mahadevan 450கரூரை அடுத்த புகளூரில் ஆறுநாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டுகளைக் கண்டறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும், அதை ஒட்டி உலகத் தமிழ்க் கருத்தரங்குகளில் தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைப் பற்றி எழுந்த சுவையான விவாதங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் ஆகும்.  அவற்றுள் சில நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1962-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் நான் கைத்தறித் துறை இயக்குநர் ஆகப் பணியாற்றி வந்தேன்.  தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு நூற்பு ஆலை அமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தேன்.  அதே நேரத்தில்தான் ஓய்வு கிடைக்கும்பொழுது மலைச் சாரல்களிலும் சிறு குன்றுகளிலும் காணப் படும் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சேகரிக்கும் சொந்த முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன்.  எனக்கு அப்பொழுது இரண்டு ஆசைகள் இருந்தன. 

ஒன்று, பொருள் விளங்கவில்லை என்று அறிஞர்களால் அநேகமாகக் கைவிடப்பட்டிருந்த தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகளைச் சரிவர வாசிக்கும் முறையைக் கண்டறிய வேண்டும்; மற்றொன்று, சங்க காலத் தமிழ் மன்னர்களைப் பற்றிய எவ்விதமான புறச் சான்றுகளுமே தமிழகத்தில் கிடைக்கவில்லை என்ற குறை நீங்குமாறு அவர்களுடைய பெயர்களையோ மற்ற குறிப்புக்களையோ இக்கல்வெட்டுகளில்

காண வேண்டும் என்பனவாகும்.  இவ்விரு ஆசை களும் நிறைவேறியது எனக்குக் கிடைத்த பெரும் பேறுகள் என்றே கருதுகிறேன்.  தமிழ் நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகள் தமிழிலேயே எழுதப் பட்டவை என்றும், அவைகளைப் பொருள் சிறக்க வாசிக்க ஒரு முறை இருக்கிறது என்றும் நான் கண்டறிந்த ஆராய்ச்சிகளைப் பற்றி இங்குக் கூற இடமில்லை.  சங்க காலத் தமிழ் மன்னர்கள் முதன் முதலாகத் தமிழகக் கல்வெட்டுகளில் தோன்றிய கதையை மட்டும் இங்குக் கூறலாம் என்று நினைக்கிறேன்.

இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் ஆண்டுதோறும் வெளியிட்டு வந்த தென்னிந்தியக் கல்வெட்டுக்களைப் பற்றிய அறிக்கைகளில் 1927-28 ஆம் ஆண்டுகளின் தொகுதியில் புகளூர்க் கல்வெட்டு களைப் பற்றிய செய்திகள் முதன் முதலாகக் கிடைக்கின்றன.  இவ்வறிக்கையில் ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள ஒரு பிராம்மிக் கல்வெட்டு இருப்பதாகவும், அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதைச் சரிவரப் படிக்க முடியவில்லை என்றும், அதில் ஆதன் என்ற சொல் காணப்படுவதால் அக்கல்வெட்டு சேர மன்னர் களைப் பற்றியதாக இருக்கலாம் என்றும் கூறப் படுகிறது.  தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் பெரும் பாலும் மிகச் சுருக்கமாக ஒரே வரியில் மூன்று அல்லது நான்கு சொற்களைக் கொண்டு மட்டுமே பொறிக்கப்பட்டவை.  இந்நிலையில், நான்கு வரிகளாலான மிக நீளமான கல்வெட்டு அதிலும் சேர மன்னர்களைக் குறிக்கக் கூடிய ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் நாற்பது ஆண்டுகளாக வாசிக்கப்படாமல் இருந்து வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது.  என்றாவது ஒரு நாள் நேரில் போய்ப் பார்த்து இக்கல்வெட்டைத் தீர ஆராய வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.

அந்த நாளும் 1965-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று வந்தது.  அன்று கரூருக்கருகில் கட்டப் பட்டு வந்த கூட்டுறவு நூற்பாலையைப் பார்வையிடச் சென்றிருந்தேன்.  என் வழக்கப்படி கையுடன் அருகாமை யிலுள்ள பழங்கல்வெட்டுகளைப் பற்றிய குறிப்பு களையும் எடுத்துச் சென்றிருந்தேன்.  அவற்றுள் ஒரு குறிப்பு மேற்கூறிய ஆறுநாட்டான் குன்றிலுள்ள கல்வெட்டுகளைப் பற்றியது ஆகும்.  நூற்பு ஆலையில் என்னுடைய அலுவல்களை முடித்துக் கொண்டு மாலை நேரத்தில் நானும் மற்றும் சில நண்பர்களுமாகக் காரில் ஆறுநாட்டான் குன்றின் அடிவாரம் வரை சென்றோம்.  அதற்குமுன் எங்களில் எவரும் அச்சிற்றூருக்குப் போனது இல்லை;  மலையின் மீது ஏறக் கிழக்குப் பக்கத்திலிருந்து படிக்கட்டுகள் இருப்பது கூட எங்களுக்கு அப்பொழுது தெரியாது. 

