் என்ற திரள்கள் உலகியலானவை. இவைகளில்தான் மனித வாழ்வு அமைந்து உள்ளது. இவைகளோடு வாழ்ந்து பௌத்த வழியினில் அநித்தம், துக்கம், அருவருப்பு (அசுசி), அநாத்மம் என்ற நான்கையும் உணரும்போது காமம் நீங்கும். மைத்திரி, கருணை, முதிதை உணர்ந்தால் வெகுளி நீங்கும். சுருளி, பாவனை, சிந்தனை, தரிசனை உணர மயக்கம் நீங்கும். இந்தக் கருத்தியல் விரிவாக்கம் சாத்தனாரது பங்களிப்பாகும். அநித்தம், துக்கம், அருவருப்பு (அசுசி), அநாத்மம் என்பன அசங்கர், வசுபந்து, நாகார்ஜுனர், திந்நாகர் ஆகியோரால் போற்றப்பட்டன. பெஷாவர் முதல் கரூர் வரை ஆரியசத்தை எனப் புகழ் பெற்றது.
அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த கிளமெண்ட் அங்குப் பௌத்த பிக்குகள் சொல்லக் கேட்டார். இதனை இங்கு விவரித்து உரைத்ததானது சாத்தனாரது மெய்யியல் ஞானத்தைப் புலப்படுத்துகின்றது. சாத்தனார் அநாத்மத்தை, உள்ளீடற்ற பொருளை விவரித்து துன்பம், சூன்யம் என்ற நிலைகளுக்கு முன்னேறினாலும் க்ஷணிக நிலையினை அனுசரிக்க வில்லை. இந்தக் கணபங்க வாதத்தினைத் தமது காப்பியத்தில் மேற்கொள்ளாதது அவரது பௌத்த அளவையியல் ஞானத்தைக் குறிப்பிடத் தக்க தனிப் பட்ட தகுதியில் நிறுத்துகிறது. க்ஷணிக நிலையைக் கலக்காத உலகியல் பொருள் மற்றும் அநாத்மா மெய்யியலையே மணிமேகலை பயின்றாள்.
நான்கு நெறிகள்
கி.பி. 450 - 600 காலப்பகுதியில் வஞ்சி நகரில் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலர் இருந்தனர். அவர்பால் சென்று அவர் அறிந்த பொருளை மற்றவர் கேட்பர், அவர்களிடம் உயிர்களையும், உருவமுடைய பொருள்களையும் படைப்போர் யார் என வினாவுவர். அவர்கள் உரைப்பர். வஞ்சி நகரம் சேரர் தலைநகராம் கருவூர் ஆகும். மேற்குக் கரையும், கிழக்குக் கரையும், இலங்கையும், வேங்கடம் கடந்த கங்கைப்புறமும் தொடர்புண்டிருந்த நகரம். மேற்குக் கரையும், கங்கைக் கரையும் மத்திய தரைக் கடல் பகுதிகளான எகிப்து, கிரேக்க - ரோமாபுரி, அந்தியோக், அரபுப் பகுதிகளுடன் தொடர்புற்று இருந்தது. இப்படியான ஒரு பரந்துபட்ட நெருங்கிய தொடர்புகள் கொண்ட தமிழகப் பகுதியில் கரூர் மையமாக இருந்தது. அப்படிப்பட்ட நகரில் கேள்வியில் உயர்ந்த ஞானியர் இருந்தனர். உருவமுடைய கடவுள் உயிர் அனைத்தையும் முறைமையில் படைத்தான் என்று ஒழுங்குமுறைமை பற்றிய கடவுள் நெறியினரும், உருவம் இல்லாத கடவுள் பிற உருவமுடைய உயிர்ப் பொருள்களையும், அஃறிணைப் பொருள்களையும் படைத்தான் என்று அருவக் கடவுள் நெறியினரும், வினையும், இவற்றின் பந்தங்களும் நீங்கிய பின், இந்த உலகத்து உச்சியில் இருப்பர் எனக் கூறும் நெறியினரும், பஞ்ச பூதங்களின் சேர்க் கையில் உயிர்கள், பொருள்கள் தோன்றும் என் போர்களும் அந்த நகரில் குறிப்பிடும்படியாக இருந்தனர் (10.92-102).