பெரும்பாலும் தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுக்கள் மனித சஞ்சாரம் அற்ற முள் புதர்கள் நிறைந்த குன்றுகளில்தான் இருக்கின்றன! அதே நினைவில் எவரையும் வழி கேட்காது குன்றின் தென்புறம் இருக்கும் ஒரு கரடுமுரடான சரிவின் வழியாக வியர்க்க விறுவிறுக்க குன்றின் மீது ஏறி உச்சியின் தெற்குச் சாரலை அடைந்தோம்.  மேலைக் கோடியில் தென்முகமாக இருந்த குகையின் உயரமான வாயிலுக்கு மேலாக வெட்டப்பட்டிருந்த பிராம்மிக் கல்வெட்டு மஞ்சள் நிறமான மாலை வெய்யிலில் பளிச்சென்று தெரிந்தது. 

கல்வெட்டு மிகவும் தேய்ந்துபோய் அங்கொன்றும் இங்கொன்றும் ஆகச் சில எழுத்துக்கள் மட்டும்தான் தெரியும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடையத் தயாராகத்தான் வந்திருந்தேன்.  ஆனால் நான் கண்டது வேறு; மிகப் பெரிய எழுத்துக்களில் நான்கு நீண்ட வரிகளில் தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது அக்கல்வெட்டு. முதலிலும் முடிவிலும் ஓரிரு எழுத்துக்கள் நீங்கலாக ஏனைய எழுத்துக்களைப் படிப்பதும் எனக்குக் கடினமாகவே இல்லை.  இந்தக் கல்வெட்டையா நாற்பது ஆண்டுகளாகப் படிக்க முடியவில்லை என்று விட்டுவிட்டார்கள் என்ற வியப்பு அன்று மேலோங்கியது; இன்றும் தணியவில்லை.

கையுடன் எடுத்து வந்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து கல்வெட்டை எழுத்துக் கூட்டி வாசித்த வண்ணம் படியெடுக்கலானேன்.  முதல் வரியில் புதுமை எதுவும் இல்லை: யாற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த சமணத் துறவியான செங்காயபன் வசிக்கும் உறையுள் இது என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இது பெரும்பாலும் ஏனைய தமிழ்ப் பிராம்மிக் கல்வெட்டுகள் தரும் செய்திகள் போலவே யிருந்தது.  அடுத்த வரிக்குப் போனேன்:  இரண்டாவது வரியில் கோ என்ற முதல் சொல்லைக் கண்டவுடன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது; சங்க காலத் தமிழ் மன்னரின் கல்வெட்டுகள் இது என்பது உறுதியானது.  மேலும் படித்தேன் இரண்டாம் வரியை.

‘கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்’ என்ற சொற்களைப் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட வியப்பையும் மகிழ்ச்சியையும் சொல்லி மாளாது! ஆனாலும் தமிழிலும் வரலாற்றுத் துறையிலும் ஈடுபாடு உள்ள அன்பர்களுக்கு எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி வெள்ளத்தை விளக்க அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்.  அடுத்தடுத்து ‘பெருங் கடுங்கோன்’, ‘இளங்கடுங்கோ’, ‘இளங்கோ’ என்ற பெயர்களைப் படித்தபொழுது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.  சங்க நூல்களில் மட்டும் இதுவரை காணப்பட்ட பண்டையத் தமிழ் மன்னர்களின் பெயர்களைத் தமிழகத்தில் முதல் முறையாக ஒரு கல்வெட்டில் கண்டுவிட்ட ஆனந்தத்தில் நோட்டுப் புத்தகத்தை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூத்தாடினேன்.  என்னுடன் வந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்!