ஆறு சமய நெறியின என அல்லாமல் இந்த நான்கு நெறியினரும் இருந்தது விதந்து சுட்டுவதற்கு உரியவர். வேதம் சார்ந்தவர், வேதம் சாராதவர் என்ற வகையான பிரிவினராகச் சாத்தனார் வகுக்கவில்லை என்பது நோக்குதற் குரியது. மணிமேகலை பூதவாதியைச் சந்தித்தாள். அதோடு உருவமுடைய படைப்புக் கடவுள் நெறி கொண்ட சைவர், வைணவர் அப்போது பூத்து நின்றனர். எனினும், கூடவே பல கடவுள் முறைமை கொண்ட நான்மறை மரபாளரைக் கண்டாள். இவர்கள் படைப்புக் கடவுளைப் பேணவில்லை. வினை, பந்தம் நீக்கி, உலகத்து உச்சியில் பிறவா நிலையில் இருப்போர் கேவல ஞானம் பெற்ற சமண ராவர். மனித உயிரே / ஆன்மாவே அப்படியான பிறவா நிலை அடைகிறது. இது படைப்புக் கடவுள் ஆவதில்லை என்று உரைக்கும் படைப்புக் கடவுளை ஏற்காத சமணரைக் கூடச் சந்தித்துச் சமயத்திறம் அறிந்தாள். ஆனால் தனக்கென உருவம் இல்லாத கடவுளை முதல்வனாக வழிபடுவோரைக் கண்டு அவர்தம் சமயத்திறம் அறியவில்லை. இது வியப்பே!
உலகாயதத்தோடு
மணிமேகலை பூதவாதியைச் சந்தித்தாள். அதற்கு முன் அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவ வாதி, வேதவாதி, ஆசீவகவாதி ஆகியோரைச் சந்தித்து அவரது திறம் கேட்டாள். வேதவாதி முதலானோர் உரை தடுமாற்றம் உடையது என மதிப்பிட்டுக் கொண்டு விலகினாள். பிறகு சமணம், சாங்கியம், வைசேடிகம் உரைப்போரிடம் திறம் கேட்டுச் செல்கிறாள், மதிப்புரை எதுவும் உரைக்கவில்லை. சமணத்தைச் சாத்தனார் எங்கும் மறுக்கவில்லை. இவர்கள் அனைவரும் படைப்புக் கடவுளை ஏற்காத வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
.இவர்களை அடுத்து மணிமேகலை பூதவாதியைச் சந்தித்தாள். பூதவாதி, உலகாயதன், சாருவாகன் எனக் குறிக்கப்படும் அவர்கள் புறப்பொருள்களை, ஐந்து பூதங்களை ஏற்பவர் ஆவர். இந்தப் பஞ்ச பூதங்களே இறுதியான உண்மை எனவும் விளக்கு பவரும் கூட; இந்தப் பூதங்கள் ஒன்றாகக் கூடிய போது உயிர் தோன்றுவதற்கு உணர்வு உள்ள பூதங்களும், உடல் தோன்றுவதற்கு ஏதுவாக உணர்வு இல்லாத பூதங்களும் உள்ளன. இவைகளால் உடலும் உயிரும் சேர்ந்து நிற்கும் என மணிமேகலை ஆசிரியர் கூறுவது கவனித்தற்குரியது. ஒருபொருள் தன் போன்ற பொருளைத் தோற்றுவிக்கும். உயிர்ப்பொருள் தான் உயிர்ப்பொருளைத் தோற்றுவிக்கும்; உணர்வற்ற பொருளிலிருந்து உணர்வற்ற பொருளே தோன்றும் என்ற கருத்திற்கு ஏற்ப பூதவாதியின் கூற்றை அமைக்கிறார். உணர்வற்ற சடப்பொருள்கள் தம்முள் கூடிய போது உணர்வு தோன்றும் சடப்பொருள்களில் முன்பு இல்லாத உணர்வு கூட்டத்தால் பின்பு தோன்றும் பொருள்கள் கூடும்போது மாறுபட்டது தோன்றும் என்பது பூதவாதம். இதை மணிமேகலை கேட்டுவாளா அமைந்தாள்.ஆனாலும் எந்த ஒன்றின் உண்மையை அறியவும் நேரடிக்காட்சியே உறுதியான பிரமாணமாகும்; சிந்தனையில் கருதினாலும் அந்தக் கருத்து நேரடிக் காட்சியால் உறுதி செய்யப்பட வேண்டும்; சிந்தனைக் கருத்தே, அனுமானம் மட்டுமே அறிவு ஆகாது எனக் காட்சிப் பிரமாணத்தை மட்டும் உறுதி செய்து பூதவாதியர் / உலகாயதர் உரைப்பர்.