என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அக்கல்வெட்டின் முழு வாசகம் பின் வருமாறு:

“...அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய்

கோ ஆதன் செல்லிரும் பொறை மகன்

பெருங் கடுங்கோன் மகன் (இ)ளங்

கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல்”

இது கருவூரிலிருந்து ஆட்சி செய்த சேரல் இரும் பொறை மன்னர்கள் பொறித்தது: பதிற்றுப்பத்திலும், ஏனைய சில சங்க நூல்களிலும் பாடப்பெற்ற பழந்தமிழ் மன்னர்கள் இவர்கள்: இக்கல்வெட்டு ஏறத்தாழ கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது:  இச்செய்திகள் மட்டும் எனக்கு அப்பொழுதே விளக்கமாகத் தெரிந்தன. அதற்குள் இருட்டி விட்டதால் மற்ற கல்வெட்டுகளை இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம் என்று (கீழ்ப்புறம் இருந்த படிக்கட்டுகள் வழியாக!) இறங்கிக் கரூருக்குத் திரும்பினோம்.

நான் சென்னை வந்த அன்றே வரலாற்றுப் பேராசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரி அவர்களின் வீட்டுக்குச் சென்று நான் எடுத்துவந்த கல்வெட்டுப் படியைக் காட்டினேன்.  அவர் அப்பொழுது என்னிடம் கேட்ட கேள்வி இன்றும் நினைவில் இருக்கிறது.  “கையால் தானே எழுதியிருக்கிறீர்கள்; ஒழுங்காகப் படியெடுத்தீர்களா?” என்று கேட்டார்! ஆராய்ச்சி முறைகளில் அவருக்கு இருந்த அழுத்தத் தையும் உண்மைப் பற்றையும் படிப்பினைகளாகக் கொண்டேன் அன்று.  அதற்கு அடுத்த சில நாட் களிலேயே கரூரிலிருந்த நண்பர்களின் உதவியால் அந்தக் குகை வாயிலில் மூங்கிலால் சாரம் கட்டி அதன் மீது ஏறி நின்று பாறையின் மீது மெல்லிய தாட்களைப் பரப்பி கல்வெட்டை எழுத்தெழுத்தாகக் கவனமாகப் படியெடுக்க ஏற்பாடு செய்தேன் (அப்பொழுது எடுக்கப்பட்ட படியின் நகல்தான் இக்கட்டுரையுடன் தரப்பட்டுள்ளது).  அதற்குப் பிறகு ஒவ்வொரு முறையும் கரூருக்குச் செல்லும் பொழு தெல்லாம் புகளூருக்கும் ‘தலயாத்திரை’ சென்று

ஆறுநாட்டான் குன்றிலிருந்த எல்லா பிராம்மிக் கல்வெட்டுகளையும் ஒன்றொன்றாகப் படியெடுத்து முடித்தேன். அதே ஆண்டு மார்ச் மாதம் ஹிந்து தினத் தாளில் புகளூர்க் கல்வெட்டுகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பையும் வெளியிட்டேன்.

பிறகு ஒரு நாள் என் ஆராய்ச்சிக் குறிப்புக்களை எடுத்துக்கொண்டு கோவையில் அப்பொழுது வசித்து வந்த திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் அவர்களைக் காணச் சென்றேன்.  அய்யரவர்கள்தாம் தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்.  இக்கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய எழுத்துக்களான ழ, ள, ற, ன ஆகியவை வருவதை முதன் முதலாகச் சுட்டிக்காட்டி இக்கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் ஆனவை என்ற தவறான கருத்தை மறுத்து, இவை தமிழில் தான் எழுதப்பட்டவை என்று நிறுவிய சீரிய ஆராய்ச்சி யாளர் அய்யரவர்கள்.  வயது மிகவும் முதிர்ந்து, உடல் தளர்ந்து, கண் பார்வை சரியாக இல்லாத நிலையிலும் புகளூர்க் கல்வெட்டைப் பற்றிய செய்திகளை தினத் தாள்களில் படிக்கக் கேட்டுத் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தார் அவர்.  நான் அவர் முன் அமர்ந்தவுடன், ‘சேரல் இரும்பொறை மன்னர்களின் கல்வெட்டைப் பற்றி எழுதியவர் நீங்கள் தானா?’ என்று கேட்டார்.  நான் Ôஆம் என்றவுடன் தன் கை விரல்களால் என் முகத்தைத் தடவிப் பார்த்தார்; அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது; ‘நீங்கள் கொடுத்து வைத்தவர்!’ என்று ஆசி கூறினார்.  அப் பெரியவரின் கல்விப்பற்றையும் தூய உள்ளத்தையும் அன்பையும் நினைத்து நினைத்து என் உள்ளம் நெகிழ்கிறது.

நன்றி : ‘கல்வெட்டு' இதழ்