அனுமானம் என்பது அகவயமான பொதுக்கருத்தே அல்லாமல், குறிப்பாக உண்மை அன்று. எனவே உலகாயதர் அனுமானத்தை உண்மை அறிவிக்கும் பிரமாணமாக அனுசரிப்பது இல்லை. ஆனால் பௌத்தர் அனுசரிப்பர். ஏனெனில், அசங்கர், வசு பந்து, நாகார்ஜுனர், திந்நாகர், சாத்தனார் ஆகி யோர் “பொது” என்பதை ஏற்றுக் கொள்ளுவதில்லை. இரண்டு அல்லது பல பொருள்களுக் கிடையே பொது என எதுவும் இல்லை என்பதில் உறுதியாகத் திகழ்ந்தனர். அதோடு மட்டும் அல்லாமல் ஒரு பொருளின் தனிப்பட்ட தன்மையே அதனுடைய பொதுத்தன்மை எனவும் பௌத்த நெறியில் நிறுவினர். ஆகையால் புகையைக் கண்டு நெருப்பை அனுமான முறையியல் வழியே நிறுவுவதில் ஊக்கமுடன் நின்றனர். எனவே இதில் பயிற்சி பெற்ற மணி மேகலை இவரிடம் மட்டும் வாதிட்டாள். தான் முற்பிறப்பை அறிந்த வரலாற்றைக் கூறி அவரை நகைத்தாள். உடனே அந்த பூதவாதி தெய்வ மருளாலும், கனவு காண்பதாலும், மயக்கத்தாலும் மனம் திரிவுபடுவதால் ஏற்படும் மன உணர்வே அன்றி வேறு அன்று; மறுபிறப்பு உணர்ந்தது என்பது ஐயத்திற்குரியது என்று உரைத்தார்.
மனதால் உணர்ந்ததினாலேயே முற்பிறப்பு இருந்தது என்பது உண்மையாகாது என்பது பூதவாதியின்நிலை. மெய்யுணர்வு என்பது மணிமேகலையின் நிலை. மெய்யுணர்வு என்ற மனநிலைக் கருத்து நேரடிக் காட்சியால் புறநிலையில் உலகில் உறுதிப்பட வேண்டும் என்பது பூதவாதியின்நிலை. இந்த மெய்யுணர் விற்கு அனுமானமே பிரமாணமாகி உறுதி செய்கிறது என்பதே மணிமேகலையின் நிலை. இதனை நிறுவும் முகத்தான், அந்தப் பூதவாதியை நோக்கி “நின்னுடைய தந்தை, தாயரை அனுமானத்தால் அல்லாது எந்த வகையால் அறிந்தாய்?” என வினவினாள். இந்த நில உலகில் தாய் தந்தையாரை அனுமானப் பிரமாணத் தாலேயே அறிய இயலும் என்று வலியுறுத்தினாள்.இப்படி எடுத்துக்காட்டு கூறிய பின்னர், மெய்ப் பொருள்களை அனுமானமாகிய மெய்யுணர்வாலேயே உணர்தல் இயலும் என்பது பௌத்தம். இதற்கு மேல் இந்த உரையாடலைச் சாத்தனார் தொடரவில்லை.என்றாலும், மெய்ப்பொருளானது மெய்யுணர்வு இல்லாது உணர இயலாது. அனுமானம் என்பது ஐயத்திற்குரியது அன்று என மணிமேகலை தன் முனைப்புடன் பூதவாதியைத் தெருட்டுவதாக மட்டும் முடித்தார். அதாவது அனுமானம் என்பது பிரமாணம் / அளவை மட்டுமே அன்று. உண்மையை உறுதிப்படுத்தும் முறையியலும் ஆகும் என்பது சாத்தனாரது நிலை. இதனை உணர்ந்தவளாக மணிமேகலை உருவாகி விளங்கினாள்.
இப்படியான உரையாடல் நிகழ்ந்த அறிவுச் சூழலின் போது கி.பி.700-800 இல் நாளந்தா பல்கலைக் கழகத்தினில் வாழ்ந்த சாந்தரட்சிதர் என்ற பேராசிரி யரின் நூலுரையை அறிதல் உகந்தது ஆகும்.அவர் சமஸ்கிருத மொழியில் “தத்துவ சங்கிரகம்” என்ற நூலை எழுதினார். இந்த நூலின் நுட்பத்தைப் “பஞ்சிகை” என்ற உரைவிளக்கமாக அவருடைய மாணவர் கமலசீலர் விவரித்தார். 1864-ஆம் சூத்திரப் பாவிற்கு விளக்கம் தரும் போது கம்பலாஸ்வதரர் என்ற உலகாயத வித்தகர் கருத்தினை எடுத்து விவாதித் தார். இந்த வித்தகர் கருத்துப்படி அன்னையின் கருப்பையில் வளர்ச்சி நிலையினில் உள்ள சிசு வானது தன்னுணர்வு கொண்டு இருப்பதாக உரைத் திருந்தார். இது குறிப்பிடுவதற்கானது. (அந்தச் சிசுவினது உணர்வும், நினைவும் வளரும் நிலையில் இருந்தாலும், அவை மொழி வடிவில் நிலவ வாய்ப்புகள் இல்லை. ஆதலால் பிறந்தவுடன் சில காலத்திற்கு அது தானாகவே சொல்ல இயலாது. மொழி அறியும் போக்கினில் இயலும்.) இந்தக் கம்பலாஸ்வதரர் பூர்வீகமான உலகாயத நெறியாளர். புத்தர் காலத்தவர்.
கருவில் வளர்ந்த சிசுவானது முதிர்ந்து பிறப்பு எய்தும் போது அது தாயை முதலில் உணர்ந்திருந்தது. மொழி வடிவில் பிறர் அதனிடம் அதனுடைய தாயைச் சுட்டிக் காட்டுவது இரண்டாவது தகவலே. இந்தத் தகவலை முதன்மைப்படுத்தி மணிமேகலை அந்த பூதவாதியைத் தெருட்ட முயன்றாள்.அப்போது நியாய நெறியினரான வாத்ஸ்சாயனர் கூட பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும் என்ற உலகாயதரின் நிலையை மறுத்தார். அதே சமயம் அனுமானத்தையும் அனுசரித்தார். இவர் பூதங்களின் கூட்டத்தால் ஆன உடலில், உயிர் / உணர்வு தனியாக உள்ளது. இரண்டும் உண்மை. உடலின் ஆதாரம் இன்றியே உயிர் அறியும் அனு மானம் ஏற்புடையது என்றார் (சார்வாகம்/உலகா யதம்.86-93). அவருடன் உரையாடிய உலகாயதர் கரும்புச்சாறு, அரிசி, பிறபொருள்கள் சேரும்போது போதைத் தன்மைதரும் மது உண்டாகும். இந்தப் போதைத்தன்மை புதிய பண்பு, மது புதிய பொருள் என்றனர். மணிமேகலையில் வரும் பூதவாதியும் இக் கருத்துடையவரே. பொருள் சேரும் போது புதுப் பொருள் பிறக்கும். அறிவு, உணர்வு, கருத்து ஆகியன நேரடிக் காட்சியாலேயே உண்மை என்ற உறுதியான தகுதி பெறும் என்பன அவரது கருத்து.
அனுமான உணர்வு வலிமையாதல்
இதை மறுக்கும் முகத்தான் மணிமேகலை நூல் நின்றது. நேரடிக் காட்சியானது பிரத்தியட்சம் எனவும் படும். இதை விளக்கும்போது நேரடிக்காட்சி ஒரு பொருளின் பொருண்மையை மாத்திரம் காட்டுகிறது. இந்த உண்மையே புறத்தில் பொருளாக உள்ளது. இது மணிமேகலையின் கருத்தியல். சாத்தனாரின் உருவாக்கம் இது. இவர் காட்டும் சுட்டுணர்வு புலன் உணர்வுகளை முதலாகக் கொண்டு உண்டான மனப்படிமம். இது தர்மகீர்த்தியின் கருத்துரையும் ஆகும். இந்த மனப் படிமத்திற்குப் புறப்பொருள் அன்று ஆதாரம், புறப்பொருளுக்கு வேறாகக் கூட இருக்கலாம். புலன் உணர்வுகளை அடியாகக் கொண்டு உண்டான மனப்படிமம் அகவய உணர்வுகளால் உண்டாக்கப்பட்டது. இதுவே புறப்பொருளை உறுதி செய்கிறது. (பௌத்த தர்க்கம்-2. பக்.374). சாத்தனார் பொருள் இருப்பை ஏற்றார். அதன் தன்மைகளை ஏற்காது, உணர்வுகள் படைக்கும் உருவாக்கத்தை ஏற்றார். இதற்கு அனுமானம் உறுதிப் பணி ஆற்றியது. இப்போது சாத்தனார் நிலையில் அனுமானம் என்பது உய்த்து அறிதல் அன்று. பொருளின் அகவய உருவாக்கம். இந்த உருவாக்கப் பொருள் உண்மையானது. புறவயமான பொருள் இதற்கு ஒத்திசைவாக இருக்கலாம். அது அன்று நிலைமை; அகவயமான பொருளுக்கு ஏற்ப புறப் பொருள் விளக்கமுறுவதே சாத்தனார் வலியுறுத்திய கருத்தியல்.தமிழக நிலையில் “பொருள்-உணர்வு” வரலாற்றில் உணர்வு முதல்நிலை வகிக்கும் காட்சியே இது. பௌத்தம் அதைச் செய்தது. சாத்தனார் இங்கு அதைச் செய்தார். பௌத்தம் கங்கை முதல் மத்தியதரைக் கடல் வரை அப்போது ஊடாட்டம் புரிந்த வண்ணம் இருந்தது. கங்கை முதல் காஞ்சி வரை புரிந்த ஊடாட்டத்தில் இது நிகழ்ந்தது; இது வைதீகத் துறையில் பிரம்ம சூத்திரத்தில் நிகழ்ந்தது. ஆனால் அப்போது இங்கு அது வழக்கிற்கு வரவில்லை. எனினும் இங்குப் புறப்பொருளானது தனது முதன் மையையும், மேன்மையையும், உள்ளீட்டையும் தத்துவத்துறையில் உணர்வினிடம் ஒப்படைத்தது.
கி.மு.3-ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியம் எழுந்தபோது ஆரம்பித்த இந்த நிகழ்வு சாத்தனார் காலத்தில் இப்படியான நிலையை அடைந்தது.
ஆதார நூல்கள்
1. சார்வாகம்/உலகாயதம் தேவிபிரசாத்சட்டோபாத்யாயா
2. தீ கநிகாயம் பௌத்த நூல்
3. நீலகேசி பெ.வெ. சோமசுந்தரன் (உரை)
4. புத்ததர்க்கம் ஸ்டெச்ர் பாட்ஸ்கி
5. மணிமேகலை சீத்தலைச்சாத்தனார்